Tuesday 24 September 2013

வாழ்வின் முடிவுகள்


உயிராய் தீயின் உரிமைப் பொருளாய்
  உலகைக் காண வந்தோம்
பயிரும் மரமும் படருங் கொடியும்
  பார்த்தோம் நாமும் வளர்ந்தோம்
வெயிலும் மழையும்கண்டோம்  வாழ்வில்
  விருப்பங் கொண்டேநின்றோம்
மயிலின் நடமும் மானும் கண்டோம்
  மனதில் களிப்பே கொண்டோம்

கயிறும் எறியக் கதியும் முடியும்
  கவலை அற்றுச் சிரித்தோம்
பயிலும் காதல் கணைகள் வீசப்
  பலியென்றாகித் தொலைந்தோம்
வயிரம் அற்றே வழமை வாழ்வில்
  வழியென் றிருளில் நடந்தோம்
துயிலைக் கண்டோம் சுகமும் கொண்டோம்
  துடித்தோம் துயரில் உழன்றோம்

ஒயிலில் வடிவாள் உள்ளம்கண்டோன்
  உணர்வைப் பகிர்ந்தே உவன்றோம்
புயலைக் கண்டும் பொறுமை கொண்டோம்
  புதைந்தோம் ஓடித்தொலைந்தோம்
மயங்கிக் கிடந்தோம் மாயைதன்னில்
  மூழ்கித் தவித்தோம் எழுந்தும்
வியந்தோம் உறவும் விழிகள் மூட
  விழித்தோம் விரைவில் விட்டோம்

கயமை செய்வோர் களத்தில் கண்டார்
  காயம் மண்ணுல் கொண்டார்
பயத்தை விலையும்,கேட்டார் தம்மின்
  பாசம் கண்டே வியந்தோம்
தயக்கமின்றித்  தர்மம் கொல்லத்
  தனியே கிடந்தே அழுதோம்
தியங்கிக் கிடந்தோம் திரிந்தோம் வாழ்வின்
  திசைகள் முடிவைப் புரியோம்

அழிந்தோம் உலகில் இழிந்தோம்
  காலின் உதைகள் பட்டே நொந்தோம்
மொழிந்தோர் தமிழின் மூச்சென் றுணர்ந்தோம்
  மூச்சும் இழந்தோம் மெலிந்தோம்
அளந்தே நிலமும்  ஆண்டோர்குலமாம்
  ஆற்றல் தன்னை அழிக்க
குளமென்றோடும் கண்ணீர் நதியில்
   குளித்தும் ஏனோ குனிந்தோம்

அலையும் கடலும்  அணைக்கும்
  காற்றும் அதிவேகத்தில் உலகும்
தலையும் சுற்றி தளரா தோடும் 
  தருணம் எம்மைப் பற்றி
நிலையாய் கொண்ட நிகழ்வைக் கொண்டே
  நிதமும் நடந்தோம் நின்றோம்
இலையென் றொருநாள் இயக்கம் நின்றால்
  எங்கே போவோம் அறியோம்

அவளே தந்தாள் அவளே  கொண்டாள் 
  அதுதான் வரையும் வாழ்வில்
தவளும் வகையும் தாங்கக் கால்கள்
  தரையில் திரியும் நடையும்
பவளம் போலும் மேனிமிளிர்வும்
  பயிலுங் காதல் உணர்வும்
கவளஞ்சோறும் காணேல் பசியில்
  காயம் இழியும் நிலையும்

கலையும் அறிவும் கல்விச் சுகமும்
  கானம் பாடும்திறனும்
சிலைபோற் செல்வக் குழந்தை வரமும்
  சிகையில் வெள்ளை நிறமும்
அலையாய் திரையும் அழகுத்தோலும்
  அதன்பின்னாலே மரணம்,
விலையில் வாழ்வின் சூன்யம் ஆக்கும்
  விதமும் ஏனோ புரியேன்??

சிதம்பர சக்கரம்


              சிதம்பர சக்கரம்


சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன    
சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ
பக்தி கொள்ளும் கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்து விட்டதன்பாடோ
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிநான்கும் சுற்றிவந்தும்
வேண்டுமெங்கள் வாழ்வுகாணும் வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் போற்றிவாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ

உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா  அன்னை தம்பி தங்கை  ஆசையோடு கூடியாடி
ஆண்டுகளாய்க் கொண்ட வாழ்வு போய்விடலேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டிதீயர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது முண்டோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டமாக்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ

எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிரமா  தித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு  காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ

அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கலுக்கு நீர்குடிக்க  வேண்டியவர்க் கீதலன்றி
விட்டுமவர் துடிதுடிக்கப் பார்த்திடல் ஏனோ
அக்கம்பக்கம் யாரிருந்தும் ஆற்றுஞ் செயல் அலைகடலை
அத்துமீறீ வந்திடுமென் றானது கனவே
சுக்கு மிளகு திப்பிலியில் சுட்ட காய்சல்போக்கிடலாம்
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுவன்றோ

எத்தனை நாள் காத்திருந்து ஏடெழிதிப் பாட்டிசைத்து
என்னசுகம் கெட்டவர்க்கு சுற்றிடுமுலகே
அத்தனைக்கும் பக்கதாளம் அங்கிருந்து போடுதய்யா
ஆடுபலி கொள்ள முன்னர் ஆக்கிடுமிசையோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து  சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ 

---------------------

Sunday 15 September 2013

இன்னல் முடிவதெப்போ?

நீரோடிப் பூத்த விழி நெஞ்சோடு கொண்டதுயர்
நீங்காது காண்பதென்ன நித்தியமாமோ
ஊரோடி நிலம் பெயர்ந்தும் உறவோடு வாழ்பவரை
உலகோடி வென்றநிலை உண்மைகள் யாதோ
பாரோடி வானில் வரும் பட்டெரியும் தீயின்மழை
போடும்குறி வீழஉயிர் துடிதுடித்தாலும்                   
சேர்ந்தோடும் உலகின்விதி சென்றோடி உதவியதால்
சிரசோடு கொய்ததிலும் சேர்ந்தவராமோ 
        
பேரோடு பிறந்தகுலம் பெருமானம் கொண்டஇனம்
போராடிச் சாயவென விதிகொள்ள லாமோ
யாரோடு பழிசுமந்தோம் யார்வாழ்விற் குடிகெடுத்தோம்
ஊரோடு தீயைவைத்தும் எரித்ததும் ஏனோ?
தேரோடும் வீதியெங்கும் தமிழோடிக் கலந்தநிலை
தடைபோட்டும் ஒதுக்கிவைத்துத் தலைகொள்ளலாமோ
நேரோடி வளர்ந்ததெல்லாம் நிழலோடி மறைத்துவிட
நெஞ்சோடிப் பரந்தஇருள் வெளுப்பதுமென்றோ

மார்போடும் மடிமீதும் மலர்போலும் மழலைகளில்
மணியோசை நாதமெனக் குரல்சொலும்தமிழைச்
சீரோடும் ஒளிசிறந்த செழிப்போடும் வாழ்வமைந்த
செல்வவள நாடுதனைக் கொண்டிருந்தோரை
கூரோடும் வாளெடுத்து கொடுகோர ஈனச்செயல்
கொண்டுயிரும் மண்பறித்த கொடுமையைக்கேட்க
நீர் கங்கைகொண்டவனே நெய்கூந்தல் மாதவளின்
நேர்பங்கன் எம்நிலைத்தை நீவகுக்காயோ

ஆறோடு சேர்ந்த அலை அடித்தோடி யலைந்துகெடும்
ஆனலும் எங்கள்துயர் அந்தங் கொள்ளாதோ
பேறோடும் பெருமைகளும் பெற்றவராய் நாமிருந்தும்
பின்னிருந்து விதிமுடிக்கும் விளைவுகளேனோ
வீறோடு வீரமெனும் வெற்றிதனும் கண்டிருந்தோம்
வெறிகொண்ட இனமுமெழுந்து வீழ்த்திடலாமோ
ஏறோடி உயரஎழு இருந்தோடிப் படுத்தநிலம்
இரவோடு சுதந்திரதை எமக்களிக்காதோ

கனிகள் உண்போம்

மணம்வீசும் கனிதூங்கும் மரங்கள்தோறும்
மகிழ்வோடு பறவைகள் கனியைத் தேடும்
குணம்கொண்ட மனிதரோ விலங்கைத்தேடி
கொன்றதைத் தின்றிடக் கூடி ஓடும்
பிணம்மீது ஆசையை விட்டு நல்லோர்
பெரிதாம் நற் கனிமீதும் காய்கள் மீதும்
உணவென்று மனம் வைத்தால் உயர்வதோடும்
உடல் தானும் உணர்விலும் சிறப்பர் தாமே

தீங்கனிகள் தின்றிடத் தித்திப்போங்கும்
தினமுண்ண உடல்கொண்ட தீரம் சிறக்கும்
மாங்கனியோ முக்கனியில் முதலென்றாகும்
மாசுவையில் மேன்மையுற மகிழ்வைத் தாரும்
ஆங்கிவைகள் இனித்திருக்க இன்னாகொள்ளும்
அறிவிலதென் றொருசெயலைச் செய்யலாமோ
தீங்குகளும் எமைச்சேரும் தின்னத் தசைகள்
தீமை எழும் தெரிந்தும்பின் உண்ணலாமோ
 
வேல்கொண்ட முருகனோ நாவற்கனியும்
விதிமாற்றும் கனிநெல்லி அதியமானும்
கோல்கொண்ட அவ்வைக்கு ஈந்தார் இன்று
கொண்டெமக்கு யார்தருவர்? குழந்தைவேலன்
ஞாலமதை சுற்றிவந்து நானே வென்றேன்
தா கனியை எனவேண்டத் தமையன் கொண்டான்
காலமது மாறியதாம் உலகம் வேண்டாம்
கடைவீதி சுற்றிநற் கனியை உண்பீர்!

இலக்கியத் தலைவி - ஏகாந்தம்

வெள்ளி முளைத்ததடி வானில் - வரும்
வீசும் குளிரெடுத்த தென்றல்
உள்ளங் குலைக்குதடிதோழி - மனம்
ஊஞ்சல் என அலைவதோடி
எள்ளை நிகர்த்த சிறு அன்பும் - அவர்
எண்ணம் எடுத்த துண்டோ தோழி
மின்னல் அடித்த மழை முகிலும் - விட்டு
மேகம் வெளித்தென்ன போடி

அன்றோர் முழுநிலவின் ஊடே - ஒரு
ஆலமரத்தின் கிளைமேலே
கன்னம் உரசும் இரு குருவி - தனும்’
காதல் இசைபடித்த வேளை
பொன்னே உனைவிடுத்துப் போகேன் - இது
பொய்மைப் பிதற்றல் அல்ல உண்மை
நின்னைப் பிரியினுயிர் மாயும் - என
நெஞ்சம் பொய்யுரைத்துப் போனார்

கண்ணில் கண்கள்தனும் கலந்தே - இவள்
காணும் எழில் உலகின் விந்தை
பெண்மை விழிகள் கொண்டஅச்சம் - அது
பேசும் இளங் கவிதை முற்றம்
மண்ணின் மனித குலத்தூடே - இவள்
மங்கை திருமகளின் தங்கை
எண்ணம் கலந்து விட்டேனென்றான் - இன்று
என்னைப்புறம் விடுத்து நின்றான்

புன்னை மரநிழலும் வேகும் - அந்தப்
பேடைக் குயிலினிசை நோகும்
தென்னைக் கிளியிரண்டு பேசும் - எனை
திங்கள் தனை நிகர்த்தள் என்றும்
தன்னந்தனி உலவும் தென்றல் - அதன்
தங்கை எனமுறையும் கூறும்
சொன்னோர் விதம் அழகு தானோ - எந்தன்
சொந்தம் ஏகாந்த மாமோ

வெண்ணை வடித்த சிலை நானோ - அது
வெம்மை தனில் உருகும் மன்றோ
தன்னைப் பழிப்பர் செயல் கண்டும் - புவி
தாங்கிக் கிடத்தலென, நானும்
மன்னிக்கத் தோன்றுதடி தோழி - இதை
மானம் சிறுத்த மன்னன் காதில்
திண்ணமுரைத்து விடுதோழி - உடல்
தீயில் கருக முதல் தோழி!

எள்ளி நகைப்பர் தெரு வெங்கும் -ஊர்
இறைந்து கிடக்குதடி தோழி
கள்ள நகையும் இதழ் கொண்டே - எனை
காணின் புறமுரைக்கும் கூட்டம்
அள்ளி அனல் தெறிக்கும் கண்கள் - அந்த
அன்னை வழங்கவில்லைத் தோழி
உள்ளம் குமுற விழிமூடி  - நான்
ஓசைகெட அழுவதோடி

உன்னில் இட்ட தீ

இட்டதீ எரித்ததுவே ஏழைவர்க்கம்
இன்னுமா தீ கொண்டு எரித்தல் வேண்டும்
சுட்டதெது தாய்மண்ணில் செந்தமிழ் தேகம்
சொல்லரிய மானிடர்தம் மெய்கொள் தீயும்
பட்ட விதம் போதாதென் றெம்மைநாமே
பாரென்று எரித்துவிடில் எதிரிஎண்ணம்
விட்டதனைத் தொடர்வதாய் விளங்குமன்றோ
வீணாகத் தீயிலே எரியவேண்டாம்

கத்தவும் கேட்கவும் கைகள்கூட்டிக்
காய்ந்த மனப் பாறையிலே இரக்கநீரும்
சுத்தமென ஓடவழி செய்தே எங்கள்
சொல்லரிய சுதந்திரம் காணல்வேண்டும்
உத்தமரே வாருங்கள் உயிர்கள் வேண்டும்
ஒன்றல்லப் பலராக எரிந்தபோதும்
சத்தியமோ விழித்திடா தூங்கும் கண்கள்,
சத்துரு தான் மட்டுமே நகைத்து நிற்பான்

வித்தைகளைப் புரிந்திடவே வேகம்வேண்டும்
விதவிதமாய் நம்முயற்சி விளைச்சல் கூட்டிப்
பத்துடனே பலவழியும் முயன்றக் காலை
பங்காளிச் சண்டையெனப் பலகூறாக்கி
மத்தியிலே தலைமையிலா மாக்கள் போலும்
மனவெறுப்பு சண்டை என மாறிடாமல்
புத்திதனை விதவிதமாய் பாவித்தன்பில்
புதியதொரு விடுதலையின் பாதை காண்பீர்

நித்தம் மலர் பூவெனவே நிமிர்ந்து நில்லாய்
நீ வாழத் தந்த உடல் நின்னது மல்ல
செத்திடவும் உன்தேகம்  உனதென்றில்லை
சக்திஎனும் தீ பற்றக் காலம் உண்டு
புத்தொளியாய் கண்டவழி பயனைத்தாரும்
புதுவீரம் பொலிந்ததெனப் பலரும் கூடி
மத்தியிலே ஒருதலைவன் மட்டும்கொண்டு
மாணிக்க தீவினிலே மண்ணை மீட்போம்

சித்தமதும் கலங்கியதோ செல்வர் பூமி
சீரியதோர் வழிகண்டு நம்பால் அன்பை
புத்திகொண்டே என்னபடு பாடும்பட்டே
பொன் நாட்டை மூதாதைஇனமும் ஆண்ட
சத்தியத்தின் கதைஎண்ணிச் சரிந்திடாது
தன்வழியில் வீறுநடைகொள்ளல் வேண்டும்
நித்தியமாய் வாழவழி தேடும்போது
நிலைக்காமல் போவதிலே நன்மை உண்டோ

எழுத்தாணி அறியாத கவிதை

தேனூற்றும் தீந்தமிழில் தித்திக்கும் கவியூறும்
தொங்கிவீ   ழருவி யூற்றாய்
வானூற்றும் மழைபோலும் வந்தூற்றும் பாறையிடை
வளைந்தோடும் காற்றில் ஊறும்
பூநாற்றம் போலாகிப் பொழிலூறும் அலைபோலும்
புலமைகொள் கவிதை ஊறி
மாமாற்றம் பெற்றுமழை மடையுடைத்துப் பாயுமெனில்
மந்திரம் சக்திதேவி

வில்லூன்றி எய்யம்பு விரைவன்ன சொல்லாக்கி
வீழ்த்தி மனமெய்தல் காணும்
சொல்லூற்றிச் சுவையாக்கிச் சுந்தர மென்தமிழ் பூசிச்
சொர்க்கசுகம் இதுவேயென
மெல்லோடி மேகமிடை மிளிர்நிலவின் ஒளிகொண்டு
மேவியதிற் பொன்னும்பூசி
கல்லாத போதுமவை கண்நோக்கும் போதொளிரும்
காதிலவள் கூறுங்கால் காண்

எழுவதுமென் னிசையாகி இழைவ தவள்சொல் கீதம்
இயல்பிலெழும் குரலுமீந்தாள்
முழுதுமென நினைவோடு முடிவிலதென் றிணைபவளே
முன்காண லற்ற தெய்வம்
வழுவெதனும் உண்டோ இல் வரையுடனும் உண்டோயிவ்
வண்ணம்மது தெளியு மதிஇல்
கிழமனதில் கவிதைவளம் கொள்ளெனவும் ஆக்கியவள்’
குணம் போற்றின் கவிதை ஊறும்

தடையுமில சந்தமெழத் தரணியிலே நிறையொலிகள்
தாராளமாக வைத்தாள்
குடைவானில்மேக இடி குயிலோசை கழுதையழும்
குளத்தருகில் தவளைகூச்சல்
அடை மழையில் கூரையொலி அருவி மலை வீழுமிசை
எழில்வண்டின் ரீங்காரமாய்
அமிழ்தினிய சந்தமெழ  ஆக்கியவள் அவளேநம்
அன்புமனம் கொள்ளவருவாள்

தலைவன் ஏக்கம்


மொட்டு மலர்வதென் றிட்ட உன்புன்னகை
மொத்தம் வலிதரும் பூங்கணையோ
வட்ட விழித்துப்பொன் வண்ணநிலவிடை
வந்தயல் நிற்பது சொப்பனமோ
எட்டி அணைத்திட விட்டு நகர்ந்தனை
ஏதுமனங் கொண்ட கற்பனையோ
கொட்டும் குழவியென் றெட்டியும் கிள்ளிட
என் நிலைசுற்றிடும் பம்பரமோ

வெட்டும் விழிகளும் நட்ட நடுச்சுனை
வெள்ளியலை துடிப்பென்றிடவோ
பட்டுமலர்முகை பார்த்துக் குனிந்தன
பாவையுன் னோடிழை பொன்னழகோ
விட்டெனை நீமனை பஞ்சணைதூங்கிட
வேதனை கொண்டு நான்ஏங்குவதோ
தொட்டுவிட எண்ண தொல்லிடம் சேருவை
கிட்டவர வெட்கம் கொல்லுவதோ

சுட்டவெயிலெனப் பட்ட துயருடல்
செக்கச் சிவந்திட வான்மகளோ
விட்டுயர் வான்மதி வேண்டி யுலகதன்
வீதிவந் தாளென எண்ணிடவோ
முட்ட மனம்களிப் பெய்தல் கலயத்தில்
மொண்டு நிரப்பிய தண்புனலோ
இட்டவிதி இன்னும் ஏழைநீ வாடென
ஈவிரக்க மின்றிச் சொல்லுவதோ

கொட்டும் மழைவிழக் குட்டை குளமெங்கும்
கூடி வழிந்தோடும் வெள்ளமன்றோ
கிட்ட வந்தவளே இட்ட உணர்வென்ன
வட்டமதி தரை இறங்கியதோ
மொட்டை மலையிடை வீழ்நதியோ அது
முன்னெழுஞ் சாரல்த ருங்குளிரோ
கட்டியணைத்திடக் கையெழுமோ அதைத்
தட்டிவிட் டோடுவ தும்தகுமோ

பொட்டிடும் மாடத்ஹுப் பொற்கிளியே நிதம்
பூரிப் பெழும்நகை கிண்கிணியோ
முட்டி எனைவீழ்த்த இரட்டை புரவியில்
மூர்க் மெழும் பெண்மை வந்திடுமோ
பட்ட கணைமதன் விட்டவிழியம்பு
திட்டமிட்டே எனைத் தள்ளுவதோ
முட்டைவிழி வேலைக் கொண்டு இதயத்தில்
மோகினி நீவலி செய்திடவோ

முட்டும் காளையெனை மீள எழலின்றி
மென்மை எதிர்கொள்ள அஞ்சுகிறேன்
சட்டை செய்யாதுநீ போவதென்ன - என்னைச்
சஞ்சலத்தில் கைகள் கட்டுவதேன்
செட்டை கொண்ட பலபட்சியினம் விண்ணில்
வட்ட மடிப்பது போல இன்றோ
அட்ட திசையிலும் கொட்டி மலர்தூவ
ஆரணங்கே வலம் வந்திடுவோம்

காலமெனும் மருந்தே உதவும்

எழிலுற உலகும் இயற்கையென் றுறவும்
எமதிடை படைத்தவளே
அழிவுற உடலும் அதிலொரு உயிரும்
அகிலத்தி லாக்கி வைத்தாள்
பொழிலெழு அலையாய் புரள்நிரை வடிவில்
புதுப்புது அனுபவங்கள்
கழிவுறு மனமும் கவிமர முலவும்
கடையுணர் வுடனீந்தாள்

பழியுறப் பகையும் பருவத்தில் மெருகும்
பழமெனக் கனிமனமும்
வழிஎனப் புதர்கொள் வகைபல தடையும்
விதியென வாழ் வமைத்தாள்
குழிபல நடையும் கொளுமிருள் வழியில்
கிடவெனப் பலசமைத்தாள்
பிழியென இதயம் பிரளய வடிவில்
பெருந் துயருற அமைத்தாள்

வழிநடை நெடுகில் வதமிடும் வகையில்
வாழ்வியல் கொடுமையுடன்
தெளிவில இருளும் திசையறு பயணம்
தெரியென அறிவழித்தாள்
மொழிந்திவர் உறவும் முதிர்கனி மரமும்
முடிவினில் நிலம் விழுமாய்
அழிவுற வரமும் அவனியில் விதியாய்
ஆக்கியும் புதிர்விளைத்தாள்

மலையென திடமும் மனதினில் பெரிதும்
மகிழ்வினைத் தருமிவளே
வலையென அன்பும் வரும் பல உறவும்
வரைந்தொரு வாழ்வமைத்தாள்
நிலையெம தன்னை நெறிகொளும் தந்தை
நியதியென் றெமைக் காத்து
விலையறு வாழ்வை விதைத்தவள் பிரிவை
வேண்டுமென் றெமக் களித்தாள்

கலக்கமும் வேண்டாம் கடுந்துயர் போதும்
கடிதெனும் நிலையிதுதான்
உலகிடை எவரும் இலையென உணரும்
ஒரு பெருந்துயர் சமமே
விலகிடும் கவலை வெளியெனு மண்டம்
விளைத்தவள் காலமெனும்
அலகிடும் மருந்தை அளித்தனள், அருந்த
அதிமன துயரழியும்

பூவாக மலரச்செய்

நீயே சக்தி நிறைவா யெங்கும்
நினைவில் அன்பைத்தா
காயாய் அன்றிக் கனியா யினிமைக்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவித்தேன் துவளாமல்
வாயால் இன்பத் கவிதை சொல்லும்
வளமும் வரமும் தா

சேயாய் என்னைத் தினமும் காலை
தென்றல் போல்நீவி
பாயாய் படரும் பச்சைப் புல்மேல்
பனியின் குளிர்கொண்டு
தீயாய் சுடரோன் செம்மை, வானத்
திங்கள் செய் குளுமை
தா யார் எந்தன் தமிழின்கவிதை
தன்னைக் கண்கொண்டால்

தோயாதுன்பம் துய்த்தலின்றித்
திகழும் கவியின்பம்
தேயா தினிமை சேர்ந்தோர் பாகாய்
தித்திப் பெனவாக்காய்
ஓயா தூற்றும் அருவிக் சாரல்
அதனில் கீழ்நின்றே
தூயோர் இன்பம்கொள்ளல் போலும்
தொன்மை வளமும் தா

சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டே
நீயாய் எந்தன் நினைவில் வந்தே
நீந்தும் அலைதானும்
ஒயா துள்ளும் அழகும் கொண்டே
உவகைப் பெருக்கோடு
காயாதென்னைக் காப்பாய், இன்பக்
கவிதை  வளமும் தா

கூவாக் குயிலும் குதியா நதியும்
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தனிமைச் சுகமில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
இன்பத் சுனை யாக்கி
நீவா, கருணை நேரும் வாழ்வில்
நிதமும் கவிதை தா

சூழ்ச்சிகள்

தமிழென்தாயே நானுமுந்தன் மகனா - இன்று
தரணிமீது வாழுந் தகைமைஇலையா
அமுதமென்று கொண்டகாலம் வருமா- எம்மை
அடிப்பவர்க்கு அஞ்சிக் காலம்விடவா
எமது தேச இறைமை மீட்க நினைவா - உள்ளே
இதயம்பூட்டி இனிமை தேடும் வழியா
அமைதிகாணும் பாதை காண எழவா - எம்மை
அடக்குவோனின் கொடியைத் தூக்கி விழவா

எடுத்ததென்ன படுக்கபோடும் விதியா - நாம்
எழுந்து நிற்கக் குட்டுவீழும் பயமா
கொடுத்த தெல்லாம் கொடைகள் என்றுவிடவா - அதில்
குந்திபெற்ற மகனை முந்திக் கொள்ளவா
எடுப்பில் காணும் தோள்கள் கூனி கொளவா - நாம்
எதிரிகாலில் அடகுவைத்த பொருளா
தொடுவதென்ன துயர்கள் என்னும் இருளா - நாம்
தொட்டு வணங்கக் கடவுள் பேரில் இவனா

கெட்ட விலங்கு கையில் தூக்கும் வாளா - அது
கொன்றுபோடப் பார்த்து நிற்கும் உலகா
பட்டுத் துன்பத் துடிப்பைப் பார்க்கும் இகமா - இவர்
பார்வைக் கென்று கட்டும் துணியும் விடவா
பார்த்து பார்த்துக் களிக்கப் புதியதொடரா - நாம்
0பாவி தமிழர் பாடைகொள்ள அழகா
சேர்த்துப் படமும் செய்வன் கையில் பணமா - இனி
சேரும் தொழிலில் புதிய வர்த்தகத் துறையா

கூடிக் கொல்ல கேட்க ஆட்கள் இலையா - நாம்
கொண்ட யாக்கை துடிதுடித்து விழவா
மூடிவைத்த மந்திரம் போடும் உலகாம் - அதில்
மெல்ல தொடங்கும் வர்த்தக மாற்றுத் தொழிலாம்
ஆடிமுடித்தும் அனத்தும் அடங்கும் வேளை - ஓர்
அமைதியென்று போடும் வேடம் பொய்மை
போடி பெண்ணே புண்ய தம்ம சரணம் அதில்
போகும் பலிகள் தெரிந்தும் முற்றும் வழங்கும்

ஆக உந்தன் உயிருக்கான வாழ்வு - அது
அன்னை தேச பூமிமட்டும் எண்ணு
ஆக்கவென் றெழுந்து கத்து கூடு - உன்
ஆண்டதேசம் உனக்குச்சொந்தம் கொள்ளு
வேகவைத்த உலகம் வெள்ளிக்கூடு - அது
வீர ஆட்டை காவுகொள்முன் ஓடு
தேகமெங்கும் ஓடும் இரத்தச் சூடு - அதை
தேவை என்றாலோடிநீ போராடு

Thursday 12 September 2013

நான் ஆடும் ஆட்டம்


தில்லையிலாடும் திருபரனே  எந்தன்
தேகமு மாடுதய்யா - ஏது
எல்லை வரையின்றி ஆடுதய்யா அது
என்சுகம் கொல்லுதையா
தொல்லையென நானும் கோடிதர மென
தேவை உரைத்துவிட்டேன் -ஆயின்
வல்லவரைக் காக்கும் சொல்லுனது என்னை
வந்தருள் செய்திடாதா?

அள்ளும் வரை இன்பம் உள்ளதென்று இந்த
ஆடும் உலகினிலே - பலர்
உள்ளம்கழித்திடக் காணுகிறார் அதில்
உள்ளதுன் பார்வை யையா
கள்ளமில்லாத உன் பிள்ளையிவன் மேனி
காணுந் துயர் பெருத்து - நிதம்
துள்ளுவதேன் உந்தன் சுந்தரமென் நடம்
சொல்லித் தருமெண்ணமா

நள்ளிரவு பகல் பேதமின்றி எந்த
நாளும் கருக்கலிலும் -அந்த
தெள்ளென வானம் இருக்கையிலும் அந்த
திக்கில் ஒளிஎழவும்
வெள்ளமிடும் மழைதூறலிலும் மஞ்சள்
வெய்யில் எரிக்கையிலும் - இங்கு
அள்ளி வழங்கிடும் உன்னருளால் நானும்
ஆடிக்களித்து நின்றேன்

எத்தனை இன்பம் இப்பூமியிலே இந்தப்
பக்தனை அன்புடனே - நீயும்
தத்தத் தரிகிட தோம் எனவே எந்தத்
தாளமும் இல்லாமலே
வித்தைஒன்று இவன் மேனியிலே உள்ளே
வைத்தும் என்கோலம் செய்தாய் - நானும்
உத்தரித்தும் தினம் நின்னை தொழுதிவன்
உத்தமன் ஆடுகிறேன்

பூமி அதிர்ந்திட வில்லை ஐயா எந்தன்
பொன்னுடல் ஆடுதய்யா - அதில்
வா,மினுங்கும் உந்தன் மேனிவண்ணம்  தன்னும்
வாய்த்திடல் பொய்த்திடினும்
நீமிதித்தே சுழன்றாடி நின்றால் இங்கு
நிற்கும் புவி நடுங்கும் -ஆயின்
சாமி எனைமட்டும் ஆடவைத்தாய் எந்தன்
சந்தம் இனிமையென்றோ??
*********

Wednesday 11 September 2013

இழந்தவரின் எண்னங்களோடு..... (ஆறுதலுக்காக)

உயிராய் தீயின் உரிமைப் பொருளாய்
  உலகைக் காண வந்தோம்
பயிரும் மரமும் படருங் கொடியும்
  பார்த்தோம் நாமும் வளர்ந்தோம்
வெயிலும் மழையும்கண்டோம்  வாழ்வில்
  விருப்பங் கொண்டேநின்றோம்
மயிலின் நடமும் மானும் கண்டோம்
  மனதில் களிப்பே கொண்டோம்

கயிறும் எறியக் கதியும் முடியும்
  கவலை அற்றுச் சிரித்தோம்
பயிலும் காதல் கணைகள் வீசப்
  பலியென்றாகித் தொலைந்தோம்
வயிரம் அற்றே வழமை வாழ்வில்
  வழியென் றிருளில் நடந்தோம்
துயிலைக் கண்டோம் சுகமும் கொண்டோம்
  துடித்தோம் துயரில் உழன்றோம்

ஒயிலில் வடிவாள் உள்ளம்கண்டோன்
  உணர்வைப் பகிர்ந்தே உவன்றோம்
புயலைக் கண்டும் பொறுமை கொண்டோம்
  புதைந்தோம் ஓடித்தொலைந்தோம்
மயங்கிக் கிடந்தோம் மாயைதன்னில்
  மூழ்கித் தவித்தோம் எழுந்தும்
வியந்தோம் உறவும் விழிகள் மூட
  விழித்தோம் விரைவில் விட்டோம்

கயமை செய்வோர் களத்தில் கண்டார்
  காயம் மண்ணுல் கொண்டார்
பயத்தை விலையும்,கேட்டார் தம்மின்
  பாசம் கண்டே வியந்தோம்
தயக்கமின்றித்  தர்மம் கொல்லத்
  தனியே கிடந்தே அழுதோம்
தியங்கிக் கிடந்தோம் திரிந்தோம் வாழ்வின்
  திசைகள் முடிவைப் புரியோம்

அழிந்தோம் உலகில் இழிந்தோம்
  காலின் உதைகள் பட்டே நொந்தோம்
மொழிந்தோர் தமிழின் மூச்சென் றுணர்ந்தோம்
  மூச்சும் இழந்தோம் மெலிந்தோம்
அளந்தே நிலமும்  ஆண்டோர்குலமாம்
  ஆற்றல் தன்னை அழிக்க
குளமென்றோடும் கண்ணீர் நதியில்
   குளித்தும் ஏனோ குனிந்தோம்

அலையும் கடலும்  அணைக்கும்
  காற்றும் அதிவேகத்தில் உலகும்
தலையும் சுற்றி தளரா தோடும் 
  தருணம் எம்மைப் பற்றி
நிலையாய் கொண்ட நிகழ்வைக் கொண்டே
  நிதமும் நடந்தோம் நின்றோம்
இலையென் றொருநாள் இயக்கம் நின்றால்
  எங்கே போவோம் அறியோம்

அவளே தந்தாள் அவளே  கொண்டாள் 
  அதுதான் வரையும் வாழ்வில்
தவளும் வகையும் தாங்கக் கால்கள்
  தரையில் திரியும் நடையும்
பவளம் போலும் மேனிமிளிர்வும்
  பயிலுங் காதல் உணர்வும்
கவளஞ்சோறும் காணேல் பசியில்
  காயம் இழியும் நிலையும்

கலையும் அறிவும் கல்விச் சுகமும்
  கானம் பாடும்திறனும்
சிலைபோற் செல்வக் குழந்தை வரமும்
  சிகையில் வெள்ளை நிறமும்
அலையாய் திரையும் அழகுத்தோலும்
  அதன்பின்னாலே மரணம்,
விலையில் வாழ்வின் சூன்யம் ஆக்கும்
  விதமும் ஏனோ புரியேன்??

Tuesday 10 September 2013

தீயாகி நின்றாள்

தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும்
நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம்
மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச்
செய்கின்ற துன்பமதைத் செய்பவளே

மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக்
கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான்
நெய்கொண்ட  பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’
பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே

செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில்
போய்ங் கென்று வெடித்ததிலோ தூசானேன் - நீ
எய்கின்ற பூங்கணைகள் என்நஞ்சு பூசியதோ
நைய்கின்ற தாய் நெஞ்சு நலிவதுமேன்

துய்க்கின்ற வேதனைகள் தோள்மீது பூமாலை
வைக்கின்ற தீயாக வாட்டுவதேன் - ஓர்
பொய்கைக்குள் நீர்தானும் புனலாடப்போகையிலே
பூங்காற்றும் சேர்ந்தனலை கொட்டுவதேன்

பொய்க்குண்டோ வாழ்வுமுன் மெய்மீது பொய்வார்த்தால்
தைக்கொண்ட நாளில்நெற் கழனியிடை - எவர்
கைக்கொண்டு வைத்தமுளை கதிரானால் தலைகூனும்
மைக்கொண்ட  விழிக்கும்நான் மயங்குவனோ

தெய்த் தக்க என்றாடும் சின்னவளே சொல்லக்கேள்
எய்தக்க எத்தனையோ இருந்தாலும் - இது
தொய்தக்க வாழ்வல்ல தொலைதூரம் நீநின்றும்
உய்த்தோங்கப் பிறந்தோமே உணர்வாய்நீ