Friday 10 January 2014

துக்கமில்லை ஆனந்தம்

மரணமென்னும் முடிவைநோக்கி
. மனித வாழ்வு அடையும் போது
. மனங் கலங்கி அழுதுகொள்வதேன்
கரணம்போடும் வாழ்வில் என்றும்
.  கடைசிஎன்ற முடிவும் உண்டு
.  கருதுமெண்ணம் மறந்து போவதேன்
குரலுங் கொண்டு கதறி யோங்கிக்
. குத்தி மார்பில் ஓலமிட்டும்
. கொண்ட வாழ்வைத் தெய்வம் நல்குமோ
பரவுமாசை நெஞ்சில் கொண்டு
.  பாய் படுத்த மேனி கண்டு
.  பயனுமின்றிக் குரல் கடுப்பதோ
 

வரவும் பின்னர் செலவுமென்று
.  வானெழுந்த தெய்வம் நின்று
.  வகையறிந்து செய்த வாழ்வைய்யா
தரவுந் தந்த பின்பறித்துத்
.  தரையில் போட்டும் உடலழித்து
.  தாயைத் தாரம் தம்பி தங்கையை
பரவ நெஞ்சில் பாசமென்னும்
.  பரிவுகொள்ள மாயம் செய்து
.  பிரிவு சோகம் தீபொசுக்கிட
புரவும் மேகம் தொலையும் வானில்
.  போய்ப் பறந்து விண்ணிலேகும்
.  போலும் வாழ்வை கொள்ளவிட்டவள்

கரமும் இரண்டு காலுமீந்து
.  காதல்கொண்டு வாழ்ந்து பின்னர்
.  கடைவழிக்கு உயர வாருங்கள்
துரவும் மேடுபள்ளமென்று
,  தொடரும் துன்பம் பலபடைத்து
,  தோல்வி யென்று வாழ்வைக் கண்டபின்
உரசும் தென்றல் உள்ள வானில்
,  உலவுமேகம் தொட்டுப் பின்னர்
.  உதயமாகும் ஒளியைத் தாண்டியும்
வரமுமீந்து  வழியுமாக்கி
.  வாழ்வு மென்று மொழியும்பேசி
.  வதைபட்டான நிலையில் மீட்பவள்

அரண்டு மாயை  அழகுஎன்றும்
. அவனிமீது அறிவுமற்ற
. இருளின் போதை எம்மை வாட்டவும்
பரமஞான ஏழைகண்டு
.  பரிவுகொண்டு  இன்னல்நீங்க
. பயணமாகு என்று சொன்னவள்
மரமுமாக்கி மலையுமாக்கி
.  மதியினோடு அனல்செறிந்த
.  மழையின்மேகம் மூடும் கதிரையும்
சிரமமின்றிச் செய்த சக்தி
.  சேரும் ஆன்மபந்தம் கண்டு
.  சிறந்ததென்று  சிந்துபுன்னகை
.
**********************

தமிழ் இனிக்கவில்லையே

        
செந்தமிழ் தேனும் இனிக்கவில்லை - மனம்
தீயில் எரிகையிலே - நல்ல
சுந்தரமோ தமிழ் தோன்றவில்லை உளம்
சுட்டுப் பொசுங்கையிலே
சந்தத்துடன் கவி சேரவில்லை உயிர்
செத்துப் பிழைக்கையிலே -  ஒரு
சிந்தனைக்குள் விடை காணவில்லை தமிழ்
சித்தம் உறங்கிடவே

நந்தவனம் மலர் தென்றல்தொடும் இந்த
நாளில் அதுஇல்லையே -இனி
எந்தமணம் இந்த தென்றல்தரும்  உடல்
சிந்தும்குருதியிலே
அந்திவரும் .இருள் கண்டதென்ன ஒளி
ஆதவன் முன்னெழவே --அது
முந்திவிழுந் தோடிக்கண் மறையும் எங்கள்
மண்ணின் இருள் இல்லையே

சிந்துமெழில் எங்கள் நங்கையர் கொண்டபூம்
பந்தெறிந் தாடலிலே - அவர்
சந்தணவாசமும் கொண்டலையும் தென்றல்
சுற்றிப்  பரந்திடுமே
இந்தநிலைகொண்ட மங்கையரோ பகை
கொண்டவர் இம்சையினால் - நிதம்
சிந்தும் குருதியில் தோய்ந்துடலம் மண்ணில்
சீர்கெடச் சாவதென்ன       

தந்தையன்னை சொந்தங் கொண்டநிலம்  -இன்று
தங்களின் சொந்தமென்றும் - அங்கு
வந்தவர் இல்ல முடைத் தழித்து எம்மை
வீதியில் தள்ளிவிட
விந்தை உலகத்தில் வீறழிந்து- வெட்கம்
வீட்டினுள் தூங்குவதோ  -இனி
சந்தை கடைத்தெரு சத்திரந்தான் எங்கள்
சொந்தங்கள் தூங்கிடவோ

அந்திவரக் கதிர் ஆழிவிழ மணி
ஓசை விண்ணோடிஎழ -பல
சுந்தர மாதர் குழுமிவர நல்ல
சோதிகொண்டே ஒளிரும்
சந்தன மாமலர் சூடியவர் இறை
சங்கரன் கைதொழுதே -அவர்
சிந்தை குளிர்ந்திடச் சொந்தமொடு இன்பம்
சொல்லிக் களித்தெல்லாம்

நொந்துமனம் துயர் கொள்வெனக் கோவில்
நெய்விளக் கேற்றிவைத்து  - சொல்லும்
மந்திரம் மாலை மணி யொலித்தே அவர்
மாமறை யோதுகையில் 
நிந்தை புரிந்தனை என்றுவந்தே இவர்
நீளவெண் ஆடைபற்றி - புல்லர்
அந்தோ பரிகசித் தாடுகிறார் இன்னும்
ஆகட்டும் என்றிடவோ

வந்தவர் வாழவும் கொன்றொழித்தே யெங்கள்
வாய்க்குள் அரிசியிட்டு  =-இடர்
தந்தவர் கொண்ட உயிர்பறித்தும் எம்மைத்
தள்ளிக் குழியிலிட்டு 
சொந்த சுதந்திரம் வேண்டியவர் தம்மைச்
சுற்றியும் வேலியிட்டு -இவர்
மந்தை யினமென்று ஆக்கிடவும் மதி
கெட்டுக் கிடப்பதுவோ

12/3/13
me

ஆயிர மாயிரம் அழுத விழிகளைஅரவணைக்கத் தவறிய உலகம்

(தலைப்புக்கு கவிதை)
தெளிந்தவானில் தோன்றும் திங்கள்
தேயும் பின் முழுதாகும்
நெளிந்த நீரலை ஓடும் கடலில் 
நெகிழும் பின் எழும் ஓங்கும்
ஒளிர்ந்து வானடி வீழ் கதிரோனும்
உதயம் காணும் ஏற்றம்
விழுந்த எமதினம் எழுந்து விடாது
வதைக்கும் உலகின் போக்கும்

தணிந்த வருடிய தென்றல் தானொரு
தருணம் கடும் புயலாகும்
பணிந்து மலையிடை தவழும் மேகம் 
பட படவென இடிமின்னும்
அணிந்து முடியொடு அரசை ஆண்டோம்
அந்நியன் வந்தே  கொல்ல
துணிந்த தமிழனை தொட்டழி என்று
துட்டரை போற்றிய உலகம்

வெளுத்த முகமுடன் விழிநீர் ஒழுக
வாழ்வை தாவெனக் கேட்டோம்
கழுத்தில் வெட்டியும் குழிகளை மூட க்
கதறித்  துடித்தோம் தேகம்
பழுத்த கனிகளும் பிஞ்சாய் காயாய்
பாலர் சிறுவர் பெண்கள்
விழுத்தி வதைப்பதில் வெந்துயிர் கொல்ல
வேடிக்கை  பார்க்கும் உலகம்

அழுதோம் ஆயிரம் ஆயிரமாக
அலைந்தோம் கதறிக்கேட்டோம்
எழுதும் விதிகளைக் கொள்ளும் உலகம்
எம்மினம் கொல்லும்வேளை
நழுவியதேன் அரவணைக்கக் காத்தோம்
அணையா தணையும் என்றார்
எழுமெம் தமிழ்காண் ஒருநாள்விடியும்
இயற்கை தமிழே வெல்லும்

***********************

நம்பிக்கை ஒளி

கொட்டுங்கள் வட்ட முரசெடுத்து வந்து
கூடிநின் றாடுங்கடி ஒரு
திட்டமிருக்குது நெஞ்சுக்குள்ளே அதை
தட்டிப் பெருக்குங்கடி
தெட்டத் தெளிவெனச்  சேதி சொல்லும் அதோ
சிட்டுக் குருவியடி அது
நட்டமரத்தின் கிளையிருந்து சொல்லும்
நல்லுரை கேளுங்கடி

பட்ட துயரெல்லாம் போய்விடவே - நல்ல
பாதை திறக்குமடி - அதில்
சட்டென தீரமும் கொண்டெழுமாம் அந்தச்
சூரியன் தோன்றுமடி - இனி
தொட்ட தெல்லாம், எழிற் பொன்னிலங்க ஒரு
தோற்றம் பிறக்குமடி - துயர்
விட்டுவிடு துன்பம் நீங்கிவிடும், அந்த
வேளை வருகுதடி

சுட்டவர்  தொட்டவர்  தோற்றுவிட எங்கும்
சோதி பெருகுமடி - உயர்
வட்டப்பரிதியின் வெம்மையிலே பனி
விட்டுக் கரையுமடி - அந்தச்
சட்டம் திகைத்திடச் சங்கதியும் ஒன்று
சுற்றிப் பெருகுமடி - கையும்
எட்டத் தொலைவெனும் ஏற்றத்திலே கொடி
என்றும் பறக்குமடி

மொட்டு மலர்வதென் றின்பமுடன்மனம்
முற்றும் திகழுமடி அது
உற்ற சுதந்திரம் கண்டதனால் அன்பு
உள்ளம் சிரிக்குமடி
பொட்டும் நிலைத்திட பெண்மணிகள் கையில்
பூகொண் டிருப்பரடி - சிறு
குட்டி குழந்தைகள் தன்மடியில் கொள்ள
கூடிக் களிப்பாரடி

தட்டி முரசொலி சங் கொலிக்கத் தமிழ்த்
தேசம் பிறக்குமடி - அதில்
கட்டுவது கைகள் என்பதல்ல உள்ளம்
காணும்நல் லன்பையடி -இனி
வெட்டுவதும் தேகக் கட்டுமல்ல விழி
வெட்டி குலவலடி - அங்கு
கொட்டிக் குவிப்பது இரத்தமல்ல தமிழ்
கொண்ட இறைமையடி

பரிமாணம்

மாறும் உலகில் மாற்றம் ஒன்றே
மாறாதென்றே சொன்னார்
வேறும்பலவும் விதியும் மாறும்
விளைவை வாழ்வில் கண்டோம்
கூறும் பலவாய்த் தேகம் கொல்லக் 
கூடும் கூட்டம்  மாறாச்
சேறும் மிடையே நெளியும் புழுவின்
சிந்தை கொள்ளக் கண்டோம்

ஆறும் கடலும் அதிலேயோடும்
அலைகள் மாறக் காணோம்
நாறும் பூவும் நல்லோர் வாசம்
நாளும் கண்டோம் கொண்டோம்
சீறும் புலியும் சிங்கம் தவளை
சிறிதோர் சிட்டுக்குருவி
தேறும் மெலியும் திங்கள் செயலும்
திகழத் தினமும் கண்டோம்
      

ஏறும் போலும் நடைகொள் தமிழர்
இரங்கும் மாற்றம் கண்டோம்
நீறும் பூத்தே நிழலை விட்டே
.நெருப்பி லழியும் தேகம்
சாறும் புளியக், கனியாய் வாழ்வில்
சதையில் மோகம்கொண்டே
கூறும் போடும் மிருகக் கூட்டம்
கொடிதே மாறக் காணோம்

வீறும் கொண்டே வளையா நெஞ்சும்
விருந்தென் றெமனைச்சேர
தாறும் மாறும் சொரியும் குண்டின்
தாக்கம் அழியக் கண்டோம்
தூறும் மழையில் ஓடும்நதியும்
திரைக் கொள்கடலும் இந்நாள்
தோறும் ஓவென் றலறும் சத்தம்
தோன்றும் மாற்றம் காணோம்

ஆயின் உலகில் மாற்றம் ஒன்றே
மாறா தென்னும் போதில்
தாயின் அன்பும் தாரும் வாழ்வின்
தனமும் பொருளும் காணும்
நோயின் வகையும் நிற்கும் உயரம்
நீதி நேர்மை எண்ணம்
போயின் பத்தை தேடும், ஆசை
புலனும் மாறக் கண்டோம்

காயும் பழமாய்க் கனியக் கண்டோம்
காலத்தின் விஞ்ஞானம்
ஆய்வும் பயனாய் ஆக்கும் பொருளும்
அதனில் மாற்றம் கண்டோம்
தீயும் ஒளியும் போலும் அறிவில்
தெரியும் புதுமை வழியில்
ஒயும் வகையென்றில்லா கவிதை
இன்னோர் வளம்கொண்டலென்

புதுமை என்றார் பேச்சை வானில்
போகும் அலையென்றாக்கி
பதுமை போலும் நிழல்கள் ;ஆடப்
படமென் றுயிர்போற் செய்தார்
மதுமை விழிகள் கொண்டோர் ஆளும்
மாற்றம் உலகில் செய்தார்
இது மைகொண்டே எழுதும்கவிதை
இன்னோர் வகை கொண்டாலென்?