Thursday 27 February 2014

காலம் கடந்த ஞானம்


மௌனம் அதிசுக ராகம் அதுவொரு
மந்திரம் மனதின்சு கந்தம்
மௌனம் உள்மதி ரூபம் இறையின்சன்
மானம் தூயநல் மார்க்கம்
மௌனம் அகமிடை தியானம் இருளது
மாற்றும் இறைமையைக் கூட்டும்
மௌனம் ஆயுத மாகும் நலிவுறு
மனதை தைரிய மேற்றும்

அமைதி அலைகடல் தூக்கம் அகமிடை
ஆற்றல் தனைதினம் தோற்றும்
அமைதி அநுபவ இன்பம் தனிமையின்
ஆக்கம் புதுசுகம் சேர்க்கும்
அமைதி அழகினைக் கூட்டும் அதிபகை
ஓட்டும் உயர் சுகம் காட்டும்
அமைதி பெருகிட ஆள்மை யுடன்மன
அறியா மையின்முடி வாகும்

நிசப்தம்  நினைவெழ நீசம் மடிந்திடும்
நீக்கும் கறை சுவை சேர்க்கும்
நிசப்தம் நினைவுடல் போர்க்கும் நிம்மதி
நிகழ்வில் நேர்கொளும் பார்வை
நிசப்தம் ஊற்றிடும் தேனை உலகினில்
நிலவும் இனிமையை காக்கும்
நிசப்தம் காற்றின்சங் கீதம் இசைப்பதும்
நிகரில் பிரபஞ்ச தோற்றம்

ஞானம் பெரிதெனக் காணும் உளமதும்
ஞாலம் மிடை உயர்வாகும்
ஞானம் அறிவிலை யாகும் மனதெழு
ரோகம் போக்குங் கஷாயம்
ஞானம் இதுவரை காணா துயருடை
நீளும் வானெழு மேகம்
யானும் இருந்தனன் போதும் உலகினை
ஆளும் தீயெனைக் காப்பாய் !
*****************

கற்பனை ரதமேறி

கலைவான முகிலேறிக் காற்றூதும் வெளிதாவக்
கனவுரதம் ஒன்றுதர வேண்டும்
நிலையற்ற புவிபோலும் நீலவான்வெளி செல்லும்
நெடும்பயண மின்றுகொள வேண்டும்
தொலைவானில் வண்ணமெழும் தீப்புயலின் சூடுதனில்
தொட்டபடி தூரப் விழுந்தேகும்
இலையென்வி நோதமெழும் இன்பங்கள் அதிசயங்கள்
எழில்காணும் ஓருலவு வேண்டும்

ஒரு பயணம் புதுமையுடன் ஒருகோடி ஒளியாண்டு
உறைபெரு விண்ணூ டடைய வேண்டும்.
கருவானில் எழுமதியின் காணுமொளி பால்நிலவின்
குளுமையுடன் சூரியன்கள் தோன்றும்
பெருமலர்கள் ஆளுயரம் பொலியும்படி உயர்வுகொளப்
புதுஅருவி தேன்வழிந்து வீழ
இருசிறகு இணைந்ததெனும் உணர்வுஎழக் கரமசைய
இலகுவென வான் மிதக்க வேண்டும்


மலர்களொளி வீச அதில் மத்தாப்பின் வண்ணவகை
மணித்துகள்க ளாய்த் தெறிக்க வேண்டும்
கலகமின்றிக் கனிமொழியும் காணுருவம் ஒளியெனவும்
கதைபேசிக் குலவும் வகைவேண்டும்
சில நதிகள் வாசமெழச் சென்றதனில் நீர்பருகச்
சிலுசிலெனக் குளுமைகொளு முணர்வில்
தொலைவில்விண் மீதுபறந் துலவியெரி தீயருகில்
தொட்டவிதமாய்த் திரும்பவேண்டும்

தெருவெங்கும் சிறுரதங்கள் திருமகளி னழகுடனும்
திகழுமெழிற் தேவதைஉட் செல்ல
வருமிளைய தென்றலதில் வண்ணநிறப் புகையெழுந்து
விழிகளின்முன் விளையாடவேண்டும்
பருகிடவெண்மலர்த் தேனும் பாவெழுதும் போதைதனும்
பெருகுவெனக் கவிநூறு தந்து
உருகி மனம் வழிந்தோட உணர்வுதனில் தீபரவ
உயிர்கள் மகிழ் வடையுந் தமிழ் வேண்டும்

நெளிவுகளும், வளைவுகளும் நீரோடை மலைகளென
நீந்திவிண் வெளிகாண வேண்டும்
பொழியமுதத் தூறலெனப் புதுவிளக்கினொளி வெள்ளம்
புகுந்தேகும் விளையாட்டு வேண்டும்
மொழியெதுவும் பிறிதின்றி மதுவென்சுவைத் தமிழுடனே
மனிதரெனும் பதுமைகளின் உலகம்
ஒளியழகுத் திருநாடும் உணர்வதனில் திறனோடும்
ஒருமையுட னாயிருக்க வேண்டும்

கருவயலில் உறைகுளிரில் கண்கவரும் தோரணங்கள்
காணுமொரு எழிற்கோலம் வேண்டும்
பெருகும் செறிகயமையுடன் நெறிதவறும் நிகழ்வுமின்றிப்
பசுமையுணர் வானநிலை வேண்டும்
உருகி மனம் வழிந்தோட உயரிசையில் நடமாடும்
உருவங்கள் உலவிவரவேண்டும்
தருணமதில் காற்றோடு தலைநிமிர்ந்து படபடத்து
தமிழன்கொடி உயர்பறக்கவேண்டும்

நீலமலை உயர்ந்தநெடு முச்சிதனில் நின்றண்டம்
நிலைமை தனைப் பார்வையிட வேண்டும்
கோலமிடு வாசலெழிற் கோளங்கள் சுற்றுமெழில்
குழிவானை  விழிகாண வேண்டும்
வாலெரியும் நட்சத்திரம் வளர்பிறையும் ஒளிவீச்சும்
வடிவுற்ற அசைவும் விழிகாண
காலம்சில நாள்களென காணுமெழில் மனமகிழ்ந்து
காயும் இந்த பூமிவரவேண்டும்

கொட்டு முரசே!

பூமியில் யாவரும் ஒன்றென வாழ்வினைப்
பெற்றனர் கொட்டுமுரசே -இதில்
நாமதில் மூத்தவர் நம்மி லிளையவர்
பேதமில் கொட்டுமுரசே
வா மிதமாய் நமை எண்ணிடும் தீமைகள்
வெந்தன கொட்டுமுரசே இங்கு
நாமினி யாவரும் ஒன்றெனப் பாடியும்
ஆடுவர் கொட்டுமுரசே

தீமைஅகன்றிட தீங்கெழும் எண்ணங்கள்
தீய்ந்தன கொட்டுமுரசே -இனி
வாய்மை யுடைத்ததோர் வாழ்வு செழித்துமே
வாழென்று கொட்டுமுரசே
தேய்மனம் யாவிலும் தென்றல் வருடிட
தேறென கொட்டுமுரசே - அந்தத்
தெய்வமொன்றே பெரிதென்று முழங்கிட
தோமென்று கொட்டுமுரசே

சொல் தமிழானது சூரியனொத்தது
சொல்லி முழங்கு முரசே - இனி
வெல்லும் தமிழ் நல்ல வீரமெடுத்திடும்
வீறுடன் கொட்டுமுரசே
நல்ல மனங்களில் அன்பு உணர்வெழும்
நாளென்று கொட்டுமுரசே - இனி
நானல்ல நாமெனும் எண்ணம் பரவுதல்
நிச்சயம் கொட்டு முரசே

தேமதுரத் தமிழ்நாதம் பரவிடச்
செய்யெனக்கொட்டு முரசே நல்ல
மாமதயானை யின் தீரமெடுவென
மேவிஎழும் சத்தம்கொண்டே
பூமியதில் வெகு தொன்மொழியானது
பொங்கிட கொட்டுமுரசே -இனிப்
புன்னகையன்றி பொலிவதுவேறில்லை
போய்எழு கொட்டுமுரசே
— w

Saturday 22 February 2014

காத்தருள் தெய்வமே

விழிமீது ஒளிதந்து வெளிமீது நிலைகொண்ட
அழியாத பெருந்தீபமே
எழிலான மலர்வாசம்  இழைகின்ற காற்றோடு
எமைவாழப் புவியீந்தனை
பொழிலாடி விரிகின்ற  புனல்மீது அலைபோலப்
பொலிகின்ற உணர்வீந்தெமை
வழிதேடி விரிகின்ற  வாழ்வின்பம் தனைவேண்டி
வழுவோடு அலை என்றனை

மொழிகூறிக் கதை பேசி  முழுதாகத் தமிழ்கூறி
முடிவான வரையாடினோம்
அழியாத உடலென்றே அகங்கார மதம்கொண்டு
அறிவானததைப் போக்கினோம்
பழியாவும் எமையென்று  பரிதாபம் உலகன்று
படைகொண்டே எமைமோதவும்
குழியாகப் பெரும்வாழ்வு குலைந்தாக எமையிங்கு
குடியாக்கி வழி செய்தனை

அழுதாலும் விழுந்தாலும் அதிதீபஒளியான
அருஞ்சோதி யெமதன்னையே
தொழுதோமே எமைக் காத்து துயரென்ன அதைக்கேட்டு
துடிக்காது இரு என்றனை
மழுவேந்தும் சிவன் வந்து மண்மீது நடமாடி
மறையென்று  முடிவாக்கியும்
தொழுதாலும் இரங்காது துயர்கண்டு இறங்காது
துடிஎன்று தொழில்செய்தனன்

புழுவாக வாழ்வென்ப புரியாமல் நெளிந்தோடிப்
பொழுதான பல ஓட்டினோம்
வழுவாக நடைபாதை வலமாக இடமாக
விழிமூடி  நடை கொண்டனம்
தொழுதோமின் றருள் வேண்டித் துகளோடு பெருங்கோளம்
தொலையண்டம் தனையாக்கியே
வழுகாது சுழன்றாடும் வகையான செய்தாயே
வா எம்மைக் காத்தன்பு செய்

Thursday 20 February 2014

உலவும் நிலவே ஓடிச்சொல்!!!

நேற்றிருந்தாய் இன்றில்லையேன் வெண்ணிலாவே - அந்த
நீலவெளி மேகத்திலே விண்ணுலாவியே
தோற்றி விட்டால் பொன்னிலங்கி மின்னிடுவாயே - இன்று
தேயவைத்து யார் மறைத்தார் கூறு நிலாவே
காற்றும் மேனி தொட்டுமாலை சென்றிடும் வேளை - நீயும்
காதலுளம் கனிய வைப்பாய் காண்பவர்மீதே
சாற்றுமொழி வார்த்தை கொண்டேன் பொன்னின் நிலாவே- இச்
சங்கதியை அங்கிருந்தே கேட்டிடுவாயே

வீற்றிருந்தார் மன்னர் குலம் செந்தமிழ்தானே - அன்று
வீடுமனை கோவில் கட்டித் தந்ததனாலே
நாற்று நட்டு நெல்லுடைத்துத் தின்றவர்வாழ்வு- அற்றை
நாளிலொரு சொர்க்கமென்றே கண்டது ஊரே
தூற்றிமக்கள் தீயழிக்க செய்தவர்யாரோ - அவர்
தெய்வத்தமிழ் கொல்ல மனம் தீதுகொண்டாரோ
ஏற்றி வைத்த தீபமெல்லாம் எங்கே நிலாவே - இங்கு
இருள்மிகுந்தே உயிரழிந்த தேது சொல்லாயோ

ஆற்றினிலே வெள்ளம்வரப் படகினில் நாமே - அதில்
அலையடிக்க இடையில்நின்று சுழன்றடித்தோமே
மாற்றமில்லை போகுந்திசை ஒன்றெனவாகி - நாம்
மனமெடுத்தே துடுப்பசைத்திட வேண்டும்நிலாவே
வேற்றுமையாய் நாம் நடந்திடில் பொன்னின்நிலாவே - நாம்
வீற்றிருப்பது கூற்றுவன் கரம் ஆகும் நிலாவே
சீற்றம்கொள்ளினும் ஈற்றில் ஒன்றிடு கொள்கைவிடாதே - நீ
சேர்ந்து நின்றிடு தீமைவென்றிடு விடிந்திடும்நாளே

சுடரே ஒளியே!

காலத்தின் சுடரே காணரும் விளக்கே காட்சியின் கருமுதலே
ஞாலத்தின் ஒளியே ஞாபகத் தாயே நானுன்னைக் காணேனோ
சீலத்தின் உருவே சிந்தனை வடிவே தீந்தமிழ் தருபவளே
கோலத்தை நானும் கண்ணொடுகாணும் காலமும் வாராதோ


நீலத்தில் தீயும் நெஞ்சத்தில் சூடும் நீயெனக் கண்டுகொண்டேன்
ஆலத்தில் சாவும் அன்னத்தில் வாழ்வும் ஆக்கி யளித்தவளே
சாலத்தில் பொய்மை சற்குணம் யாவும் வைத்தவள் நீயன்றோ
தூலத்தில் மென்மை தூரத்தில் தோற்றம் தேவிநீ கொண்டாயோ

காற்றொடு மூச்சாய் கண்ணிடை ஒளியாய் கற்பனையில் வாழ்வும்
தோற்பொதிஉள்ளே துன்பத்தின் தோற்றம் தந்தெமைச்செய்தாயே
சீற்றத்தில் ஆர்வம் செய்முறை தோல்வி சிறுமையில் உழலென்று
நாற்றத்தில் புரளும் நகைப்பினை கொள்ளும் நலிவையும் தந்ததென்ன

மாற்றத்து மூலம் மங்கையின் யௌவனம் மந்திரப் பொன்னழகு
வேற்றதன் ஆர்வம் வீறிட்ட போக்கு வித்திடச் செய்தவளும்
கூற்றுவன் கொள்ளக் குற்றத்தின் தீர்ப்பு கொள்கையும் செய்தளித்து
தேற்றலுமின்றித் தேகம் வதைப்பாய்  தீர்ப்புக்கள் இப்படியோ

சாற்றின் இனிமை சேரும் கரும்பாய் செய்துலகில் படைத்தாய்
ஊற்றெழும் உள்ள வெம்மை வெறுப்பு உள்ளத்தில் தோன்றவிட்டு
சேற்றினில் பூக்கும் செந்தாமரைபோல்  தேகத்தைச் செய்தவளும்
போற்செழும் பூவில் போதையை தந்தோர் போதில் கருகுவதேன்??

கனவுகளில் காணும் இன்பம்

கிண்கிணென்றே ஒலிக்கின்ற மணிகள்- கூடநின்றே
குளுகுளுக்கத் தொட்டோடும் காற்று -கண்மறைய
விண்ணிருந்து தூவுமெழிற் பூக்கள் - விழியகன்று
வெளுவெளுக்கும் வரைகாணும் காட்சி சுற்றிவர
பண்ணெழுந்து பாடலிசைநாதம் பக்கத்தில்
பாதமொலி கேட்டாடும் பூவை  ஆடலிடை
புன்னகைத்து கண்ணடிக்கும் பேதை -கண்டுமவன்
பூவெடுத்து நுகர்கிற காட்சி

மாலையிலே மஞ்சள் வெயில்மோகம் மனம்மயங்க
மணி முத்து வைடூர்யம் வைரம் எட்டிவைக்க
காலைத்தொடும் கனகமுடன் ரத்னம் கண்டெடுக்கக்
கோமேதகம் பக்கமெழில் நீலம் மரகதமோ
மேலைவைத்த தென்ன புஷ்பராகம் ஆசைதரும்
மேகலைக ளோடுஒட்டி யாணம் வெள்ளிமணி
மூலையிலே கொட்டிவைத்தகாசு கண்டுஅள்ள
மின்னுமவை கண்ணாடித் தூள்கள்

வெண்ணிலவு பொன்னொளிர்ந்த வேளை கண்சிமிட்டி
விளையாடிச் சிரிக்கும் விண்மீன்கள் பூமியிலே
தண்சுனையில் ஆடுமலை வேகம் கண்ணழகாம்
தூரத்தேபோகும் முகில் காட்சி இத்தருணம்
எண்ணமதில் ஏற்றமுறும் இன்பம் எழுந்துவிழும்
ஆழ்கடலின் ஓடுமலை போலும் எங்கிருந்தோ
கண்ணெதிரில் மின்னுகின்ற வானம் கடுமிருளில்’
கைதட்டும் ஆகாயப் பெண்கள்

போதைதரும் கனவுகளின் மிச்சம் தேன்மலராம்
பூவிரலில் நாதமிடும்வீணை புல்லரிக்கக்
கோதையவள் கைபிடிக்கும் மென்மை கைமலரக்
குவளையிலே தேன்கனியின் சாறு மூதறிஞர்
சூதுஎனும்  விளையாட்டில் ஆர்வம் சுற்றிநிற்க
துரியோதனன் தருமர்வாதம் ஆடவென
பாதகமோ பண்பறியேன் நானும் பார்க்கவிழி
பரிதாபம் தூக்கம் விடும் நேரம்

அணைப்பின் துயரோ சுகமோ

நீரணைத்து நதிகுதித்துப் பாயுதம்மா - அங்கு
 நீள்கருத்த முகிலணைத்த வேளை குன்றில்
வேரணைக்க மண்நெகிழ்ந்து விட்டதாலே - நல்ல
 வீறெடுத்து மரம் வளர்ந்து காணுதம்மா
ஏரணைக்கத் தான்புரண்ட சேற்றுமண்ணில் - இன்று
  ஏற்றம்கண்டு நெல்நிமிர்ந்து நிற்குதம்மா
யாரணைக்க  நாம்பிறந்து வந்தோமம்மா - இந்த
   ஞாபகத்தை மேனி கொண்டவாழ்வின்போது

போரணைக்க வாழ்வணைந்த பூமிமீதில் - ஏன்
 போதணைக்க அன்னை கையில் போய்க்கிடந்தோம்
மாரணைத்துப்  பால் குடித்த அன்புதன்னும் - இன்று
  மாறியெம்மை தீதணைத்த காட்சியு மேன்
ஊரணைக்கும் தீகொளுத்தி விட்டவர்கள் - தம்மை
  உலகணைத்துக் கரம்கொடுத்த போதிலெம்மை
பாரணைத்து நீ கொள்ளாது விட்டதென்ன - இந்தப்
 பாவம் என்னும் விதியணைத்த கோலமென்ன 

நாரணைத்த பூகழுத்தில் ஏறுமம்மா - உச்சி
ஞாயிற்றின் கதிர் அணைப்பின் வீழுமம்மா
சேரணைத்துக் கொள்கரத்தி னாலேயெம்மை - அந்தச்
சேதம்வந்து வாழ்வணைக்கும் முன்னதாயே
பேரணைக்கும் புகழ் இனிக்கும் போதில்லாமல் - என்றும்
பூஇருக்கும் போலுமென்மை யன்பு கொண்டே
நேரிணைந்து வாழ்வதன்றி வேறு மாற்றம் - இங்கு
நீயிணைத்துச் செல்லல் என்ப  விட்டிடம்மா

கூறனைத்துச் சேதிதன்னும் கொண்டு எம்மை - இக்
கூடிணைத்துப் பூமிவிட்ட கோலமென்ன
ஆறணைத்துக் கொள்ள ஆழிபோவதன்ன - எங்கள்
ஆற்றல்கொண்ட உயிரணைத்த மேனிதானவ்
வாறிணைந்து வாழும்போது விட்டுநிற்கா ஓர்
வேடிக்கை என்றேகம் துன்பம் செய்ததென்ன
சேறணைத்த மண்விளைந்த பூவென்றாகி  காலம்
சீரணைத்த வாழ்வு காணச்செய்வை யம்மா

குப்பை மேனி

என்னநினைத்து மண்ணில் மாந்தர் - சிலர்
  இகழ்ந்து பிறரை நகையாடும்
தன்மை எடுத்தனரோ அறியேன்  -அந்தோ
  தவிக்கும் உளமும்கொண்டு நின்றேன்
மின்னும் மகிழ்ச்சி கொண்டமுகமும் - அவர்
 மேனி மினுக்கும் விதம் கண்டால்,
இன்னும் குழந்தை மனம்தானோ -  இவர்
 இருக்கும் நிலை கிணற்றில் மீனோ 

நேசமுடைத்த இந்த உடலும் - அதில்
  நெய்யில் எரியும் நெருப்புணர்வும்
கூசும் ஒளிகதிரி னுதயம்  - வரக்
  கொள்ளுந்  துயில் கலையக் காணீர்
கேசம் கலைந்தவிதம் வாயின்  -கடை
   கிடப்பில் வழிந்தஎச்சில்  தோற்றம்
வீசும் வாடை சிறுநீரும் - உண்டு
   விளைந்து கழித்த வகையாவும்

காணச் சகிக்காத நிலையும் -அதைக்
  கண்டும் மனம்கொள்ளும் கர்வம்
நாணமெழும் குடலின் நாற்றம் - விரல்
   நகமும் முடியும் கழிவாக்கம்
வீணே பூசி மெழுகேற்றி - வழி
   வியர்வை துடைத்து மனம் மாற்றி
ஆணும்பெண்ணும் கொண்ட அவலம் - இது
   அழகுவாழ்க்கை எனும் மாயம்

மேனி கொளும் அழகை போற்றும் - இந்த
  மாந்தர் குடல் புழுக்கள் வாழும்,
தேனின் உதடு கசப்பாகும்  - உள்ளே
  தீனும் கிடந்து வாய் நாறும்
தானிவ் வுடலுணர்வு காதல் - கொண்டு
  தன்னைத் தரும் இளமை இன்பம்
ஏனோ கழிவுகளின் இறக்கம் - அவை
  இருக்கும் பாதைகளின் மோகம்

கூடிக் கொண்டியற்றும் செயலும் - ஒரு
   குழந்தை  குடும்பமெனப் போற்றும்
ஆடி திரியுமிந்த உலகில் - இந்த
   ஆகத்திமிர் பிடித்த நிலையும்
கோடியெனக் காலம்போயும் - இவர்
   கொள்ளும் கனவுகலையாதோ
தேடித் திரிந்து பணம் கொண்டும்- கொள்ளத்
   தேவையற்ற வழிபோவர்

சாலச் சிறந்த பொய்கள் கூறி - இங்கு
    தானே அழகென்றிவர் ஆடும்
காலக் கருமை கொண்டமனிதா - நின்
   கண்கள் திறப்பது மெப்போது
நீலம் நிறைந்த  விண்ணில் நின்று - கீழே
 நீயும் சிந்தைகொண்டு பாராய்
கோலம் மனித வாழ்வெதுவோ -மனம்
  கூட்டிக் கழித்தும் உண்மை பாராய்

பூமி யென்றசாக் கடையில் - இங்கு
   புழுக்களாய் நெளியும் மனிதர்
தாமிக் கழிவுஎனும் குருதி -  கொண்டு
  தன்னில் கிடந்தழியும் சதையும்
போமிவ் வுணர்ச்சி கொளும் பாவம் -அதில்
   பிறரைக் கெடுக்கு மனபாவம்
நாமிவ் வழியில் சொல்லும்பொய்கள் -இன்னும்
   நலிவு களவு பெருமச்சம்

ஆன தொரு வாழ்வைகொண்டு - உளம்
  அகந்தை நிறைந் தயலைக் கெடுக்கும்
தானேஎனும் கர்வம் மீறித் - துள்ளும்
  தன்மை வெறுமை எனும் ஞானம்
ஏனோ இதைமறந்து காணும் -இந்த
  இயல்பு புரியவில்லை நானும்
வீணே உரைத்துமென்ன உலகில் - அட
   விந்தை மனம் இருளின் குகையே!

**************

பொய்மையும் வாய்மையுடைத்து

மின்னலெழுந்த மேல்வானிடையே கரு
மேகம் இடித்தது நெஞ்சதிர
பொன்னொளிஒன்றிடை மின்னமின்ன நானும்
பேச்சிழந்து முன்னே காணுகிறேன்
என்ன நடந்தது வானடியில் இரு       
கண்களும் கூசஇருள்மறைய
எந்தனைப் போலஇன் னோர் உருவம் அங்கு
எட்டிநடந்தண்டை ஏகக்கண்டேன்

முன்னேவியந்திட நின்றவனை - நோக்கி
மேலும்கீழுமெனப் பார்த்து நிற்க
சின்ன உதடுகள் மெல்ல விரிந் திடச்
சிந்திய ஏளனம் கண்டுகொண்டேன்
என்ன எனையொத்த மானிடனே நீயோ
எந்த உலகத்தின் சொந்தமென்றேன்
கன்னம் சிவந்திட வெஞ்சினத்தால் அவன்
காணும் திசையினில் கேட்டுவைத்தேன்

உன்னுளிருப்பவன் நானே என்றான் என்றும்
உன்னொடு சேர்ந்திவன் ஒன்றேயென்றான்
என்னைவிட்டும் நீயும் இல்லை யென்றான் என்றும்
என்னுயிரோ உந்தன் உள்ளே என்றான்
உன்னையு மென்னையும்செய்தவளோ இங்கே
உன்னிலே என்னையும் என்னிலுன்னை
உன்னதமாகவே வாழவைத்தாள் இன்று
உன்னையும் என்னையும் .இரண்டுசெய்தாள்

என்னையும் உன்னையும் ஒன்றிருத்தி அன்னை
இன்றுவரை செய்த அத்தனையும்   
இன்றோ ஈர்பாதையில் இட்டுச்செல்ல எண்ணி
ஏனோ ஒருவழிசெய் திணைத்தாள்
என்முகம் காட்டவென் றுன்முகத்தில் இங்கே
ஓடிவந்தே னென்று கூறி யவன்
உன்நிலை இங்கில்லை அங்கே என்றான் நானோ
அங்கில்லை இங்கென ஊடறுத்தேன்

செய்வது ஏதெனச் சித்தமதில் பெரும்
சிந்தனை பல்கிப் பெருகிடவே
பொய்யுரைத்தான் மேவிப் புன்னகைத்தான் பெரும்
போதைதரும் சொல்லில் பூசித்தவன்
மெய்யுரைத்தான் மேனிசந்தணமும் நல்ல
மாமலர் தீங்கனிச் சோலைமணம்
கையசைவில் தனும்காட்டியவன் அவை
காண என் மேனியில் தென்புசெய்தான்

கையை பிடித்தவன் அன்பினிலே அந்தக்
காட்சிகளின் வசம் மூழ்கிவிட்டேன்
பெய்குளிர்செய் மழை மேக த்திலே எந்தன்
போகு வழிகண்டும் பேதலித்தேன்
வெய்யிலிலே ஒருதோற்றம்கொண்டான் பின்பு
வெண்ணிலவில் மாறி வேறுசெய்தான்
செய்கையிலே மீண்டும் ஓர்தடவை என
சுற்றும் மண்ணிலே பிறந்துவிட்டேன்

இரண்டு எனம்பெரும் சக்திவகை அங்கு
ஈர்முனையில் எனைப்பேதமிட
கண்டு கொள்ளாய் சக்தி என்றவனின்எதிர்
காணூ வகை ஒருதீயழுந்தே
சுண்டுவிரல் காட்டிச் சின்னவனே யுந்தன்
தோற்றம்  இரண்டல்ல ஒன்றே யென்றாள்
இரண்டு கண்டாய் அது நூறு என்றாள் அது
நீயல்ல நீயெனும் நானேஎன்றாள்

சொல்லித்தரச் சொல்லில் சொல்லியவன் இவன்
சொல்லிற் பிழைசெய்யின் சொல்லின்வளம்
சொல்லடுக்கும் நிலைசொல்நிறுத்தி யெந்தன்
சொல்லும் திறன்கெடச் செய்துவிடு
சொல்லுவது எந்தன் செய்கையல்ல கொடும்
சொல்லுமல்ல இவை சத்தியம் காண்
சொல்லொடுத்தே இவன்  தீமைசெய்யினுடன்
சோதியினால் மேனி சுட்டுவிடு

பெய்திடித்த மழைஓய்ந்து விட ஒரு
பேரமைதி எங்கும் தோன்றியது
மெய்சிலிர்க்க உடல் புல்லரித்தே உடல்
மேவிடும் தீஎன ஊர்ந்துசெல்ல
கையெடுத்தே உயர் வான்பரப்பை  எண்ணிக்
காத்திடும் தெய்வமே நன்றிஎன்றேன்
செய்யெடுத்தே  கவி சொல்லுவெனும் உயிர்
செல்லடுக்கில் உணர்வூறநின்றேன்

இது ஏன்:?

மானாட மகிழ்வோடு மலராட மணிதீபம்
மாலையிளங் காற்றிலாட
வானோடு பொலிகின்ற  வின்மீன்கள் நடமாட
வெண்ணிலவு வீசியோட
மீனோடி வளர்கங்கை முப்புரங்கள் எரித்தவனின்
முடியோடு ஓடிவீழ
தீனோடிக் கொரித்தசிறு அணிலோடி திகைத்தபின்
திரும்பவந்த வழியிலோட

ஏனோடி மனமும் துயர் இழையோடி வருத்துவதேன்
இல்லையென் றோடவிட்டே
தானோடி மறைவதின்றித் தரையோடக் காலுமுண்டோ
தடையோடிவிதிக்கலாமோ
நானோடிச் செல்வதெ.ங்கு நடையோட முடியாது
நலமோடிச் சென்றதன்றே
ஏனோடி இழிவுசொல்லி இடையோடி மனம் வருந்தி
இருப்பதோ இதயம்வாடி

தீயாடி வரும்போது தெரியாது ஓடிமறை
திறமுண்டோ உயிருமோடி
வாயோடிக் கூறிடினும் வந்தசொல்லை நான்தேடி
வணங்கினேன் கோடிகோடி
பூவாடி விழமுன்பு போயோடிக் கரம்கொண்டு
பூசிப்ப தாரையோடி
நீபேடிஎன்றுமெனை நீரோடும் விழிசெய்து
நிற்பதில் என்னநீதி

சேயோடி விளையாடத் திங்கள் குடத்தண்ணீரில்.
தினம் வீழ்த்தக் கண்டுமோடி
தாயோடி அமுதூட்டத்  தமிழோடிஉணர்வூட்ட
தரையோடி வாழ்ந்த வாழ்வு
பாரோடிச் சுழலுதெனப் பலபேரும் சொலஓடி
பலதிசையும் பார்த்துமோடி
வேரோடிக் கிடந்தகுலம் விதையாக விலைபேசி
விற்கவோ என்றுவாடி

உணர்வோடித்  தலைசாய்ந்து முளமோடி மனம்காய்ந்தும்
உருவோடி இழிமை கொண்டு
தணலோடித் தீபற்றத் தமிழோடி நாபற்ற
தவிப்பது கண்டும் ஓடி
மணலோடு பிறந்தேனும் மண்மீது வளர்ந்தேனும்
மண்ணோடு மண்ணாகிடும்
கணமோடி வரும்நாளும் கனிவான விசைகொள்ளக்
காணுவதில் வேற்றுமை ஏன்?

முடிவில்லாக்கவிதை

முடிவில்லாக்கவிதை (மீண்டும் ஆரம்பத்திகு வரும்)

கொட்டும் மதுமலர் முற்றம் விரியக் கை
கொட்டியே ஆடுகிறேன் - அது
விட்டே இதழ்மொக்கு நெக்குவிடும் எழில்
வித்தையில் மெய்சிலிர்த்தேன் - பல
பட்டுவண்ண இதழ் பூமலர்வில் சிந்தும்
பொன்னிறத் தேனமுதைக் - கொண்டு
சித்தமதில் வருந் தீந்தமிழின் கவி
செய்து தினம் கொடுத்தேன்

சுற்றும் புவியிடைச்  சூழலிலும் அன்பு
தொட்டுக் கரமெடுத்தேன் - அதில்
மற்றும் மாலைவீசு மாருத மாயின்ப
மோனை எதுகை வைத்தேன் - நல்ல
சொற்பதமா யெழில் சேர்த்து மகிழ்வென்னும்
சோதிஒளி கொள்ளவும் - எனைச்
சற்றுமெதிர் கொள்ளா சக்தி தந்த உயிர்
சாரமிடையில் விட்டே

பற்றி எறிந்தன வீழ்மலர்கள் தனைப்
பூவன தென்றல் மழை - துளி
எற்றும் விதங் கொண்டும் என்னில்தெளிக்க.,நல்
இன்பந்தரும் சுவையில் - எனைச்
சுற்றிமலர்த் தருகொப்புலுக்கி அதை
தோளிடை வாகையென - ஏது
கொற்றவனோ இவன்மேலிறைக்கும் தென்றல்
கோலத்தினை ரசிக்கப்

புற்றரையிற் பனியோடியெழ அதைப்
புல்நுனி தான் திரட்டும் - வகை
நெற்றியடி யினில் வேர்வையெழ நங்கை .
நேர்விழி வேலெறிய பட்டுக்
குற்றமி ழைத்திடா கோமகனின் மனங்
கொண்டிடக் காயமிடும் - அந்த
வெற்றியின் அற்புதம் வேட்கை கொளுமவள்
வீறெழும் புத்துணர்வில்

கத்தும்குருவிகள் காகம் கிளியிசை
கானக் கரும்குயிலின் - பல
சத்தமிட்டேசொல்லும் சங்கதியில் மனம்
சார்ந்தே இசைபடிக்க
முத்தமிடும் மேகம் வானடியை அதோ
முன்னடிவான் கிழக்கில் - விடும்
ரத்தமெனச் சிவந்துள்ள முகிலிடை
ரத்தின பொற்கலயம்

வட்டப்பரிதியும்  நித்தமெழும் அண்ட
வண்ணக் குழம்புகளின் - வகை
இட்ட எழில்மேவு வான்பரப்பில் வெகு
எட்டமிருக்கும் சக்தி - அவள்
தொட்டு மனதினில் கொட்டியதை இவன்
சொல்லிக் கவிதையிட - எழிற்
பட்டு மலர்களில் பொற்கதிரோன் சுடும்
புத்தொளிச் செங்கதிரால்

கொட்டும் மதுமலர் முற்றம் விரியக் கை
கொட்டியே ஆடுகிறேன் - அது
விட்டும் இதழ்மொக்கு நெக்குவிடும் எழில்
வித்தையில் மெய்சிலிர்த்தேன்
..............................
......
...................................
(மீண்டும் முதலிலிருந்து தொடர்கிறது)

தாயின் பெருமை

  கடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது
களிகொண்டு உயர்வாகி எழுகின்றது
திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும்
தெளிவோடு மணல்மீது குளிர்தந்தது
நடங்கொண்ட அலையென்ப உயர்வாகையில் - அதன்
நளினத்தின் எழில்தன்னும் எதுகொண்டது
கடலான தாய்கொண்ட கருவல்லவா - அலைக்
கரமென்ப பெருமாழி  உருவல்லவா

உடலிங்கு புதுராகம் இசைகொண்டதோ - அது
உயிர் கொண்ட புதுவாழ்வின் வரைபல்லவா
இடமென்ப குளிர்கொண்டு மழைகண்டபோ -தென்
இடி மின்னல் கருமேக முதிர்வல்லவா
சடமென்ற சிலைநின்று நடமாடினால் - இச்
சரிதமதி சயமென்று சிரம் கொள்ளவா
கிடவென்று விதிசெய்த கொடும் வேளையில் - இலைக்
கொடு யின்பத்தமிழ் என்ற குரல்அல்லவா

தடுமாறி மனமென்ப அலைகின்றபோ - தெனைத்
தரமாக்கி இவள் தந்த வாழ்வல்லவா
முடமாக்கி இதுபோதும் முடிவென்றிட - இலை
முனை யென்று மகிழ்வாக்கி முழுதாக்கினாள்
அடர்வான முகிலூடு வெயில்தோன்றவும் - இவ்
அறிவான தொளிகொள்ள அறமீந்தவள்
திடம்கொண்டு தமிழ் பேசி கவிசெய்யவும் -இத்
திறம் தந்த தவள் சேரும் புகழ்யாவையும்


கடைகொண்ட நிலை யின்று முன்னேறவும் - இக்
கதியென்று களைகொள்ளக் கரம்தந்தவள்
மடையாக புதுவெள்ள மனம் தந்தவள் - என்
மனதுக்குள் பிரவாகம் உடை என்றவள்
நடைகொண்டு வழிசெல்ல நலமாக்கியும் - என்
நிலைகொண்ட குறைபோக்க நடுவந்தவள்
விடைகொண்டும் உயிர்போகும் வரைநிற்பவள் - அவ
விடை சொல்லப் புதிருக்குள் பதிலாகுவேன்

குடைதந்து மழையென்றும் வெயில்தன்னிலும் - நில்
குறையின்றி வாழென்றும் அறம்செய்தவள்
படைகொண்டு முடைசெய்யும் பகைகொண்டவன் - அங்கு
புரிகின்ற துயர்தன்னை முடிவாக்கவும்
இடைவந்த விதியாலே எமதன்பினர் - தமை
இலையென்றே உயிர்கொல்லும் இவ்வேளையில்
தடையின்றித் தமிழ்பேசும் இனம் காக்கவும் - எம்
தமிழ்ஈழ உயர்வுக்கும் வரம்வேண்டினேன்

சக்தியை நினை

நீலக்கடல் துடிக்கும் நெளிதிரைகள் அலைந்து கெடும்
காலச் சுழலினிலே காயம் உயிர் கலந்தழியும்
ஞாலத் திருமனிதர் ஞாபகங்கள்  சக்தியெனும்
கோலத்திரு’ நினைந்தால் கொள்ளுமெழில் வாழ்வன்றோ

பச்சை மரங்களிலும் பார்க்கும் மலர்ச் செடிகளிலும்
இச்சை கண்டுமணம் ஏந்திவரும் தென்றல் எழும்,
அச்சம் நிறைவெளியும் அண்டமெனும் சூனியமும்
உச்சம் கொண்டுறைவாள் எண்ணு துயர் நீக்கிடுவாள்.

சிவந்தே வான் கொதிக்கும் செங்கதிர்வான் உதயமெழும்
உவந்தே மண் சிரிக்கும் உணர்வுகளும் நிறமெடுக்கும்
இவள்தாள் பணிந்தவர்க்கு இன்பமெனும் வரங்கிடைக்கும்
தவழ்ந்தே வருந் துயரம் தாயிவளால் தொலையாதோ

மஞ்சள் நிலவொளியில் மனதிலெழும் குளுகுளுப்பால்
கொஞ்சம் மதிமயங்கும் குளிர் நிலவின் தண்மையுளம்
தஞ்சம் வந்தவரின் துன்பநிலை போக்குமெனில்
நெஞ்சில் கொள்வர்தமின் நிலையுயரச் செய்யாளோ

கருமை இரவுதிரக் கதிர் முகத்தின் தெளிவெழவும்
வருமை விழியுடையாள் வாழ்க்கை நலம் ஈந்தவளை
பெருமை  யத்திருந்து பிரபஞ்ச தோற்றமெழக்
கருவென்றா னவளைக் கரம் கூப்பு கருணை எழும்

வண்ணக் கலவைகளின் வான்வெளிகாண் சாகசங்கள்
எண்ணக் கருவாக்கி இத்தரையில் பிறவி எனும்
மண்ணைப் பிடித்துடலாய் மாயசக்தி ஏற்றியவள்
கண்ணில் ஒற்றியெடு கைகொடுப்பாள் காத்திடுவாள்

மின்னல் பொறி

வெட்டவெளி கட்டையிலே வேகுதடா மேனிசுட்டுக்
கட்டிவைத்த கோட்டைகள் தான் காற்றில் போனதோ - நல்ல
கற்பனைக் கெட் டாதசுகம் கண்ட சூன்யமோ
தொட்டெடுத்த மேனிதனும் தொல்லை எனக் கண்டதுவோ
வட்டவளை வானவில்லின் வண்ணம் போன்றதோ - அங்கே
வந்து நின்ற மேகத்துடன் வான்மறைந்ததோ

மெட்டமைத்துப் பாடிவைத்தேன் மேதினியில் காற்றெழுந்து
திட்டமிட்டுக் ஊதி ஒலி தேயச் செய்யுதோ - அது
தென்றலெனும் பேரில் திக்கும் மாறி வீசுதோ
சுட்டும் புத்தி தோன்றவில்லை சொல்லிமனம் கேட்டதில்லை
சட்டியை வைத்தாடுகிறேன் சாய்ந்துபோகுமோ - என்ன
சஞ்சலத்தில் விட்டுகரம் சற்று தூங்குமோ

கட்டிவைத்த பெண்ணவளும் காதல் நதி கொட்டிவிழும்
வட்டமலைப் பாறை தூவும்சாரலின் நிலை - அங்கு
வந்து விழும்தூறல் மேனி தொட்டபின் இல்லை
வெட்டிக்குறை விட்ட நிலா விண்ணெழுந்து காணுதடா
திட்டமிட்டே ஓடும்முகில் தேடிமூடுதோ - வீசுந்
தென்றல் தொட விட்டலைந்து தூரமானதோ


பொட்டுவைத்த பூமகளிர் புன்னகைக்கு ஒத்தவளம்
சொட்டுமலர்த் தேனின் சுவை கொண்ட வாழ்விதோ - இன்று
சொப்பனத்தில் கண்டதுவாய்ச் சோர்ந்து போனதோ
மொட்டவிழும் பூமறைந்து முற்றிவிட்ட காய்வெடித்து
கட்டவிழக் காற்றிலோடும் பஞ்சென்றானதோ - அதை
கைபிடிக்கக் காற்றினோடு காலம்போனதோ

தட்டிவைத்த  பஞ்சணையும் தாங்க மனமில்லையெனில்
விட்டகுறை நித்திரைக்கு வேளை தோன்றுமோ - அந்த
வெண்ணொளியும் வந்தகணம்  விடியலானதோ
நட்டமில்லை விட்டவனும் நாள்முழுக்க தந்துநின்றான்
சட்டெனத் தா என்றபோது  சட்டம் பார்க்கவோ - அவன்
சற்றுப்பொறு வென்றுசொன்னால் விட்டுப்போவனோ

முட்டி மழைபெய்கையிலே முற்றமதில் நின்றவனைத்
தொட்டுமின்னல் பார்ப்பதென்ன தேகம் யாவுமே - அந்த
சுற்றும்சுழல் சக்தியவள் தந்த மின்னலே
அட்டதிக்கு மாமலைகள் ஆழிபெரும் வானவெளி
விட்டதிசை  யெங்கும்நிறை விந்தையாகவே - அவள்
விண்நிறையக் கண்டுநின்றேன் வெள்ளை தீபமே

யார் இடம் கொடுத்தது?

தென்றலுக்கு ஓடச்சொல்லி யார்விதித்தது - இந்தத்
தேன்நிலாவின் பொன்னிறத்தை யார் கொடுத்தது
நின்றுவீசும் பூமணத்தில் நெஞ்சம் கொள்ளவும் -வந்து
நீலவிண்ணின் பஞ்சுமேகம் நீரை ஊற்றவும்
குன்றின்மீது நீரெழுந்து கூடு ஆழ்திரை - மேவும்
கோலமாகடல் தனில்லென் றீது சொன்னவர்
மன்றம் மாபுரத்தில் நின்று மன்னன் ஆளென - இந்த
மண்பிரித்துச் சொந்தம்கொள்ள யார் விடுத்தது

சுட்டுவாழச் செய்யுமந்தச் சூரியன்களும் - அண்டம்
தூரத்தூர விண்ணிலாட யார் வகுத்தது
கட்டிவைத்தும் ஆட்டுமந்த காந்தசக்தியும் - அந்தக்
காரணத்தி லண்டமீது நிற்கும்பூமியும்
கொட்டித்தூறும் மின்னலோடு கூடுமாமழை - கோபம்
கொண்டதாக வீசுங் காற்றும் யார் படைத்தது
குட்டிப்பூனை ஆடுந்தோகை கூவும்பட்சியும் - மென்மை
கொண்டுசெய்யக் கொல்லுங்கூட்டம் ஏன்படைத்தது

முட்டிநீர் தெறிக்கும் ஆழி  மோகனத்தையும் - இன்னும்
மேகமீ தெழுந்தது போகும் மண்ணின் பட்சிகள்
புட்டிமண்ணும் பச்சைக்காடு பூக்கள் கொள்வனம் - நல்ல
புல்லிருக்கும் மேடைசெய்து பூமி தந்தவள்
வெட்டி வேலியிட்டு நாடுவேந்தன் என்குலம் - இன்னும்
வீதி எல்லை வைத்த சட்டம்  என்றுகூறிடும்
துட்டமா குணங்கள்கொள்ளக் கொள்கை செய்தளோ - இந்தக்
கோதையர் வதைபடுத்துங் கோலம் செய்ததார்

சட்டென்றோர் தினத்திலிந்தச் சுற்றும்பூமியும் - தன்னில்
சற்றுக் காணும் காந்தமென்னும் சக்தியை விடப்
பட்டமும் பணம்பொருட்க ளோடு காண்பவர் - இந்தப்
பூமியும் தன்சொந்தமென்று பங்குகொள்ளினும்
விட்டதால் இப்பூமிவிட்டு விண்குழிக்குள்ளே - ஆழம்
வீழ்வதன்றி வேறுமுண்டோ வேந்தர்தானதும்
கொட்டிவிட்ட குப்பையாவர் கொள்ளுமட்டுமே -இந்தக்
கோளமாம் நற் பூமிதன்னிற் கேடு செய்வரோ

மயிலாடக் குயில்பாட!

நீலமலை மீதிருந்து கூவுங் குயிலே இன்று
நேர்ந்த தென்ன வாடுவதேன் கூறுகுயிலே
பாலதை பொழிந்துமந்த வானின் நிலவே - காணப்
பார்த்திருந்தும் ஆவதென்ன பாடு மகிழ்வே
கோலமீது கொண்டதென்ன கூறு குயிலே இன்று
கோடிசனம் ஆடிமகிழ் வாகுந்தினமே
ஆலமரம் மீதிருந்து ஆடும்கிளையே அதில்
ஆனந்தமும் கொண்டுநீயும் பாடு குயிலே

கூடுவிட்டு ஓடி வந்தேன் கொள்ளு மயிலே - எந்தன்
கூட்டமும் தவித்தடி கொல்லவரவே
ஓடு என்று கூறினராம் உண்மை மயிலே [ கையை
ஓங்கியும் அடிக்க வந்தார் உள்ள செயலே
தேடு என்று கூறுவாராம் எந்தனயலே - அந்த
தீங்கனிக்கு ஏதுதிசை உள்ளமறியேன்
நாடு என்று கூறும் மனம் கொண்டநிலையே சென்று
நாலு திசை பாட வழி இல்லை மயிலே

சூடு என்று சுட்ட வெயில் கொண்டும் குயிலே -இன்று
சொல்ல வழி இன்றி நிற்பதேது குயிலே
கோடு கிழித்துள்ளிருத்தி கண்டநிலையே - இதில்
கோணலிட்டு நீ குனிந்து வாழும் வகையேன்
காடுமுண்டு பக்கத்திலே கானக்குயிலே - அங்கு
கற்பனைச் செடிபரந்து காணுமின்பமே
வீடு விட்டு வந்தவிதி விட்ட செயலே- இந்த
வேளையில் மறந்து கீத்ம் பாடு குயிலே

தேடுமாம் விழித்து மந்த திக்கில் சிலரே - என்ன
தேவையோ பறந்தபோது தீங்கு விளைந்தே
காடுமா மலைவிழுந்த பூவென்றானதும் - இந்த
காலையில் கனவில்வந்து காணுதே நிலை
பீடுங் கொள் பிணி பரந்து போனபின்னதே - நானும்
பேசவோ பெருத்ததீயும் பின்னெரிந்ததே
கூடுடன் அன்றான வாழ்வு கொள்வ தாயின்விண்- கொண்ட
கோலமா சுதந்திரத்தைத் தேடும் வழியே !

கற்பனை பெண்ணாகி

தீ பூத்த கண்கள் தென்றல் சுடும் வேகம்
திங்கள்முகம் தீப்பிளம்பின் துண்டம்
நீர் ஓடும்கன்னம் நின்றதென்ன சூட்டில்
நிறை செவ்வண் ணெரிமலையின் சீற்றம்
நேர் கொண்ட பார்வை நீட்டுமிரு வாளோ
நெஞ்சமதில் மூச்சென்ற சூறை
கார் தோற்ற குழலும் கன்னமிரு பக்கம்
காற்றோடு போராடும் தோற்றம்

பார்போற்றும் வண்ணம் பார்த்த மகள்கோபம்
பனிபோர்த்த அடர்காட்டின் அச்சம்
நார் நீத்த பூவோ நலிகின்ற மென்மை
நடையோதள் ளாடும்சிறு பிள்ளை
வேர் விட்ட மரமோ விதைவயல் இல்மழையோ
வெற்றுவெளி சுடுவெயிலின் வதையோ
தேர் இல்லை அசைவில் தினம்பூத்த கொடியும்
துணை நின்றமரமற்ற நிலையில்

நேர் பார்த்து நின்றேன் நிலைஇவளின் ஏது
நேர்ந்ததென அறியாமை துக்கம்
சீர்ஏற்ற வதனம் சிதையுமொரு குற்றம்
செழுமைதனைக் கொன்றதெவ னென்றேன்
போர் கூட்டு முழவம் போடுமொலி இல்லை
பூமொட்டு விரல் கொண்டு காட்டி
யாரென்று கேட்டாய் நீயன்றி எவனோ
யானென்ன செய்வதென நின்றாள்

தேர் என்று தமிழை தினம் ஊட்டி விட்டால்
திரும்பி நீ நிற்பதென்  மனிதா
கூர்கொண்ட எழுதும் கோலெங்கு வைத்தாய்
குற்றம்நீ கொள்தண்டம் என்றாள்
எர்பூட்டி உழுவோன்  இதமான காலம்
உழுது மண் கொள்ளாத காலை
சேர்க்கின்ற பாவம் சுற்றமும் கொள்ளும்
சிறுதீயும் பசிஎன்று தீய்க்கும்

பேர் எண்ணிச் செய்யும் பெருவினைகள் யாவும்
பேசற்ற விதமாக மாறும்
வார்த்தோடும் மழையும் வற்றாத ஆறும்
வழிதோறும் தாகத்தை ஆற்றும்
பூர்வீக நன்மை புதிதாக்கி வைத்தேன்
பொன்னான மென்வீணை நாதம்
ஆர்க்கின்ற மணிகள் அசைவொலி சதங்கை
அத்தனையும் மண்கொள்ள வேண்டாம்

கோர் அழகினாரம் கொள் கவிதை சாரம்0
குறைவற்றே ஊற்றும் நீரோடை
மார்மீது தவழும் மகிழ்வோடு மழலை
மனங்கொள்ள உண்டெழும் கோலம்
தீர்ந்த பசியாலே சிரிக்கின்ற விழிகள்
தென்றலம் மேனிதொடத் தியங்கும்
தார்மீகம் கொள்ளு தருவதில் குறையா
தமிழ்பாடு பாடு பாடென்றாள்

Tuesday 18 February 2014

அணைப்பில் விளைவது துயரா மகிழ்வா


பாரணைக்க  நதிகுதித்துப் பாயுதம்மா ஒரு
  பாவை யென்று நீரணைக்கப் பாயுதம்மா
வேரணைத்த நிலம்நெகிழ்ந்து விட்டதம்மா - அதில்
 வீறெடுத்துச் செடி வளர்ந்து காணுதம்மா
ஏரணைக்கத் தான்புரண்ட கழனிமணல் - இன்று
  ஏற்றமுடன் நெல்சுமந்து நிற்குதம்மா
யாரணைக்க  நாம்பிறந்து வந்தவரோ - பட்ட
   நாட்கள்தனும் ஊதி அணைத் தால்விடுமோ?

போரணைக்க வாழ்வணைந்த பூமியதில் - ஏன்
 போதணைத்த அன்னை கையிற் போய்க்கிடந்தோம்
மாரணைத்துப்  பால் குடித்த அன்புதன்னும் - இன்று
  மாறியெம்மை தீதணைத்த காட்சியு மேன்
ஊரணைக்கும் தீகொளுத்தி விட்டவர்கள் - தம்மை
  உலகணைத்துக் கரம்கொடுத்த போதிலெம்மை
பாரணைத்து நீ கொள்ளாது விட்டதென்ன - இந்தப்
 பாவம் என்னும் விதியணைத்த கோலமென்ன 

நாரணைத்த பூகழுத்தில் ஏறுமம்மா - உச்சி
ஞாயிற்றின் கதிர் அணைப்பின் வீழுமம்மா
சேரணைத்துக் கொள்கரத்தி னாலேயெம்மை - அந்தச்
சேதம்வந்து வாழ்வணைக்கும் முன்னதாயெம்
பேரணைக்கும் புகழ் இனிக்கும் போதில்லாமல் - என்றும்
பூஇருக்கும் போலுமென்மை யன்பு கொண்டே
நேரிணைந்து வாழ்வதன்றி வேறு வகை - இங்கு
நீயிணைத்துச் செல்லல் என்ப  விட்டிடம்மா

கூறனைத்துச் சேதிதன்னும் கொண்டு எம்மை - இக்
கூடிணைத்துப் பூமிவிட்ட கோலமென்ன
ஆறணைத்துக் கொள்ள ஆழிபோவதன்ன - எங்கள்
ஆற்றல்கொண்ட உயிரணைத்த சாவுகளும்
நீறணைந்துத் தீயழிக்க விட்டதுமேன்  - எம்மை
நேரனைத்துத் துன்பங்களும்  சார்வதுமேன்
சேறணைத்த மண்விளைந்த பூக்களைப்போல் நாமும்
சீரணைத்த வாழ்வு காணச்செய்வை யம்மா

குளிர்காற்றே நீயும் கொடியவனா?


ஊதிவீசுங் கூதல்காற்றே ஒருமுறை என்னைப் பார்
.உள்ளம் நொந்தே ஓடும்போதேன் ஓசையிடுகின்றாய்
பாதி தேயும் சந்திர ரூபம் பார்த்தே மகிழ்வாயா
பாவம் என்றே பால்வெண் நிலவின் பக்கமி ரங்காயா
நீதித்தேவன் நிம்மதியாக நித்திரை கொள்கின்றான்
நீலக்கடல்மேல் காக்குந் தெய்வம் நெஞ்சம் கல்லானான்
ஆதிப் பரமன் அங்கையற்கண்ணிக்  அரைகொள் ளென வீந்தான்
யாரைக் கேட்போம் யாரும் தேடாப் பாலைவன மானோம்


சேதிசொல்லும் சங்கும் ஊதித் தென்றல் கொண்டோடி
செய்யும் விளைவும் தீதும் நன்மை சொன்னோம் கேட்டார் யார்
ஓதிவேப்பங் குழைகொண்டாடி ஓடச்சொன்னாலும்
ஏறும் எண்ணம்  இல்லாப்பேயில் இரக்கம் கொள்ளல்போல்
சோதிக் கனலாய் சூழ்ச்சிநுட்பம் சற்றே பெரிதாக 
சொல்லாப் பொய்மை சொல்லிக்  காதில் சுற்றும்பூவாக
போதித் தருவின் கீழேகண்ட புண்ணிய மாநாமம்
புன்மை பொலியப் பொழியும் உதிரப் புனலில் நீராட

நீயும்காற்றே நெஞ்சம்கொண்டு நினந்தே எம்மைப் பார்
நெற்றிவியர்வை நிலம்மீ தூற்றி நிதமும் சோறுண்டோர்
காயும் பஞ்சாய் கடுவெம்பசியில் கைகொள் நீருண்டு
சாயும் வேளை சற்றேதூங்கச் சஞ்சலம் செய்தாயேன்
சேயும் இன்றித் தாயோ நிலவைக் கண்டே விழிஊற்றிச்
சோறும் ஊட்டப் பாலகனின்றி சுற்றும் நிழல் பார்த்து
நாயும், காணா நலிவைக்கொண்டே நாளும் தூங்குங்கால்
நீயுமகுளிராம் நீசக்கரமின் நிலையில் தொடலாமோ

ஓலைக்குடிசை உரிமைசத்தம் உல்லாசச் சிறுவர்
ஓடியாடி உழுதுண்வயலில் உழைப்பின் வழிகண்டும்
வேலை அசதி விட்டேகணவன் விருப்பில் மலர்வாகி
வேளை விடியல் முன்னே எழுவாள் விளை செந்தீகண்டும்
காலைக் கதிரைக் காணும் கமலம் கனவில் நிறைகொண்டு
கையில் வேலை கடமைஎன்றே காணுமின் வாழ்வில்
காலை கட்டி காதற்பெண்டிர் காயம்  சுவைகொள்ள
காணும் காட்சி வீரத்தமிழ் இற் றைப்புறமோ அகமோ சொல்

தூண்போற் தோளும் வேளத்திமிரும் தொலைவான்அதிர்வோடு
தொட்டால் மலையும் தூளென்றாகும் தொன்மைத் தமிழ்வீரம்
’வீண் எம்மெண்ணம் வீரத் தமிழே  வெற்றிச் சங்கூதும்
வேண்டாமென்று விடியல் முன்னே  விரைந்தே பகையோடும்
மாண்பும் மறமும்  மனதில் தீரம் மங்காப் புகழ்கொண்ட
மரபுத் தமிழா மறந்தா போனாய் மதியைக் கொள்ளாது
கேண்மை என்றே கூடாப்பகையின் கூடாரத்துள்ளே
கூடிகொள்ளக் கோழையல்ல கொள்ளாய் வீரம் கொள்!

நான்கு பெண்கள் (விடுகதை கவிதை) யார் இவர்கள்


ஆடுவாள் அசைவாள் ஆனந்தமாக 
ஆனாலும் அழகுபோகாள்
தேடுவாள் சிரிப்பாள் தென்றலில் மணப்பாள் 
தீந்தமிழ்ப் பாடலாவாள்
கூடுவாள் களிப்பாள் குழந்தைபோல் சேற்றில் 
கொண்டே கால் வைத்துநின்றாள்
வாடுவாள் ஒருவன் வந்தபின் சென்றால் 
வழிபார்த்து முகம் வாடுவாள்

அலைந்தவள் ஒருத்தி அசைகின்ற நளினm 
அகமென்றும் அமைதியற்றாள்
தேங்குவாள் திரிவாள் திசையென்று கொள்ளாள் 
தேடியும் ஏதும்காணாள்
ஒங்குவாள் விழுவாள் உயிர்போவதன்ன 
உறுமியே வெள்ளைமண்ணில்
தாங்கவே வீழ்ந்து தரைபுரண் டடங்கி 
தன்னகம் திரும்புவாளாம்
 
இல்லை யென்றாலும் இரவெல்லாம் வாடி 
இன்னுமோர் பெண்ணொருத்தி 
தொல்லையும் தந்து தொட்டவன் ஓடித்
தொலை சென்றபோது ஏனோ
அல்லதும் எண்ணி அனுதினம் நொந்து 
அரைமேனி ஆகிநிற்பாள்
வல்லமை கொண்டாள் வண்ணமோவட்ட 
வடிவெனும் திருமுகத்தாள்

நேரிலே வந்தாள் நெஞ்சோடு நிற்பாள் 
நல்லுயிர் காத்து நிற்பாள்
கார்காலம் தண்மை கடுவெயில் வெம்மை
காணும்தன் நிலைமாற்றுவாள்
பேரிலோ  இளையாள் பெரிதெனும் மனதால் 
பேசிடும் கதைகள்கூறி
தேர்போலும் அசைவாள் தெருவெங்கும் திரிவாள்
தேடும் நல் மணம்கொடுப்பாள்


1. தாமரை    2.அலை (கடல் அலை)  3 நிலவு   4.தென்றல் 

சொல்லு குயிலே!

வெல்ல வல்ல பெரும் வீரர் தமிழ்க்குலம்
வெல்லு மென்றே இசைத்தாய் குயிலே
வெல்ல வல்ல என இன்று யிருப்பதும்
வேதனை கொள்வதும் ஏன் குயிலே
சொல்ல வல்லமொழி செந்தமிழாம் என்று
சொல்லிக் களித்துநின் றாய்குயிலே
சொல்ல வல்ல சொலின் கொல்லும் மொழியெனச்
சொந்தங்கள் கொண்டது மேன் குயிலே

இல்லைக் குறைவற்ற செல்வம் தமிழெனும்
எண்ணம் கொண்டு நிமிர்ந் தார் குயிலே
இல்லைக் குறையுற்றுச் செல்வர் தமைவிட்டே
இன்னல் படுவென்ப தேன்விதியே
எல்லையற்ற பலதொன்மைக் கலைநூல்கள்
எங்கள் பெருந் தேட்டம் தீ எழவே
சொல்லி யினமொழி கல்வியழிக்கவும்
சும்மாயிருந்தது மேன் உலகே

கல்லை வைத்துப்பல கட்டும் சிற்பக்கலைக்
கூடங்களும் கலைக் கோபுரங்கள்
வல்ல கடவுளை வேண்டிய போதுள்ளம்
வற்றியதோ அருள் ஏன் குயிலே
நெல்லை விதைத்ததை நீர்விட் டறுத்ததன்
நீக்கி உமிகளைந் தாக்கிய தோர்
நல்ல அமுதமும் உண்ண வழியில்லை
நாடு பறித்தனர் ஏன் குயிலே

தொன்மை இலக்கியச் சங்கத் தொகைபாடல்
சொல்ல இசையெழ நாட்டியமும்
பின்னலிட்ட பெண்கள்கூடி அடித்திடும்
பண்ணிசை யோடுகோ லாட்டங்களும்
மென்மைஉள மன்பு கொள்ளுந்தமிழ் மாந்தர்
மேதினி யெங்கும்நல் ஆனந்தமாய்
இன்பமெடுத் தியல் பெய்திடும் வாழ்வதுவும்
ஏன்செம் மொழிதமிழ்க் கில்லை குயிலே