Monday 9 February 2015

இரவா பகலா ?

மனமது உயிர்தனை வாட்டும் - விழி
மலர்களும் நீர்த்துளி ஊற்றும்
கனமென இதயத்தில் தாக்கும் - சுமை 
கவலைகொண்டுளம் இருந்தாலும்
தினமது மலர்களும் பூக்கும் - அது
துயர் கண்டும் இதழ்கள் விரிக்கும்
வனமதில் வீழ் எழிலருவி - அதன்
வகையினில் கொள் மனம்மருவி
நினைவுகள் கொண்டது வாழ்வு - அதில்
நினைப்பது நடக்கும் முயன்றால்
புனைந்திடும் கலயமும் செய்வோன் - விரல்
பிடித்திடும் வகையுருவாகும்
சுனைமலர் ஆடும் சிற்றலைகள் - தன்
சுதந்திர மெனப் பரந்தோடும்
வினைபடு கலங்குமுன் உள்ளம் - அதன்
விரைவெடு தெளிவுறக் கொள்ளும்’
துயரங்கள் நிலைப்பது மில்லை - அது
தொடர்கதை எனும் மரபில்லை
உயரமும் தாழ்வும் ஓர் பாதை - நடை
உருண்டு வீழ்ந் தெழுவதுன் பயணம்
துயரமும் மகிழ்வொரு தாயின் - மடி
தோன்றி வளர்ந்திடும் பிள்ளை
சுயநிலை மாற்ற முன் வருவர் கணம்
துள்ளி யெழுந்து பின்மறைவர்
வருவதும் போவதும் இயற்கை - நம்
வாழ்வினில் இரவுகள்பகலாய்
தரும் நித மாற்றம் ஓர் பாடம் - இத்
தரணியின் நிலை நிலையாமை
துரும்பென இரும்பதை எண்ணு - உன்
துயரத்தில் கனமில்லைப் பஞ்சு
அரும்பெரும் வாழ்விதை நம்பு - பெரும்
அதிசயம் தரும் இதன் பண்பு
***************

எங்கள் தேசம் என்று மாறுமோ?

நீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ
நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே
ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும்
உற்ற துயர் நீக்கமின்றிக் காணுதே
ஏரெடுத்து நிலம் உழுது இன்பங்கொண்டு வாழ்ந்தவர் கை
ஏந்தி வாழும் இன்னல் நிலையானதே
பேரெடுத்த வீரர்தமிழ் பேசும் பலகாவியங்கள்
பேணுந்தமிழ் மாந்தர் நிலை மாறலேன்
மாரடித்துஅழுதுமென்ன மாதர் குலம் கதறியென்ன
மானம்தன்னை இன்னல் கொண்டுபோகுதே
யாரடித்துப் போவதெனும் நீதியற்ற கூட்டத்திலே
யாருமற்றவன் நிலைபோ லானதே
வேரடிக்கு வீழ்ந்த மரம் விலங்கடித்து போட்ட உடல்
வேட்கை கொண்டு சுற்றும் ராஜ பட்சிகள்
கூரெடுத்த பார்வையிலே கொள்ளும் உணவாக எங்கள்
குலம் இருக்க விட்ட நீதி கொள்ளவோ
சீரெடுத்த பழமைமொழி செம்மொழியென்றாகுந் தமிழ்
சிதையுதொரு பக்கம் கண்கள் மூடவா
நீரெடுத்த விழி சிவந்து நிற்குதொரு குலமுணர்ந்து
நிம்மதியை காணும் எண்ணம் தேய்வதா
தேரெடுத்தும் ஓடி நிலம் தீரம்கொண்டு மீட்டகதை
தேறியும் கிடக்கும் சங்கநூலிலே
ஊரையும் ஏமாற்றித் தமிழ் உள்ளங் கோழையாக்கி நலம்
உள்ள பக்கம் சாயும் இந்த உலகமே
நான் நடந்தால் மென்மலர்கள் நீ நடந்தால் செந்தணல்கொள்
நேர்மையிதே நீதியென்றே கூறுவர்
தேன் சுரந்த பூஎனக்கு சீழ்வடியும் புண்ணுனக்கு
தீர்வு இதோ கொள்ளென்றன்பை ஓதுவர்
வான் எடுதத வண்ணம் புகழ் வாய்த்து மலை ஏறுகையில்
வாரிக்காலை கீழ்விழுத்தி ஆடுவர்
கோன் பிடித்த கோலில் கறை குருதி பட்ட வேளை அதை
குற்றமில்செங் கோலென்றுண்மை மூடுவர்
ஆனதென்ன நீதியெங்கே ஆகும் வீரத்தோளுமெங்கே
ஆட்சிசெய்த மன்னர் கதையான தின்றே
மானம்காக்க மங்கையரும் மஞ்சள்பூசி பொன்னிலவில்
மன்னர்வீர மார்பில் சாய்ந்த நாளுமெங்கே
தேனை மாந்தி கொள்வதென தீந்தமிழில் பாடிநடம்
தெய்வ கோவில் மண்டபங்கள் காண்பதென்றோ
ஆனை படை கொத்தளங்கள் அரச பரிவாரமென்றே
அன்னைதமிழ்த் தேசம்,ஆகும் நாளுமென்றோ ?
Like ·

Thursday 5 February 2015

காலத்தின் கோலம்

காலம் மாறிப்போச்சுதையா காலம் மாறிப்போச்சுது
கண்ணியமாய் காவல்செய்யும் காலம் மாறிப்போச்சுது’
கோலமின்று கூடிநின்று கொள்கைதனைத் தள்ளுது
கோணல்மனம் முன்னெழுந்து கூர்மதியை வெல்லுது
சீலமெனும் தேர்சரிந்து திக்குமா|றி ஓடுது
செவ்வடிவான் காண்கதிரும் தேயும் பிறையாகுது
ஆலமெலாம் அழகுபூசி அருங்கனி போலாகுது
ஆகமொத்தம் மின்னொளியில் அகல்விளக்கு அணையுது

காத்திருக்கும் மனமழிந்து காந்தசக்தி ஓடுது
கைப்பிடிக்குங் கருவியிலே காணுலகும் சிறுக்குது
பத்திரிகை நாளைவரும் பார்க்கலாம் என்றானது
பச்சையாக நேரொளியில் பாதிக்காட்சி ஓடுது
சாத்திரங்கள் போயிருக்கச் சத்திரங்கள் தேடுது
தத்துவங்கள் மேடைவிட்டு தம்வழியைப் பார்க்குது
ஆத்திரங்கள் கோபம் எல்லாம் அன்புதனை வெல்லுது
அத்தனையும் உள்ளமதை ஆட்சி கொண்டு பார்க்குது

மாற்றமிது மாற்றமில்லை மற்றப்பக்கம் புரளுது
மந்திரத்தை ஓதிவிட மாங்கனிகள் வீழுது
தேற்றவழி தோன்றவில்லை திரும்பி நிற்கச்சொல்லுது
தேவையெல்லாம் மின்னொளியில் தேகவண்ணம் மாற்றுது
ஆற்றலெல்லாம் கூகிளிலே ஆலவட்டம் போடுது
ஆக எங்கள் பேர்மறந்து அதையும் தேடச்சொல்லுது
நாற்றுநட்ட வயலினிலே நாம் விதைக்கப் போவது
சோற்றரிசி நெல்லையல்ல தீமைகொண்ட வாழ்வையோ