Monday 26 May 2014

ஒன்றில் ஒன்று



ஒன்றாம் ஒன்றே உண்டென்றார்கள்
 ஒன்றைத் தேடிக் காணேன்யான்
ஒன்றே துயரம் கண்டேன் வாழ்வில்
  ஒன்றாநெஞ்சம் கொண்டேனாம்
ஒன்றும் இல்லா அந்தந் தானே
 ஒன்றாம் முடிவில் தோற்றுவகை
ஒன்றில்லாத ஒன்றாய் ஆகும்
  உயிரின் முடிவில் ஏது நிலை

ஒன்றே காணும் எண்ணம் கொண்டே
 ஒன்றைக் காண ஒன்றிக்கொள்
ஒன்றோ டொன்றாய் ஆகும் தன்மை
  ஒன்றுண்டானால் வாழ்வோங்கும்
ஒன்றில் ஒன்றும் இல்லை யென்றே
 ஒன்றை எண்ணில் மாயைதனும்
ஒன்றே கடையாம் ஒன்றே எண்ணு
  ஒன்றில் ஒன்றைக் கொள்ளென்றார்

ஒன்றே தெய்வம் என்றால் உலகில்
  ஒன்றாய்  மனிதர் ஏனில்லை
ஒன்றை ஒன்று கொல்லும் வேட்கை
  ஒன்றில்தானே மனித நிலை
ஒன்றை யொன்று அன்பாய் காணின்
 ஒன்றும் தீமைக் கிடமில்லை
ஒன்றாய் காணும் தெய்வம் ஏனோ
  ஒன்றும்செய்யா துள்ளநிலை

ஒன்றை கருதீர் பொன்னில் மண்ணில்
  உள்ளம்கொள்ளும் பெண்ணாசை
ஒன்றைக் கொண்டோர் வாழ்விலின்பம்
  என்றும் தோன்றா துன்பநிலை
ஒன்றும் உண்மைஇன்பம் இல்லை
  ஒன்றும் வேண்டா உள்ளமதில்
ஒன்றாம் தெய்வம்வாழும் அப்போ
  துலகம் கொள்ளும் சொர்க்க நிலை!

ஒன்றும் வேண்டா தெய்வம்ஏனோ
 ஒன்றென் றெம்மை ஆக்கிவிடின்
ஒன்றேதேவன் ஒன்றேகுலமாம்
  ஒன்றே மொழிநாம் ஓரினமாய்
ஒன்றே யெண்ணி ஒன்றின் மீது
  ஒன்றாய் அன்பை உயிர்கொண்டு
ஒன்றை யொன்று ஒடிச் சுற்றும்
  உலகில் இன்பம் கண்டிடலாம்