Thursday 30 May 2013

எதை இழந்தோம் ?

பொன்னிழந்தோம் பொருளிழந்தோம்
- பூவையரின் தூய்மைகெடப்
- பொட்டிழந்தோம் பொங்குதமிழ் வாழ்வும்
தன்நிலையைத் தன்மானம்
- தாற்பரியம் தலைமையுடன்
- தலைமேற்பொன்  முடியிழந்து நின்றோம்
என்னபயன் எடுத்ததாளும்
- இதயத்தே துணிவிருந்தும்
- ஏய்ப்பவர்கள் காட்டியநீள் விரலில்
தொன்மை தொடர் தீரர்திடம்
- கொண்டதெனத் தோளிருந்தும்
- துன்பமதைக் கொண்டலைந்து தோற்றோம்

கண்ணிழந்தோம் காலிழந்தோம்
- கயமையுந்தன் தலைவிரிக்கக்
- கன்னியரும் காளையரு மிழந்தோம்
மண்ணிழந்தோம் மானமுடை
- மகனோடு மகளெனவே
- மனையாட்டி, மாசற்றோர் நிலமும்
எண்ணிழந்த தொகையிலெதை
- இழந்தோமென் றறியாமல்
- எல்லாமே விட்டவராய் நின்றோம்
விண்ணெழுந்த தெய்வமுடன்
- வருமென்றே எண்ணிவரும்
- விடையிழந்து வறுமைகொண் டுழன்றோம்

மண்ணிருந்து மழலையென
- மாதாவின் மடிதூங்கி
- மகிழ்வுடனே தமிழ்க் கதைகள் பேசி
வெண்ணிலவில் விளையாடி
- விடுகதைகள் பலகூறி
- வீடென்று கோபுரமாய் கொண்டு
தண்மைதரும் பனிபெய்ய 
- தகிப்பெழுந்து வெயில்காயத்
- தாவாரத்தே தூறல்மழை கொட்ட
கண்ணிரண்டு கண்டுமனம்
- களிகொண்ட நாளெல்லாம்
- காற்றோடு போனதடா இன்றோ

பெண்ணுமழப் பிள்ளையழப்
- பிணம்புரளப் பேச்சின்றி
- பார்த்தழுது வாழுமொரு வாழ்வும்
எண்ணமெலாம் என்னுயிரும்
- இருப்பதுவோ போய்விடுமோ
- எடுத்தநடை விண்ணுலகோ என்று
கண்வழியக் காதடைக்கக்
- கடையும்வயி றூடுபசி
- காற்றில்வரும் சங்கொலியோ கேட்க
அண்ணளவில் ஆவிவிட்டே
- ஆகவொரு நடைப்பிணமாய்
- அன்னை தமிழ்தேச மிங்குநின்றோம்

பொன் வேண்டாம் பொருள்வேண்டாம்
- போனநிலம் வேண்டுமதைப்
- பிறன்கரத்தி லிருந்தெடுக்க வேண்டும்
என்வேண்டாம் என்றாலும்
- இறைமைதனைக் கொண்டவொரு
- இடம்வேண்டும் எனதுரிமை வேண்டும்
மன்னர்களின் மாளிகையும்
- மணிமண்ட பம்அயலில்
- மலர்க்காவும் குளிர்ச்சுனையும் வேண்டாம்
அன்புடனே அரவணைக்கும்
- அன்னையர்க்கும் பிள்ளைகட்கும்   
 ஆனந்த வாழ்வமைதி வேண்டும்

இயற்கை வண்ணம்

இயற்கை அன்னை வரைந்ததோ இவ்  வழகுக் காட்சிகள்
வயற்கரைகள் அழகுச்சோலை வளர்ந்த  பூவனம்
நயமெழுந்த ஓடைநீரும் நடன தோகையும்
அயலிருக்கும் அழகு கண்டு அடிமையாகிறேன்

நிலவிருக்கும் நடுவிலோடி முகில் மறைத்திடும்
கலகலக்கும் குருவிக்கூட்டம் காற்றில் மிதந்திடும்
சலசலக்கும் அருவிவீழ்ந்து சத்தம் போட்டிடும்
பலதினிக்கும் காட்சிகாணப் பார்வை வீறெழும்,

தொலைவிற் பஞ்சு மேகம் பெண்ணைப்போல மாறிடும்
தொலைந்து பின்பு முயலைப் போல திரிந்து வேறிடும்
கலைவடிவம் காணும்கண்முன் காட்சிதோன்றிடும்,
நிலை இதுவும் இதயவானில் தேனை ஊற்றிடும்

பல மரங்கள் படர்கிளைகள் பறவை கூடிடும்
இலதெனவே இயற்கையின்ப உறவை நாடிடும்
நிலமிடை யோர் சிறியமானும் அருகில் துள்ளிடும்
கலகலத்தே இன்பவாழ்வும் கனிவதாகிடும்

அழகு மலர்ப் பூங்கொடிகீழ் அகன்ற விண்ணிலே
பழகும் பஞ்சு முகில்க ளோடப் பரவும் நிர்மலம்
விளங்குமெழில் விந்தைகொண்டு விடிவைநோக்கிடும்
இளங் கிளிகள் இன்ப வானில் எழவும் நாள்வரும்

மயங்கும் புவி வாழ்வு ,


தேன்குடத்தை ஊற்றியதாய் தேகஉணர் வாக்கி மெல்லத்
தித்திக்கும் இன்பங்களைத் தந்ததுயார்
வான்விரித்த நீலப் பட்டு வந்து நிறை மேகந் தொடும்
வெண்ணிலவின் தண்ணொளியில் வேகுதுபார்
தானழியத் தாகம்கொண்டு தாவுமின மாகித் தொட்டு
தூங்குகிளைத் தோன்றலென அல்லுற்று  
ஊன் படர்ந்த தோலில் பட்டு உள்ளிரென்று நோவை வைத்து
இன்பமென்று வாழவிட்டு ஏய்த்ததுமேன்

மான் கிடந்து அம்புபட்டு மாவதையில்  நீரும்விட்டு
மென்விழிகள் சோரலென்று காணுவதாய்
ஏன்கிடந்தே அல்லல்பட்டு இல்லையென்ற துன்பப்பட்டு
எண்ணிலாத வேதனையும் கொள்ள வைத்தான்
நான் நடந்து பாதைவிட்டு நள்ளிரவில் தீபங்கொண்டு
நட்ட நடுக்காட்டில் வழி தேடுகின்றேன்
வான் நடுவில் சீ றலிட்டு வீழும்பெருந் தீயைவிட்டு
வந்தஇடம் ஏதறியா வாழுகிறேன்

மேலிருந்து ஆசைப்பட்டு மேனிசொல்ல மானம்கெட்டு
மீட்ட வந்த வீணை என்று பேரும்வைத்து
காலிருந்து உச்சிமட்டும் கண்டதென்ன காதல் சுட்டு
காயிலவம் பஞ்செனவே வான் பறக்க
வாலறந்த பட்டம்விட்டு  வானில் பெரும் துள்ளலிட்டு
வீழுமெழும் மேடுபள்ள வாழ்க்கைதனைப்
போலிதுவும் சொர்க்கமென்றும் பூசொரிந்த சோலையென்று
பாலையாகித் தீதழிக்கப் பேசுவதேன்

காலையிட்டுக் கைகள் தொட்டு காணுங் கண்கள் மாயமுற்று
காதலின்பின் ஆவதென்ன காலமெல்லாம்
ஆலையிட்ட செங்கரும்பாய் ஆக்கிவிட்டு  சாறிழந்து
அங்கமெங்கும் நோய் பிடித்துத் துன்பமுற்று
சூலையென நோவில்கெட்டு சுற்றமவர் பாசம்விட்டு
சொல்லமுன்பு போகுமிடம் முழுஇருட்டு
வேதனையை நீக்கிவிட வேண்டுமெனில் நாளும்தொட்டு
வேண்டியழு சக்தியிடம் வாயும்விட்டு

*+++++++++++

Wednesday 29 May 2013

ஆகலாமோ ?

பன்முகைத்துக் கட்டழிந்த
பொன்மலர்கள் மாலைநேரம் புன்னகைக்கலாம்
கன்னமிட்ட குங்குமத்தில்
காணுகின்ற வானமங்கு  புன்னகைக்கலாம்
தன்நிறத்தில் சூரியயன்நல்
தங்கமென்று மாறி அங்கு புன்னகைக்கலாம்
நன்மனத்தில் எண்ணம்மாறி
இன்னலுற்றபோது தெய்வம் புன்னகைப்பதோ

முன்கழுத்தில் தொங்கும்அந்தப்
பொன்னகைகள் மின்னிமின்னிப் புன்னகைக்கலாம்
சின்னலைகள் ஓடுமங்கு
துள்ளும் மீனின் நீர் தெறித்துப்  புன்னகைக்கலாம்
தென்னை ஓலை மீதுகைகள்
தென்றல்கொண்டு தொட்டதாலும் புன்னகைக்கலாம்
நன்னெறிக்கென் றான  உள்ளம்
நாசம் செய்யும்போது  வாழ்வும் புன்னகைப்பதோ

கண்ணில் காணும் காட்சியாவும்
பொய்யென்றோதும் ஞானிஉள்ளம் புன்னகைக்கலாம்
மண்ணில் எங்கும் காணும்வாழ்வு
மாயை என்று கூறின் யாரும் புன்னகைக்கலாம்
வண்ணம் கொண்டமேனி பூசி
வாசமிட்டபோதும் எண்ணம் புன்னகைக்கலாம்
உண்மைகூறும் நெஞ்சம்கண்டு
ஒன்றுமில்லை சூன்யம் என்று புன்னகைப்பதோ

***********************

உழைப்பவனுக்கு ஒன்றுமில்லை


(ஆணும் பெண்ணும் மாறிமாறிப் பாடுவதாக அமைந்தது)

தேய்நிலவாய் வாடிமுகம் தேசுகுறைந் தேமனமும்
தோன்றுவதேன் ஆசை அத்தானே
போயுழுது நாற்றுநட்டு பூமிநம்பி ஆசைப்பட்டு
பொன்விளையும் காத்திருந்தோமே

தூயமனம் கொண்டுமகள்   வாழவழி தைபிறந்தால்
தேடி வரும்  என்றிருந்தோமே
பாயும் நதி கூடும்கடல் பார்த்துமனம் பேதலித்து
பாவை விழி யூற்றி நின்றாளே

நாயலையும் கேடுகெட்டு நல்லழைத்து மாடெனவே
நாமலைந்தும் துன்பம் வந்ததேன்
போயுமவர் ஏய்த்தவர்கள் பொன்னகைகள் மாடி இல்லம்
போகவண்டி என்று கொள்வதென்

மாயமிட்டுத் தெய்வமெங்கள் மனதெடுத்த வாழ்வளித்து
மேவும் சுகம் செய்வதுமுண்டோ
காயமிட்டுத் துன்பமிட்டு காலைவெயில் நாற்றுநட்டு
கண்டபயன் வேர்வை அல்லவோ

சாயமிட்டு வேடமிட்டு சத்தியத்தை கையும்விட்டோர்
சேர்த்து பணம் வழுகின்றாரேன்
தேயவிட்டு திங்களென தேகம்கெட்டும் நேர்மைகொண்டு
 தூங்கியெழென் றெழுதிவைத்தானே

ஓயவில்லை நாள்முழுதும் ஓடிஉழைத் தென்னபயன்
உள்ள உயிர்மிச்சம் ஒன்றதே

தாயெனவே வந்தவளே தங்கமெந்தன் தேவி அதை
தானுமவன் விட்டுவைத்தானே

*****************

சினம் மேவ..!

சினங் கொண்டான் சிவனென்றே
- செந்தீயின் கண்கொண்டோன்
- சிறுமையென் றோதலாமோ
மனங்கொண்டோர் நிலைதன்னை
- மாசபையின் முன்றலிலே
- மொழிந்திடத் தவறென்பதோ
வனங்கொண்டோர் குணங்கொண்டு
- வாழ்வின்று போகுங்கால்
- வகைசொல்லப் பிழை என்பதோ
இனம்கண்டோர் சொற்பொருளும்
- இருப்பதெது பொய்யோ மெய்
- எடுத்ததை அலசல் நன்றோ

கரங்கொண்டான் மழுவேந்தி
- கையிலொரு வேல் சூலம்
- காண்பதும் கடவுளன்றோ
வரங்கொண்டே வாழவிடா
- வைகயத்து வதைசெய்வோர்
- வழிகாணச் சினந்தாரன்றோ
உரங்கொண்டே அடிமைத்தளை
- உடையென்றே எழுந்தவரும்
உள்ளத்தில் கொண்டார்சினமே
தரங்கொண்ட வாழ்வொன்றைத்
- தரணியிலே ஆக்கவெனத்
- தான் சினமுங் கொள்வாரன்றோ

இனங் கண்டு ஏற்பதுவோ
- இல்லையவை மெய்யென்று
- எடுத்துரைத்துப் பார்த்தபின்னர்
கனம் கொண்டதாயின் அக்
- கணம் கொண்டும் காற்றில்விடும்
- கருத்தற்ற தென்னில்விட்டும்
மனம் கொண்ட நெறிமுறைகள்
- மாற்றங்கள் தனையேற்று
- மாறிடுவோம் மாற்றிவைப்போம்
சினம்கொண்ட பொருள்கண்டு
- சீராக்கும் செயலாயின்
- சேர்ந்துநா முழைப்போம் வெல்வோம்

சூரிய கிரகணம் (உருவகக் கவிதை)


அந்தர வானொளி செங்கதிரோன் அன்று
அம்புலியின் முன்னே வந்தது - அது
சிந்தை குளிர்வண்ணச் தேன்மதியே இது
செய்யத் தகுமோ சொல் லென்றது
அந்தியிருள் கவிந்தான பின்னே நீயும்
அள்ளியென் பேரொளி பற்றியே - நிதம்
சிந்துவ தென்ஒளி சந்தன மாயதில்
சிந்தை மயங்கினர் மாந்தரே

மந்திரமோ கறைமேனி கண்டுமிந்த
மாந்தர் உனைப்புகழ்ந் தேற்றலும் - அவர்
எந்தனொளிப் பிரகாசம் தனைக் கண்டே
ஏனோ பழி சொல்லித் தூற்றலும்
விந்தையன்றோ நிலை வெண்ணிலவே இது
வேடிக்கை உந்தன் விளைவதே - அவர்
வெந்தன மேனி ஆ..வெய்யில் கொடுமைஎன்
றெந்தன் ஒளிவிட்டே ஓடுவர்

அந்தோ காண் ஆதவா என்னியல் மேனியும்
அத்தனைபொன்னெழில் கொண்டதாம் - ஆகா
உந்தன்ஒளி யேது வெம்மையன்றோ அதில்
உன்னத தண்மையெங் குள்ளது
நிந்தனை வீணுன தென்றநிலா சொல்லில்
நீலவிண்ணில் வெயில் சுட்டது - இது
சுந்தரம்தான் மதிகெட்டவளே கறை
சிந்தையிலும் உண்டாம் என்றது

தந்திரமாய் பிரகாசம்கொண்ட ஒளி
தன்னை எடுத்தது பொய்மையா - அல்ல
சொந்தமென பெருமிந்த உலகமும்
சொல்லும் வகைதனும் பொய்யிதா
சிந்தை மயங்கிட செந்தமிழர் உன்னைச்
சின்னவள் என்னரும் காதலி - அவள்
பிந்தியவள் இளந்தங்கை நிலாவெனப்
பந்தமுடன் உனைக் கூறுவர்

மந்திரமோ என்னமாயமிட்டாய் இந்த
மண்ணிற் கவிஞான வல்லவர் -தினம்
உந்தனுடல் பிறைகொண்டு நலிந்திட
உள்ளம் கலங்கி உருகுவர்
செந்தமிழில் பல பாஇயற்றி யுனைச்
சொந்தமெனக் கொண்டு பாடுவர் - என்ன
விந்தையிது நானு மெண்ணி வியந்தனன்
வெண்ணிலவே இதைவிட்டிடு

மந்த ஒளியெழும் சந்திரனில் மனம்
முற்றும் மனம் கோணி நின்றது - ஒளி
இந்தளவு திமிர் கொண்டவனை இங்கு
என்னசெய்வதென்று நின்றது
உந்தனுளம் இவள் கொண்ட நலிவெண்ணா
உன்மத்தம் கொண்டிங்கு வந்ததோ - இவள்
எந்த பணியென இட்ட இயற்கையின்
ஏவலைச் செய்பவள் என்றது

எந்தன்முன் தேடிநீ வந்தபொழுதினில்
அந்தோ புவியிருள் கொண்டது - இதோ
சந்தன மேனிமுன் உன்னொளிகெட்டது
சென்றுவிடு என்று சொன்னது
உந்தன் பிர காசம் சின்னவள் முன்னிலை
இல்லை யென்றாக்கிய அன்னையே - அவள்
வந்து என்மேனியில் பொன்னிறம் தந்தனள்
வாழி இயற்கைதாய் என்றது.

Tuesday 28 May 2013

காணல் பொய்யா?

கற்பனைக் கெட்டாத  தூரத்திலே - அந்தக்
காற்றின் வெளியிடைத் தோற்றத்திலே - இந்த
அற்பனை ஈந்த ஒளிப் பொருளை - நானும்
அல்லும் பகலுமாய் எண்ணுகிறேன் - ஒரு
சிற்பமோ செய்கலைச் சித்திரமோ - எமைச்
செய்தது  மண்சிலை கைப்பதமோ - இது
விற்றிடவோ போட் டுடைத்திடவோ - இந்த
வேதனைப் பாத்திரம் வேறெதுவோ

சுற்றிச் சுனையெங்கும்  நீர்த்தெறிப்பு - ஒளி
சுட்டெழுங் காலை யுயிர்த் துடிப்பு - அதை
பெற்ற வகையிலோர் கண்விழிப்பு - அது
பிம்பமோ விம்பமோ பிரமையதோ -அதோ
வற்றுங் குளநீரில் வான்முகிலை - காண
வைத்து மேகம் நீரில் வீழ்ந்ததென - அஞ்சும்
கற்பனையே வாழ்வென் றற்புதமாய் - வீசுங்
கல்லில் அழிந்திடக் காட்டிநின்றாள்

வெந்தழல் வீசிடுங் காற்றினிலே - தீயில்
வேகுமுடலின் வியர்வை கண்டு - குளிர்ச்
சந்தணம்பூசிய நேரங்களை - எண்ணிச்`
சற்றே சிரித்துள்ளம் நோகுகிறேன் - இது
செய்வதே இன்பம் என்ச்சிலிர்த்து - இந்த
சிற்றாடை மூடிய நோய்ப்பொதியை - உடல்
எந்தனெனக் கூறி யாடியதை - எண்ணி
ஏனோ மனங்கொண்டு புன்னகைத்தேன்

சொந்தமெனச் சொல்லி வந்தவர்கள் - இதில்
சுத்த  பொய்யென் றுண்மை சொன்னவராம்- அவர்
வந்தார் இருந்தனர் போனரென்று ஏனோ
வாழ்வை யுரைத்தனர் காரணமென் - ஒரு
நந்தவனம் மலர்ப் பொய்கையெழில் - அதில்
நாட்டிய மாடும்செந்  தாமரையும் - இவை
எந்தவகை வெறும் கற்பனையோ - இதை
எண்ணி விடையொன்றைத் தேடுகிறேன்

சந்திரன் பூத்திடும் வானத்திலே - ஒரு
சாய்ந்த மரக்கிளை ஓரத்திலே -  அந்தோ
வந்தவன் எய்மலர் அம்பு பட்டு - ஒரு
வண்ணமான்  கொண்டதோ மெய்த்துடிப்பு - இது
நொந்தே அழிந்திட வென்றறியா - அதை
நோக்கி இரங்கியுள் ஆசைப்பட்டு - அதில்
அந்தமின்றி அழைந்தின்பங் கொண்டு - இன்று
ஆடி தளர்ந்துண்மை தேடுகிறேன்

வந்தவழி யுந்தெரிய வில்லை - மேலே
வானமா பூமியா எந்தன் எல்லை - எழிற்
செந்தமிழ் பூசிய வீதியிலே - நானும்
செல்லும் வழியிருள் கொண்டநிலை - சுக
மந்த மாருதமோ வீசிநிற்க - ஒரு
மங்கல வாழ்வு மலர்வனத்தில் - என்ன
மந்திரமோ நடைகொண்டிருக்க - இந்த
மண்ணி லென்வேடமும் மாறியதென்

நீலநிறத்தொரு வானப்பட்டு - அதில்
நிற்குங் கோள்சூரியன் ஆனமுத்து - அங்கு
கோலமிட்ட மேகம் ஓடித்தொட்டு - ஒரு
கூனல் நிலவென்னும்  தங்கத் தட்டு - இன்னும்
மேலே நட்சத்திர வெள்ளிப் பொட்டு - ஊடே
மின்னல் மழையென வைத்துகொண்டு - அந்தக்
காலதேவ தையும் என்னசெய்தாள் - இவை
காணல் மெய்யோ வெறுங் கற்பனையோ

Monday 27 May 2013

சக்தியவள் கோலம்

வெந்தெரியும் சுடுகாடெம் வீடு - அங்கு
விளையாடும் ஆவிகள்நம் சொந்தம்
செந்தணல்தீ எங்களது மூலம் -  அதில்
சேரவிடா மண்பிடித்த தேகம்
கந்தைதனும் அற்றதொரு காயம் அது
காற்றடைத்தே ஊதிவிட்ட மாயம்
சிந்தைஆசை மந்திரங்கள் ஓதும் அது
செய்வதென்ன ஒன்றுமில்லைப் பாவம்

அண்டவெளி அன்னையவள் தேசம் - காணும்
ஆதவன்கள் சக்தியினோர் பாகம்
கண்கள் பகல் காண்பதெலாம் கனவு - இருள்
காணுகையில் கற்பனையின் வரவு
எண்ணங்களோ  மின்னுகின்ற விண்மீன் - அதற்
கேற்றவகை ஆக்குமெங்கள் மண்ணின்
வண்ணமெழ நாமமைக்கும் வாழ்வு - செயல்
வந்தளவை நிர்ணயிக்கும் வீழ்வு

மண்டபங்கள் மணிமகுடம் மஞ்சம் - இவை
மட்டுல்லக் கொண்டதெலாம் சுழியம்
கண்டபடி ஆடுவதும்கனவும் - எங்கள்
காலமதைக் கணக்கெழுதக் காணும்
தண்டமெனத் தாயளிக்கும் நோயும் - நாம்
 தாங்கிய இவ் வாழ்வும்  சிறை யாகும்
கொண்ட உயிர் வான்வெளிக்குப் போகும் - பின்
கூடுவதென் மாஒளியின் மூலம்

தங்கநிலா வீசுமொளித் தண்மை - அதை
தாங்கிமனம் பொங்கியெழுந் தன்மை
மங்கிவரும் மாலையிருள் அச்சம் -துயில்
மற்றவரின் மெய்கலக்கும்  இச்சை
கங்கையெனப் பொங்கி வடிந்தோடும் - பின்
காணுமுயிர்ச் சேர்க்கை புதுரத்தம்
இங்கிவைகள் யாவும் சக்தி யாக்கம் - இதில்
ஏதெனவோர் இயலபறியாத்  தூக்கம்

இங்கிருந்து செல்லுமிடம் நித்தியம் - அதில்
இணைவதுவே முடிவுகாணும் சத்தியம்
பங்கெனவே நிலம்பிரித்த வாழ்வும் - கொள்ள
பாரில் அதைப் பறித்தெடுக்கும் யாவும்
இங்கெமையே ஒட்டிநிற்கும் காந்தம் - அது
இல்லையெனில் வீழ்ந்திடுவோம் வானம்
பொங்குமெழில் இயற்கையுங் கொள் பாசம் - காந்தப்
பிடிப்பைவிட மனிதகுலம் சூனியம்.

Thursday 23 May 2013

பொறுமைக்கும் எல்லை! உண்டு!

போதும் பொறுத்தது பொங்காய் - இந்தப்
பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய்
ஓதுமே சாத்தானும் வேதம் அதை
உண்மையென்று நம்பி ஓடாதே பக்கம்
தீதும் இனித்திடக் காணும் - அதை
தின்ற பின்பே வலி கொள்ளும் உதரம்
யாதும் பெரும் நிழலாகும் - இந்த
ஞாலம் ஒளிபெற்றும் உள்ளிருள் காணும்

கட்டியே காலுடன் கையும் - சுட்டுக்
காட்டிய தேகங்க ளெத்தனை கண்டோம்
மெட்டி அணிந்திட்ட மாதர் - உடல்
மீது குதித்திடும் பேய்களும் கண்டோம்
கொட்டிக் குடித்துக் கூத்தாடி - அவர்
கொச்சைமொழி கொண்டு நம்மவர் காட்டி
திட்டித் தமிழினம் சாய்க்க - நாமும்
திக்கெட்டு மோடித் திசைபல கொண்டோம்

அத்தனை தேசங்கள் யாவும் - அன்பில்
அத்தை நான் மாமனென் றண்டையில் வந்தார்
கத்திக் கதறி யழுதோம் - அவர்
காப்பது போற்பல வேடங்கள் கொண்டார்
பொத்திப் பிடித்திட வெள்ளம் - அது
பிய்த்துக் கொண்டோடிடும் நம்மவர்நெஞ்சோ
உத்தமம் தானென்ற போதும் - இன்னும்
எத்தனைநாள் பெட்டிப் பாம்பென வாழ்வும்!

சத்திய மேமுடி வாகும் - இது
சாத்தியமோ எமைக் கொன்றொழித் தாலும்
வித்தாய் முளைத்தெழும் மண்ணில் - இது
வெட்டி யழித்திட வேர்புதி தாகும்
எத்திசை போயிருந் தாலும் - நாமும்
ஈழமெனும் அன்னை தேசத்தின்பிள்ளை
வைத்த அன்புமனம் கூடும் - எமை
வாரி பிடித்துமண் வைத்துக் கொண்டோடும்

எத்தனை பேச்சுக்கள் கண்டோம் அவை
அத்திப் பழமென சொத்தைகள்தானோ
கத்தி சொருகிட வந்தோர் - பலர்
கட்டிய ணைத்துப்பின் காரியம் கொண்டார்
சொத்திக் கால் பச்சைமரத்தில் - ஏறிச்
சொர்க்கம்நடை கொள்ள உத்தியும் கூறி
வைத்தவர் வாழ்த்த நடந்தோம் வழி
வானமல்லக் கீழே பாதாளம் கண்டோம்

வைத்தியம் பார்த்திட வேண்டும் - தம்பி
வக்கிர உள்ளங்கள் வாதத்தை தீர்க்க
புத்தி கொண்டு திட்டம்போடு - கோடி
புண்ணியமுண்டு நீஒன்றாகக் கூடு
எத்திசைதா னிருண்டாலும் - காலை
ஏறும்சுடர் தன்னில் விண்ணொளி தோன்றும்
மொத்தம் விடிந்திட வேண்டும் - எங்கள்
முந்தைத் தமிழர்பொற் காலமே வேண்டும்

செந்தமிழ்ப் பாவெழவேண்டும் - பெண்கள்
சிந்துபடித் தின்ப நாட்டியம் செய்ய
வந்திருந்து குழலூதிச் - சிலர்
வாயசைத்தே தமிழ்க் காவியம்பாட
சந்தணமும் மலர் சோலை - தனில்
சார்ந்த மலர்மணம் வீசிடும் காற்றில்
சொந்த நிலம் என்றுஆடி - மக்கள்
சுந்தரமாய் விளையாடிட வேண்டும்

************************

தீயாய் பொசுக்கிடு !

தீயெடுத்து வீசடா தீங்கினைப் பந்தாடடா
தீமையோடு மோதி வெல்லடா
வாயெடுத்துப் பேசுவோர் வார்த்தை ஜாலம் நூறடா
வாழ்விலேதும் மீதமாகுமா
பாயெடுத்து தூங்கவா பாவைமேனி ஆளவா
பட்டுடுத்து ஆடிப்பாடவா
நோயெடுத்து வீழவா நூறுகாலம் ஆயுளா
நிற்பதோ தீமேலே காலடா`

தாயெடுத்துக் கையிலே தீந்தமிழ்ப் பாலூட்டியே
தங்கவிட்ட திங்கு மேனடா
பேயெடுத்த கோலமும் போதைகொண்ட கள்ளரும்
புன்மை செய்யநீ முடங்கவா
காயமிட்டு வெட்டவும் காலினா லுதைக்கவும்
காண இன்னும் பேடி நாமோடா
நீயெழுந்து கேளடா நீதி தேவன் பார்வையை
நீள்கறுப்பு துண்டுமூடுமா

தூயஅன்னை செந்தமிழ் தீங்கில்லாத வாழ்வுடன்
தேசமொன்று தாயகம் அதில்
வேய இட்ட வேலியும் வீடுஎன்ற கோவிலும்
வேண்டுமென்று கூடிநில்லடா
தோயஎன்ன வான்மழை தூங்க என்ன மாவனம்
தேய அன்ன வெண்ணிலாவென
மாய வாழ்வு வாழென மந்திரத்தை போடுவர்
மாற்றமென்று மாண்டுபோவதா

தேய் மனம் துரத்தவும் தேசமெங்கள் மீட்கவும்
தேடிநூறு காலில் வீழ்வதா
பேய்குணத் திலோடவர் பிள்ளையென்று வாயிலே
போடும்பிச்சை தின்று வாழ்வதா
மாய்மனத்தின் மாயங்கள் மாறு நீ கரத்தெடு
மற்றதென்ன விட்டுநின்றதை
தீயென்றாக்குத் தீமைகள் தேசம்மீள் சுதந்திரம்
தேவை தீயைபோல் எரிந்திடு

Friday 17 May 2013

நடப்பதென்ன??


நடந்த கால்கள்  எங்கே இன்று உடைந்துபோனதோ - இல்லை
உடைந்த உள்ள உறுதி நெஞ்சில் படர்ந்த சோர்விலோ
கடந்த கால திடமும் ஏது முடங்கலாகுமோ - இன்று
மடமை கொண்டு  மனமிழந்து கிடந்து தூங்கவோ

அடங்கலின்றி  வீறுகொண்ட அண்ணன் தம்பி பார் - நீயும்
கடன் என்றோடி கருமம் ஆற்றக் கலங்கி நிற்பதேன்
திடங்கொள் நெஞ்சும் தெளிவு இன்றி மடங்க லாகுமோ - போகும் 
இடங்கள் யாவும் வெறுமைகாண இருக்கலாகுமோ

படங்கள் காணும் வதைகள் தம்மை தடங்கல் இன்றியே - செய்ய
உடந்தையாகும் உனதுமௌனம் தொடர்ந்து காணுமேல்
உடல்கள் மீது குதித்து ஆடும் உதிரம் காண்பவர் - என்றும்
விடங்கொள் பாம்பை விலங்கையொத்த  வெறியர் ஓட்டிடு

திடமும் தீரம் கொண்ட சொந்தம் திரும்பிப் பாரடா - சற்றும்
அடங்கலின்றி ஆற்றல் கொண்ட அண்ணன் தம்பிடா
முடக்க என்று முனையும் சக்தி முந்தியெழ முதல் - நீயும்
நடந்து செல்லு நீதி கேட்டு!  நடந்துசெல்லடா !

குடங்களாக குருதி மீண்டும் கொட்டமுன் எழு எதிரி
நடனமாடல் எங்கள் சாம்பல் மேட்டில் எண்ணிடு
புடங்கள் போட்டு எடுஉன் உள்ளம் புதிதுஆக்கிடு - மீளத்
திடங்கொள் தோளில் வீரம்பொங்க தொடர்ந்து நடந்திடு

Sunday 12 May 2013

கண்டதென்ன? !!


நீரைக் கண்டேன் நெருப்பைக் கண்டேன்’
நீந்தும் பூக்கள் நீரில் கண்டேன்
ஊரைக் கண்டேன் உறவைக் கண்டேன்
உறங்கும் விழியுள் இருளைக் கண்டேன்
நாரை கண்டேன் நாணல் புதருள்
நெளியும் பாம்பும் நில்லா துள்ளும்
தேரை கண்டேன் தமிழாம் அன்னை
தேசம் காக்கும் திறனைக் காணேன்

வானைக் கண்டேன் வானில் வில்லாய்
வண்ண ஏழும் வளையக் கண்டேன்
தேனை ஊற்றும் திங்கள் ஒளியும்
தேயும் வளரும் தன்மை கண்டேன்
பானை வயிற்றில் பலரைக் கண்டேன்
பாவை சிரிக்கும் அழகைக் கண்டேன்
ஏனோ எந்தன் இன்பத் தமிழ்மண்
இறைமை காக்கும் வழியைக் காணேன்

தேரைக் கண்டேன் தெய்வக் கோவில்
திகழும்தீபம் ஒளிரக் கண்டேன்
தாரை யாகக் கொட்டும் மழையும்
தரையில் நெளியும் நதியும் கண்டேன்
வேரைக் கொண்ட மரமும் கிளையில்
விளையும் கனிகள் தூங்கக் கண்டேன்
ஊரைக் காக்கும் தெய்வம் மட்டும்
உண்மை கொண்டே இரங்கக் காணேன்

வாழ்வைக் கண்டேன் வளமும் கண்டேன்
வாழும் மனிதர் சிரிக்கக் கண்டேன்
தாழ்வில் லாத்தலை முறையென் றங்கே
தளைத்தே ஓங்கும் தகமை கண்டேன்
வீழ்வே இல்லை வெற்றிக் களிப்பும்
வேற்றாம் மொழியில் கண்டேன் ஆயின்
ஆழ்ந்தே உறங்கும் அமைதிக் கணமும்
அன்னை மண்ணில் காணேன்! காணேன் !!

**************

வேல்முருகா வேளையிதோ?


நீள் மகுடம் ஏந்திதமிழ் நிலம்பிரித்தும் ஆண்ட இனம்
நேர் எதிராய்கீழ் கிடப்பதேனோ
ஆள்திறனும் ஆற்றலுடன் அரசுகொண்டு ஆண்டகுடி
அந்நியர்க்கு அடிமைகளாய் வாழ்வோ
தோள் வலித்த தீரமெழும் தீந்தமிழர் இனமழித்துத்
தூயகுலம் வாழ்வழித்த தீயர்
சூழ்நல் லூரில் வாழ்முருகா சுற்றித் தீவினைகள் ஆக்கும்
 சூரனைச் சம்ஹாரம் செய்ய வாநீ!

ஊழ்வினையோ ஈழமதில் உள்நுழையும் பாவியினம்,
ஊரழித்துக் காணிநிலம்கொள்ள
யாழெடுத்து மீட்டிடவோ யாரி்டம்கால் வீழ்வதுவோ
யாரிவர்கள் தொன்மை மறத்தீரர்
வாள் எடுத்துச் சொந்தஇன வாழ்வைவந் தழிப்பவனை
வீழ்த்தவென வேட்கை கொண்ட மன்னர்
தூள் கிளப்பும் நூறுகதை தொன்மைபெருங்காவியத்தில்
தேடி நாம் படித்த துண்மை யன்றோ

சேல்விழிகொள் மாதர்குலம் சீரழித்த காட்சியெலாம்
சேர்த்து வைத்து பார்த்த விதியேனோ
வேல் பிடித்த  வினையழிக்கும் வள்ளிமணம் கொண்டவனே
வெற்றி என்ப துன்சினத்தில் உண்டு
சூல்தரித்த பெருவயிறும் சுட்டொழிக்கும் கீழ்இனத்தர்
சொல்லிஒன்று சேர்ந்துநிற்கக் கண்டும்
பால்வடித்த வாயினரும் பாவையரும் தாயவரும்
பலிகொடுத்தும் ஒன்றுசேரல் விட்டோம்

உயிர்எடுத்துச் சிரிசிரித்தும் உண்மைதனைப் புதைத்தவராய்
உறுதிகொண்டு காணும் பகையங்கு
வயிறெரிந்த உலகமிது வயிரமென்னும் ஈரமற்ற
வாணிகத்து நேசங்களை காத்து
கயிறெறிந்து காலன்வரக் கட்டித்தொகை யென்றனுப்பக்
கடனுமுண்டோ எழுதி வைத்ததேது
உயிர்பறிக்க மாவுலகும்  இசைபடித்து ஆடுகையில்
எம்கடமை என்ன வந்து கூறு!

***********

வாராயோ வெண்ணிலாவே!


நேற்றுவரை நீயிருந்தாய் வெண்ணிலாவே - இன்று
நேசமின்றிப் போனதெங்கு வெண்ணிலாவே
தூற்றியுனைத் தேயவிட்ட  தார் நிலாவே -  உன்னைத்
தூக்கியவர் வைத்த முடி விண்ணில்தானே
தோற்றுவ தென்றான பின்னே வெண்ணிலாவே -நீயும்
தோழமை கொண்டோடி வாராய் வெண்ணிலாவே
பாற்குவளை கொட்டியதாய் வெண்ணிலாவே - வந்து
போர்க்கு மிருள் நீக்கி ஒளிர் கொள்ளுவாயே!

பூத்திடும் நற்சோலைமலர் வெண்ணிலாவே  - உந்தன்
பூ முகத்தைப் போலிருக்கச்  காணுவேனே
கூத்திடும் தென்னோலை நீவும் காற்றும் தானே  உந்தன்
கோலவண்ணம் மாற்றமுகில் தள்ளினானோ
சாத்தி வைத்த கோவில் தெய்வம் கண்டிடாதோ - உன்னைச்
சஞ்சலத்தில் நீக்கி அருள் செய்யும்தானே
நீ(த்)திரும்பவந்து ஒளி பொங்கும் வானே   - முகில்
நீங்கிய பின்  எந்தன்மனம் உண்ணும் தேனே

சாத்திரங்கள் தேவையில்லை வெண்ணிலாவே -  உன்னில்
சத்தியமாய் காதல் கொண்டேன் வெண்ணிலாவே
ஆத்திரங்கள் கொள்ள வேண்டாம் பொன்நிலாவே - மனம்
ஆற்றுமொரு புன்சிரிப்பு  கொள்ளும் நாளே
தோத்திரங்கள் சொல்லி வைத்தேன் வெண்ணிலாவே - அந்த
தெய்வம் விழி பார்த்துவிடும்  இந்த நாளே  
பூத்ததில் கள் உண்ணவரும் வண்டு போலே - துயர்
போக இன்பம் நாடிவரும் வெண்ணிலாவே

நீர்த் துளிகள் பார்வைமீது வெண்ணிலாவே  -அதை
நீயும் கொள்ளத் தேவையில்லை வெண்ணிலாவே’
பார்த்திரு நல் லின்பத்தோடு வெண்ணிலாவே  - நீயும்
பாதைகண்டு  போகும் நிலை கொள்ளுவாயே
ஆர்த்தெழும் பல் புள்ளினங்கள் செல்லும்போதே -  அதில்
ஆனந்தமென்றாவது போல் வெண்ணிலாவே
சேர்த்துனது துன்பமெல்லாம்  போகும் காணே! - நீயும்
செல்லுகின்ற வான் தெளிந்துகொள்ளும் பாரேன்
**********************

அலைவாழ்வில் மலைபோலும் திடமான கலைதா


மணிநாத கலை சந்தமெழ ஆடும்சிவனோடு
மலைவாழும் அருள் பார்வதி - உனை
அணிபாத மதில்வீழ்ந்தும்  அழகான தமிழ்கூறி
அறம் மேவ வரம் கேட்டனன்
தணியாத மகிழ்வோடு தலைமீதுபெரும் பாரம்
தனைநீக்கு உளமானதில் -இனி
பிணியாதல்இலதாகப் பெருவான வழிமீது
பறந்தோடும் மகிழ்வாகச் செய்

தணியாத திரையாடு விரியாழி பெருநாகந்
தனைவென்று அணையாகவே - தன்
பணியாக துயர்நீக்கும் பதியான  கலைநீல
படர்வண்ண மொடுநின்றவன்
துணிவோடு இணைபாத மடிகாணு மலைதேவி
துயர்காண அதையோட வை
பிணியான துவழ்கின்ற பெறுமானம் தவறென்று
பிறைவாழ்வை முழுதென்றுசெய்

கணிபாட மொடுகல்வி கலைதாரும் குலதேவி
குளிர்தாம ரைமீதிலே
அணியாகக் கரமேந்தும்  ஒருவீணை யிசைபாட
அருள் தானு  முளம் வேண்டவும்
துணிவான தனையீந்தும் மணிமாலை பொருள் தாரும்
மலைதேவி அலைமங்கை போல்
பணிந்தேன் நல்லுயிரோடு பலகால வாழ்வேங்கும்
பயனீந்து கலை தா வாணி!

அஞ்சலி ஒரு அன்னைக்காக



நீரினில்  தீவந்து பற்றலாம்
  நெஞ்சினுள்  தீ பற்றிக் கொள்ளுதே
வேரின்றிப்  பூமரம்வீழலாம் 
  விட்டுயிர் பூவுடல் வீழவோ
நேரின்றித் தெய்வமும கொள்வதும் 
  நீர்வற்றக் கண்ணீர் வடிப்பதும்
பாரினில் எம்மினப் பாடுதான்
  பார் இதில் நீதியோ  வேறுதான்

எங்களின் அன்பெனும் தெய்வமே
  இன்னும் இதயத்தின் உள்ளேநீ
தங்கியிருக்கையில் தாங்குமோ
  தாயே பிரிந்திடல் ஆகுமோ
பொங்குது கண்களில் நீரெல்லாம்
  போதுமென்ற தினி இல்லைத்தான்
வெங்கனல் இட்டதாய் வாழ்வுதான்
   வேகும் மனதென்றும் சோகம்தான்

போவது வாழ்வி லெல்லோரும்தான்
     போகுமிடம் தெரியாதுதான்
ஆவதுஒன்றென ஆயினும்
  ஆண்டவனே இது நேரமா
பூவது வாடிடும் மட்டும்நீ
    பூமரத்தில் விட்டதில்லையே
நாவதுவற்றக் கதறினோம் 
   நாளிலெம் தாயைப் பறித்ததேன்

கூனியுடல்கொண்டவேளையா
  கொண்டுநடந்திடப் பாரமா?
ஏனிங்கு கூற்றுவன் வந்தனன்
  ஏதும்கேளா தன்னைகொண்டனன்
தானிதை நேர்மையென் றோதவா
  தாங்கவில்லைத் துயர் பாரய்யா
மேனிதுடிக்குது கேளய்யா
 மீண்டுமன்னை விழி காண்போமா

கோடிஒளிமின்ன வான்வெளி 
 கூடிஒன்றாடிடக் கோள்களும்
ஓடிச் சுழன்றிடப் பூமியும்
  உள்ளே உயிர்களின் வாழ்வையும்
ஆடிநடம் புரிஆண்டவா 
   அத்தனையும் செய்தாய் வீணடா
நாடி அன்புகொண்டே வாழ்ந்திட
  நல்லவரை விட்டதில்லையே !

காதலெனும் சாவினிலே


மாலையிளங் காற்றணைந்து மேனிதொட நாணுகிறேன்
மன்னவனே ஏன் பிரிந்தாயோ
சோலைமலர் வாசமெழச் சேதி வரும் காலையெனச்
சிந்தைபகை கொள்ள நின்றாயோ
பாலைவன மாயுடலும் பால்நிலவில் தீயெழுந்து
பாவையெனில் தீங்கு செய்வதேன்
ஓலைபல நானெழுதி உத்தமரே தந்துமென்ன
ஊமை விழியாகி நிற்பதேன்

காலைஅலர் பூநிதமும் காண வண்டை ஏங்கியழும்
காற்றும்துணை தேடிஓடிடும்
மாலை நிலா தன்துணையை மௌனமுடன் தேடிவரும்
மாற்றமில்லை தேய்ந்துபோவதும்
மேலைக்கடல் நீர்த்திரைகள் மேனிசுருண் டோடிவரும்
மீண்டும் விழும் காண ஏங்கிடும்
தோலை எழில் பட்டிதமும் சுட்டெரிக்கும் நீபிரிந்தால்
தேவியெனைச் சா அணைத்திடும்

சோலைதனில் பூமலர்ந்தும் சூடமனம் நாடவில்லை
சோகமெழக் காணுகின்றேனே
சேலையிலே காற்றுமெனை சீண்டிவிடத் தொட்டிழுத்துச்
செய்வதுமென் கேலியும்தானே
நாலைக் குணம் கொண்டவளோ நாணமதை விட்டொழிந்து
நாளுமுனைத் தேடுகின்றேனே
வாலைமகள் வாய்திறந்து வாஎனவே பாடியுமென்
வாழ்விலிது காதலென் சாவோ?


Wednesday 8 May 2013

தாய்மைத் துயரம்

உடலேன் உயிரேன் உணர்வேன் உலகேன்
உறவேன் சொல்சக்தி
கடலேன் கதிரேன் கனலேன் கனவாய்
காணின் இவைசக்தி
விடலேன் வயதின் விளையும் இளமை
வளமேன் எழில்வற்றி
கெடலேன் குருதி சீறிப் பாயும்
கொலையேன் சொல்சக்தி

விருந்தேன் அருந்தும் விதமேன் உணவும்
விளைவில் நஞ்சாக்கி
மருந்தேன் மகிழ்வேன் மனதில் பிணியாய்
மனிதர் பிணமாக்கி
தருந்தேன் கசந்தும் தந்தாய் ஏன் ஏன்
தவிப்பே மூச்சாக்கி
இருந்தேன் போனேன் இதுவோர் வாழ்வா
இழிவில் இழிவாக்கி

பெண்ணேன் பொன்போல் பொலிவேன் அழகேன்
பெரிதென் றுடலாக்கி
மண்ணேன் மண்ணை மாக்கள் ஆளும்
மடமை நிலையாக்கி
பெண்மை தாய்மை பருவம் காதல்
பிரமை உருவாக்கி
என்னே கயவர் இதனை சிதைக்கும்
இயல்பும் தந்தாய்நீ

கண்ணே காணாக்கடவுள் என்றே
கதறிக் கரம்கூப்பி
அன்னை குலமும் காப்பாய் அதுவே
அறமென் றிறைநோக்கி
முன்னே நின்றார் முழுதும் தமிழை
மொழியாய் பேச்சாக்கி
என்னேகேட்டும் இரங்கா தழியும்
இதுவா வரும்நீதி?

கருவில் தோன்றிக் கையில் தவழ்ந்து
காலால் உதைகொண்டு
உருகித் தவழ உள்ளம் பூத்து
உவகை பெரிதென்று
வருகின் றழகில் வாழ்த்தி மகளே
வருவா னிளவரசன்
தருவான் வாழ்வில் தயவும் வளமும்
தாய்மை கனவாக்கி

இகழக் கொலைஞர் அழகைச் சிதைக்க
அரிதோர் பூமாலை
அகலக் கிளையில் எகிறிப் பாயும்
இனத்தின் கரமீந்து
துகிலைக் கொடியாள் துஞ்சத் துவள
துடிப்பைப் படமாக்கி
நிகழும் கொடுமை நிகழ்வா உலகுக்
கின்னோர் கண்காட்சி ??

உலகம் இதுவேன் உண்மை உளதேன்
இறைமை உரிமை ஏன்
கலகம் செய்யும் குணமும் களவும்
காழ்ப்பும் இருளும் ஏன்
உலவும் பேய்கள் உயிரைக் குடிக்கும்
ஒநாய்க் கூட்டம் ஏன்
பலமும் பெரிதாய் தீயோர் ஆளும்
பிறள்வுக் கெது நீதி?

Thursday 2 May 2013

அழகான நாட்கள்


நேராக நிமிர்தோங்கும் தென்னை பனையோடு
நேருயர்ந்து நின்றதெங்கள் ஈழம்
தேரோட மணியோசை தெய்வ வலமென்று
திருவருள் பொலிந்தாடும் காலம்
ஏரோடி உழுதவயல் எழுந்தபயிர் பச்சை
இசைபாடுங் குயில் தோகை நடமும்
காரோட வளைந்தோடும் கரும்வீதி பக்கம்
கனிதூங்கும் மா நின்ற ஈழம்

பழமை கொண் டிருந்தாலும் பழுதின்றி ஓடும்
பாதைவிரை வண்டிகளின் தோற்றம்
இளமாலை சொரிகின்ற இதமான பூக்கள்
எழுந்த மரச்சோலைகளில் பறவை
மழை தூறிப் பெய்தாலும் தமிழ்சந்தம்போடும்
மனமெங்கும் சுகபோதைக் கானம்
துளைகுண்டு தினமோலம் எனவாக்கிஇறைவா
தெருவெங்கும் பிணம் போட்டதேனோ
.
அதிகாலைப் பொழுதேனும் அந்தியிருள் நேரம்
அமைதிகொள் இயற்கையின் தோற்றம்
புதிதாக விடிந்தாலும் போய் மறையும் கதிரின்
பின்னெழும் முன்பனிக் கூதல்
விதிமாறி வேற்றுமொழி வைக்கின்ற சட்டம்
விடியலில் எழும் அச்சம் இல்லை
சதியேதுமில்லை ஒருதனியான பிள்ளை
சற்றும் மனம் அச்சமின்றி ஏகும்

வீராதி வீரரென வெகுண்டெழும் பகைமை
விளையாடி வெல்லும் இள மாந்தர்
போராக எம்மீது படைகொண்டுதேசம்
பலிகொள்ள வந்த நிலையாதும்
பேராக எதிர்நின்றும் அணிகொண்டதாலே
பெரும் வீர த் திறன் கண்டு அச்சம்
வேரொடுவெட்டி இனம் முற்றாக வீழ்த்த
வெறி கொண் டிணைந்த முழு உலகும்

குளம்மீது அலர்கின்ற தாமரைகள் போலும்
குடிமக்கள் விழி பூத்தெழுந்து
தளம்புமலை மீது துள்ளும் சிறுமீன்துடிப்பில்
தன் வேலை கல்வியென்று ஓடும்
வளம் மிகுந்த திருநாடு விளங்கிய தோர்காலம்
வந்ததெங்கள் ஈழமகன்வம்சம்
உளம் மீதுநஞ்சுடனே உருவான எதிரி
ஒன்றாகிச் சிதைக்க விடலாமோ