Thursday 22 January 2015

இயற்கையின் அழகும் எமதுவாழ்வும்

கண்ணைத் தந்தே காட்சிகள்செய்தார்
கானல் விம்பங்கள்
மண்ணைத் தந்தும் மானிடவாழ்வில் 
மாயக் கனவுகளாய்
எண்ணச் சொல்லி நினைவுகள் வைத்தார்
எழுமாம் விகாரங்கள்
புண்ணைக்கொண்டோர் தேகமும் தந்தே
புனிதம் போற்றென்றார் 

வண்ணங் கொண்ட நிலவைத் தந்தார்
வீசும் பொன் னொளியில்
தண்மை நீரில் தலையை ஆட்டும்
தாமரை நடமாட
விண்ணைக்கட்டி நீலவிதானப் 
பட்டில் மணி வைத்தார்
உண்ணக் கழியும் உடலைத் தந்தே
உயிர்கொள் வலிசெய்தார்

வட்டப் பரிதி வந்தே ஏறும் 
வானத்தின் வெம்மை
விட்டுத் திரும்பிச் செல்லும் முகிலோ 
விண்ணிற் பஞ்சணைகள்
நெட்டைப் பனையும் தென்னைகளூடே 
நிரவும் ஒளி செய்தார்
கட்டிப்போடும் பாசமென்னும்
காயப் பிணைப்பு வைத்தார்

மட்டும் அவற்கே உரிதாம் என்னும் 
மண்ணை பறித்திடுவர்
எட்டும் வரையில் தெய்வம் கேட்டும் 
எதுவும் அசைவுன்றி
கட்டும் மரத்தில் காணும் கடலில் 
காற்றில் பிரயாணம்
விட்டே திசைகள் வீணே அலையும் 
விம்பத் திரைக் காட்சி

No comments:

Post a Comment