இங்கு கிரிகாசன் எழுதிய கவிதைகள் மட்டுமே யுண்டு இந்த குயில் கூவும் ஓசையையே இங்கு கேட்கலாம்

Tuesday, May 29, 2012

தேர் கொண்டு வந்தான் தேவன்




தேரேறு என்கிறான் தேவன் - கண்ணில்
தோன்றாத வன்போலும் திரும்பிநான் நின்றேன்
வாரியே பூக்கொண்டு வீசி - நீயும்
வாழ்ந்தது போதும்வா வந்தேறு என்றான்
பாரங்கு என்றனன் வானில் - அங்கு
பார்த்தனன் வெள்ளியும் பொன்னாக மின்ன
ஏதது தாரகை என்றேன் - ஆகா
இன்பமாம் மேல்வாழ்வு அங்கென்று சொன்னான்

நீரூறு கண்களைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டாயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
வேடிக்கை கொண்டுமே விளையாடி நின்றான்
நோயுறு தேகமும் கொண்டு - இங்கு
நிற்கவும் ஆகாது நொந்தனே என்றால்
காயமே பொய்யடா என்று - கையும்
காட்டியே வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை காணாய்
ஊரடா முற்றிலும் அனபே - கொண்டு
உள்ளது காணென்று உற்றதைக் கூற
பேரது ஆகிய தேவன் - என்னைப்
பின்னும் நலிந்திடப் பண்ணியே துன்பம்
ஈரமோ இல்லாத போலும் - என்னை
இம்சித்த விதமான தெப்படிச் சொல்வேன்

பாயில் கிடஎன்று  தள்ளி  - எனைப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தந்ததை கொண்டிட ஏனிந்த வம்போ
வாயில் சினம்கொண்டு சொன்னேன் அவன்
வாழ்ந்த உன் மேனியில் வாஞ்சை கொண்டாயோ
பேயிலும் இழிவான  பிறவி - இதில்
பேராசை கொண்டிடப் போனதேன் புத்தி

நாளொன்று போயுயிர் செத்தால் - பிணம்
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - மேனி
தீயில் எறிந்திடச் சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினை தானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதை வானம்நீ வந்தால் - அங்கு
தீயாக மாறியே திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமாய் அறியேன்
கொல்வது என்றுதான் வந்தான் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லையாம் இன்னொன்று நரகம் - காண்
இப்புவி தானுந்தன் சொல்லிலே நகரம்

கொள்வது எல்லாமும் துன்பம் - வானில்
கொட்டும் மழைகாணும் மின்னலே இன்பம்
அள்ளிவீ சும்புயற் காற்று - அது
ஆக்கும் துயர்விடப் பெரிதாமோர் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உற்றுழல் வாழ்வினை இனிதென்பதேனோ


நில் இன்னும் ஓர்சொற்ப காலம் - வாழ
நெஞ்சினில் ஆசையும் கொண்டனன் என்றேன்
நல்லதென் கூற்றினை கேளாய் -பின்பு
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
நல்லதோர் புவி செய்து ஈந்தேன் - அதை
நாளும் நரகமென் றாக்கிக் களித்தே
பொல்லாத சேற்றினில் வாழும் ஒரு
புழுவாகி நாற்றத்தைப் போற்றினாய் என்றான்

என் வாழ்க்கைப் பாதையில் சில அடிகள்

*********
வானத்தில்மேடை யிட்டு வடிவத்தில் பூவிரித்து
மோனத்தில் ஓம் என்னும் மூலத்து ஓசையிட்டு
ஞானத்தைப் படைத்தவளே நானிங்கு சொல்வதுண்மை
தேனைத் துளிகளிட்டு தீம்பாவைத் தந்திடுவாய்
********************
பிறந்தேன் வளர்ந்தே னொரு பேதைக்கு மகனானேன்
அறந்தேன் எனக்கொண்டு  அழகுற என்தாய் மடியில்
திறந்தே விழிகண்டேன் திருவூராம் பூங்கொடியின்
நிறங்கொள் ஓரூரில் நிமிர்ந்து நடைகொண்டேன்

வளர்ந்தேன் வகையென்ன வளஞ்செழித்த ஊரழகில்
குளம், தேர் கோவில் சிறு குடிசை மலர்க்காடென்று
உளம்தேனுண்ணத் தனி ஊரெல்லாம் சுற்றிடுவேன்
களம்போர் எனக் காட்சி கருமைகொண்டெழ முன்னே

மலரும் மலர்த்தேனும் மயக்குமெழில் வாவியுடன்
பலரும் வழிபட்டே பயனடையும் ஆலயமாம்
குலவுமினி கல்வளைப் பிள்ளையார்கோவிலதை
நிலவுமென் வாழ்நாளில் நெஞ்சம் மறக்காது

ஆனைமுகத் தானை அன்னையவள் துதித்திருக்க
தேனைத் தேடுமொரு சில்வண்டாய் கோவிலதை
நானே சுற்றிடுவேன் நறுந்தேன் உடை பூவும்
வான்தொட்ட வரைவிரியும் வயல்வெளியும் கண்டிருப்பேன்

உச்சிவெயில் மின்ன உள்ளதொரு காட்சியெனும்
பச்சைவயல் பரப்பும் பறந்துசெலும் குருவிகளும்
இச்சை உணர்வெடுத்த ஏகாந்தச் சூழ்நிலையும்
அச்சோ அச்சச்சோ அதுமீண்டும் வாராதோ

கோவில் மணியடிக்க கோபுரத்தே தூங்குமணி
தாவிப் பிடித்தெம்பி தரைவிட்டுத் தொங்கிடவே
மேவி ஊர்முழுதும்  மெல்லப் பரவிடுமாம்
தேவஇசையும் ‘டாண்’  தேனோசை சேர்ந்தெழுமே

பூசை முடிந்தவுடன் போகும் வழிதிரும்ப
ஆசையுடன் நெல்வயலில் ஆடி அயல் திரிந்து
ஓசையெழப் பாடி ஓங்குகதிர் தலைநீவி
நேசப்பறவைகளின் நெஞ்சினித்த கூவல்களால்

காது இனித்திருக்கக் கடும் வெயிலும் திசைமாறி
போதுமெனத் தந்த பொல்லாப்பு நிறுத்துகையில்
ஏதுகவலை யவ்விளம் பிஞ்சுக்  கால்களினால்
ஊதுவிசை காற்றுக் குயர்வரம்பி லோடிடுவோம்

விரிந்தகுளம் வயலில் வீறெழுந்த தாமரைகள்
எரிந்தநிலை தீபமென இயல்பாக மலர்ந்திருக்க
சரிந்தவயற் கதிருள் சட்டென்றோர் தவளையது
இருந்தேஒரு தாவில் எம்பிக் காலூன்றி

துள்ளிநீர்க் குளம்வீழ தோன்றுமலைஅற்புதமாம்
வெள்ளி யலைவிரிய வட்டநிரை யெனமலர்ந்து
தள்ளியது தாமரையைத் தண்குமுதம் அல்லியென
உள்ள முவகையுற ஊர்வசியோ ரம்பையென

ஆடும்நீர்மேடை அழகுமலர் நாட்டியங்கள்
பாடும்சிறு குருவி பண்ணிசைக்கும் ஒருவண்டு
போடும்தவளை இடை புதுத்தாளம் பொன்வயலின்
கூடும் கதிர்நாணிக் கிளுகிளுக்கும் எழில்அழகே


செல்லுகின்ற நாட்களிடை சிலநாள் கதிரறுத்து
இல்லைப் பசுமையென இருக்கின்ற வயல் கண்டு
பொல்லுக் கிழவியுடை பொக்குவாய்ப் பல்லழகாய்
நெற்பயிர்கள் அற்றநிலை நேர்காண நெஞ்சழியும்

கொல்லும் வெயிலிடையும் குடுகுடென நடந்தோடிப்
பொல்லாக் காட்டிடையே போய்மகிழ்வு தேடிடுவோம்
நல்ல தமிழ்கேட்கவென நாவிலினி குளிர் கனியை
சொல்லால் சுடவைத்த சுந்தரனைப் போலேறி

நாவல் மரக்கிளையில் நல்லிணைந்து கீழுறைவோர்
ஆவலெழ வைத்து அருஞ் சுவையும் கண்டிடுவோம்
தாவல் முடிந்தில்லம் தகிப்பில் படுத்திருந்தால்
ஏவல்பேய் பற்றியதாய் என்அம்மை சுற்றிவைப்பாள்

ஈச்சம் காய் பழமாய்ந்து இனிப்பாய் உவர்ப்பென்றும்
கூச்சலிட்டுத் தின்றே குதித்தாடி மகிழ்வதெலாம்
காய்ச்சலெனக் காயுதே கரம்மாறி நிலமயலோன்
ஆட்சியிலே உள்ளதய்யா அன்னியமாய்ப் போய் விடுமோ?

முயலோட முயலின்பின் நானோடி கல்லிடித்து
சுயமாய் விழுந்தெழுந்து  சொரிகின்ற செந்நிறநீர்
பயமின்றி மணல் பற்றிப்  பட்டஇடம் அப்பிவிட்டு
தயங்கி நடை நொண்டி தாவிக்கால் வைத்தேக

குரங்கும் தாவிமரக் கொப்பிடையே தொங்கியெமை
இரங்கும் நிலையாகி இல்லையொரு வாலிவர்க்கு
தரங்கெட்ட இனமோ தடக்கிமண் வீழ்வரென
மரந் தாவும் மன்னவர்கள் மதமெடுத்துக் கூச்சலிட

நடந்தும் திரிந்தோடி நாள்போய் வளர்ந்தவனாய்
விடலை வயதாகி விருப்புடனே கல்விதனை
கடமை உயிர்வாழ்வுக் கானதென்று எண்ணுவதாய்
கடந்த இளவயதில் கற்றவைகள் அற்புதமாம்

இளம்பருவம் ஏடுகளில் ஏற்றறிவு கொள்வதெனில்
களம்நூ லகமென்றே கற்றிடவென் றேகிடுவோம்
அளவையுடன் கணிதமென அவர்கொள்ள என்மனது
நளவெண்பா குறுந்தொகையும் நற்றிணையும் நாடியது

கூட்டலும் கழித்தல்களும் கோணங்களும் பௌதிகமும்
நாட்டின் அரசியலும் நண்பரினம் கற்றிருக்க
பாட்டும் கவிதைகளும் பலநிறைந்த இலக்கியத்தின்
காட்சிக் கனவுகளில் கற்பனையில் நானிருந்தேன்

தமிழே தருவாயா?


தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்
உனையென்றும் பிரியாமை வேண்டும்
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்
திகழின்பத் தமிழான தென்றும்நற்பொலிவாகி
தினமொன்று கனிந்தாக வேண்டும்

சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற
சுகமான உணர்வென்றும் வேண்டும்
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்
அதுகண்டு புகழ்கூற வேண்டும்
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்
உனதன்பு அதைமேவ வேண்டும்
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை
எழுந்தின்ப நதிபாய வேண்டும்

குவை தங்கம் கொடிஆட்சி, குடிவாழும் ஊரென்று
எது தந்தும் பரிசாகக் கேட்டும்
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்
அதிகாரம் அதில் உண்டுபோதும்
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்
கலையன்னை மடிமீது சாயும்
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்
காணென்று மனம்கூற வேண்டும்

ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக
என்றென்றும் பிரகாசம் வேண்டும்
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை
இதனோடு இழைந்தோட வேண்டும்
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி
தருகின்ற கவியாவும் என்றும்
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி
வழுவாத நிலைகொள்ள வேண்டும்

Thursday, May 17, 2012

முதிர்ந்தேன்!


படித்தேன் குடித்தேன் பழமாய்  சுவைத்தேன்
பழகும் விதத்தில் பூவாய்தேன்
வடித்தேன் அளித்தேன் வகையில் இன்பம்
வளர்த்தேன் அன்பில் வளைந்திட்டேன்
அடித்தேன் உடைத்தேன் அறமும் உறவும்
எனத்தான் இல்லா இளமைத்தேன்

குடித்தேன் கவலைகொள்ளா தேனோ 
குறும்பில் வாழ்வை குலைத்தேன், ஏன்

எடுத்தேன் தமிழை இனித்தேன் சொரியும்
எனத்தான் எண்ணி அளித்தேன் சொல்
விடுத்தேன் எதிலும் விளைத்தேன் அன்பை

விரித்தேன் நாளும் வழங்கித்தான்
கெடுத்தே கொள்ளா இயல்பென் கவிதை
குறைத்தேன் எனவும் குறைதோன்றா
கொடுப்பேன் கிடப்பேன் குலவும்தமிழில்
கடப்பேன் துயரம் கனியும்தேன்

இடம்தேன் தமிழின் எழில் தேன்காவென்
றுணர்ந்தேன் எதைநான் மலர்வித்தேன்
விடம்தேன் என்று வெளிவைத்தேனா
விருந்தேன் விரும்பா விளைவும் ஏன்
குடம்தேன்கொட்டக் குழவிக் கொடுக்காய்
குடைந்தே னாயின் குறைவேண்டேன்
கடந்தேன் கனலும் கடலும் குளித்தேன்
கவிதை மழையும் காணுந்தேன்


படர்ந்தேன் ஆயின் பந்தல்மீது
பிணைந்தேன் எனவே கொடியாவேன்
அடர்ந்தே மாவின் அழிகுருவிச்சை
ஆகேன் அகந்தை அகம்கொள்ளேன்
நடந்தேன் எனிலும் நல்லோர் பாதை
நடப்பேன் அன்பே நிலைகொண்டேன்
புடந்தான் இட்டோர் பொன்னாவேன் மண்
போகா இருப்பேன் பிறிதாகேன்
************


    Reply     Reply to author      Forward  

நிலவு சுட்டதோ?

நீதந்த நிலவென்ன சுடுகின்றதே - ஓ
 நீலத்து வான்மதியே - என்
நிழலென்ன தரைமீது விழவில்லையே -அது
 நெஞ்சத்தில் ஓர் சுமையே
பூ தந்த மணமென்ன எரிகின்றதே -ஒரு
  பொல்லாத வாசம் கொண்டே -இந்த
பூமியும் வானமும் சுழல்கின்றதே ஆகா
  பொழுதோபார் இருள்கின்றதே

நா தந்த பேச்சென்ன நடுவீட்டிலே ஒரு
  நாகம் போல் ஆடுவதோ
நல்லோரின் கைமீது பட்டிடவோ அதை
  நன்றென்றும் யார்சொன்னதோ
ஏதிந்த பாராமை என் இறைவா இன்னும்
  எத்தனை தான் உள்ளதோ
தீதென்ற எண்ணமோர் தன்மைகொண்டே -இதைத்
  தீர் என்று முன்னிற்குதோ

தீகொண்ட திக்கிலே தென்றல் எழின் அது
  தேகத்தைச் சுட்டிடுமோ
திரைகொண்ட ஆழியைத் தொட்டேகிடின் அது
 தண்மைகொண் டாகிடுமோ
மா தந்த காயும் கனியாகுமோ - என்ன
 மந்திரம் கூறுவதோ
மலரின்ம ணம்வீச யந்திரத்தை கொண்டு
   புதுவாசம் தூவுவதோ

தீவெந்த காட்டிடைத் தென்றல்தனும் ஏனோ
  தீஊத வீசுவதேன்
தேன் தமிழ் பேசிடும் சொற் கனியை கைகள்
  தீண்டாது காய்கொள்வதேன்
ஆவொன்று நின்றிடப் போவதில்லை கன்று
  அம்மா என்றே யழுதால்
போயன்பு கொண்டிடப் பார்ப்பதுண்டோ அல்ல
  பின்னின்று கொள்வதுண்டோ