Sunday 5 July 2015

தேவைகளை ஈய்பவளே!

கூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன்
கொப்பிருந்தால் போதாதோ
தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத்
துள்ளிசையும் தேவையாமோ
தாவும்சிறு மான்குட்டி தான்குதிக்கத் தாளஒலி
தானுமங்கு தேவையாமோ
ஆவின்மடி பால்கறக்க ஆட்டமென்ன பாட்டிசையேன்
அதன்கன்று வந்திடாதோ

மாவின்கனி பழுக்கவென மந்திரமேன் தந்திரமேன்
மழையிருந்தால் போதாதோ
நாவில் தமிழ் சிறக்கவெனில் நூல்படித்து காணவில்லை
நெஞ்சில் அவள் நின்றதாலோ
பாவின் அடி சந்தமிடப் பார்த்துக் கனம் கொள்வனல்ல
பாமொழிந்த தவளேயன்றோ
தேவியவள்  பார்த்திடுவள்  தீயின்தகிப் பேற்றமுறத்
தீமைகளும் ஒழிந்திடாதோ

பூவினெழில்  சிறப்பென்னில் புகழ்வேது புனைவேது
பூங்காற்றின் வேலையன்றோ
மேவுங்கட லலைநீரும்  மிதக்கும் படகாடிடினும்
மீண்டும் கரை சேர்க்குமன்றோ
தூவும் மலர்கொண்டருளும் தெய்வத்திடம் கேட்டுவிடு
தேவைகளைத் தந்திடாளோ
ஏவுமவள் சொல்லினுக்கு ஏற்றவழி நாம் நடக்க
இன்பமது கூடிடாதோ

தேவியவள் வரமீயத் திகைப்பில்லை விழிப்பில்லை
தேன் தமிழும் ஒழுகிடாதோ
சேவித்தவள் திருப்பாதம் தலைவைத்துத் தொழுதுமெழ
துன்பமெலாம் கரைந்திடாதோ
கேவியழுதாலென்ன கீழ்மைதனை மனங் கொள்ளின்
கிடைப்பதெது கேடுதானே
ஆவியது உள்ளவரை அனல்நீங்கிக் குளிரும்வரை
அவள் மூச்சி னுயிர்ப்பு நாமே

தூற்றுபவர் தூற்றட்டும் துணிவெடுத்து நேர்நின்றால்
துயரழிந்து போய்விடாதோ
காற்றடித்து மரம்வீழல் கற்பனையே நாளுமவள்
கருணைவிழு தாங்கிடாதோ
மாற்றமில்லை அனபினிலே மனங்கொள்ளும் மதிகொல்லும்
மயக்கமது தீர்ந்திடாதோ
ஊற்றிதனை தந்தவளே உன்பெயரில் பாடுகிறேன்
உள்ளதெலாம் நீயேயன்றோ

No comments:

Post a Comment