Monday 19 January 2015

எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்

நதியோடும் திசைதானே மீனோடும்
நடுவானின் ஓளிர்கின்ற நிலவோடும்
கதிகொண்ட காற்றோ தன் திசைமாறும்
கனவொன்றே வாழ்வோடும் முடிவாகும்
மதிகொண்டே உணர்வோடு மயங்காமல்
மனங் கொண்டு நற்பாதை சென்றாலே
புதிதென்ற நல்வாழ்வும் உருவாகும்
புவனத்தில் நம்முள்ளம் இருந்தாளும்

கருவாக இருந்திங்கு புவிகண்டேன்
கனவோடு பெருகும்நற் சுகம்கொண்டேன்
இருகாலும் விழிமூடி யிருள் சென்றேன்
இடருக்குள் நடந்தோடி வலி கொண்டேன்
தெருவீதி கிடந்தும் உள் திமிர்கொண்டேன்
தினவோடு பழிகொண்டு தொலைகின்றேன்
ஒருநாளில் ஒளியொன்றின் திசை கண்டேன்
இன்றும் மெய் உணர்வோடு தொடர்கின்றேன்

சதிகொண்டு பதிகாணும் இல்வாழ்வில்
சமமின்றி மனம்யாவும் துயர்காணும்
விதிகண்டு விளையாடி இடம் மாற்றும்
வேகங்கள் கொண்டுள்ளம் தடுமாறும்,
நதியோடிச் செல்பாதை பலவாகும்
நாளுமிப் புவிமீது காற்றோடும்
புதிதென்ற வழிநூறு தெரிந்தாலும்
போகின்ற ஒருபாதை விதிகாட்டும்

மொழியின்றி இனம் வாழ வழியில்லை
முயலாத செயலுக்கு முடிவில்லை
பழிகொண்ட பாவங்கள் உடன்கூடும்
பார்த்தே எம்வழிசேரும் துயர்காணும்
எழில்கொண்ட மலர்தூவி இறை வேண்டின்
இதயத்தின் நிலை இன்பவழி மாறும்
பொழில்நீவி வருந்தென்றல் பரந்தோடும்
போலும் நான் போகின்றேன் இருந்தாலும்

முதிர்கின்ற கனிதூங்கி நிலம் வீழும்
முற்றுங் காய் வெடித்தே பஞ்செழுந் தோடும்
மதிவானில் பிறையாகி மறைந்தாலும்
மலரங்கு நிலை வாடிச் சோர்ந்தாலும்
கதியன்றி எனதுள்ளம் அலைந்தாலும்
கால் ஓடும், உள்ளன்பு இருந்தாளும்
புதிதாக அலைவந்து புகுந்தாலும்
போகாது மனமிங்கு மிதந்தாடும்

வனமோடும் விலங்காக மனமோடும்
வழிகண்ட உயிர்கொன்று விளையாடும்
சினம் கொண்டு பகையென்று உருவாகும்
சிரங் கொண்டமுடிமீது  கறைபூசும்
தினமோடும் வயதோடு திடமோடும்
திரும்பாமல் முடிவாக உயிரோடும்
தனங் கொண்டு போனோமா தனிபோகும்
தருணத்தை நோக்கிநான் போகின்றேன்

No comments:

Post a Comment