Tuesday 20 January 2015

ஒளி விளக்கு

எத்தனை எத்தனை தெய்வங்கள் கண்டோம் 
அத்தனையும் ஒன்றுதானே
நித்தமும் காலையில் கண்விழித்தால் முன்னே
நிற்பதோர்  சூரியன்தானே
மத்தியில் உச்சியில் மாலயில் காலையில்
மாறிக் கோலம் கொண்ட போதும்
அத்தீயில் காணும் அனல் விளக்கு எங்கள்
அன்பெனும் வாழ்வுக்கொளியே

சத்தியமும்கொண்டு நித்தியமாய் ஆதி 
சக்தியென்று நம்புகின்றேன்
புத்தியறிந்த வரையிலும் கண்டவன் 
பக்தியும் கொண்டதனாலே 
சித்தி கொண்டேயவள் சொல்லுங்கருத்தினை
செந்தமிழில் கவிசெய்தே 
உத்தம இன்பங்கள் காணுகிறேன் இது
ஏற்றிய தீபத்தொளியே

வற்றியும் போவதே யில்லை உலகினில் 
வாழ்வி லன்பெனும் நீதி
கற்றிருந்தும் பயன்கொள்வதில்லை அக
கண்களை மூடிடும் வேளை
உற்றதும் பெற்றதும் உள்ளவலிகளே 
ஓடிச்செல் தெய்வத்தைநாடு
சற்றுப்பொறு கூறு சஞ்சலம்  போக்கிட
சக்திதானே வேண்டும் சக்தி

No comments:

Post a Comment