Monday 19 January 2015

மதியும் விதியும்


நில வொளிர்ந்திட வெண்முகிலதை மூடும் - நல் 
  நினை வெழவொரு விதி யெழுந்ததைச் சாடும்
பலமிருந்திடும் போதிலு முயிர் தானும் - ஒரு
  பழிசுமந்தெமை பாரென உளம் வாட்டும்
நிலமிருந்துமென் வாழ்வதிலென்ன லாபம் - எனும்
  நினை வெழுந்துயிர் விடமனமதும் நாடும்
குலமழித்திடப் போய் முடியெனும் தாகம் - வந்து 
  குமைந்தழியும் அவ் வேளையில் ஒளிவேண்டும்

மதி மறைந்திடக் கதிர் விடியலில் தோன்றும் - நம்  
  மதியிழந்திடும் வேளையில் ஒளிவேண்டும்
புதிதென அடிவான் சிவந்தொளி ஏறும்  - அங்கு
  பூவிதழ் தொடப் போய்வரும் தென்றலோடும்
முதிர் அலைசுனை தனில்சலவென ஓடும் -  ஒளி
  முகமதில் நதி யெனப் புரளு முற்சாகம்
கதியிழந்த தன்  நிலை திரிந்திடும் போதும்  - அங்கு
  காண் மனதிடை ஓங்கிடும் பெரு ஞானம்

அறிவென்ப தெது மனதிடை எழும்சூர்யன் -  அது
  எழ விடிந்திடும் இருள் மறைந்திடும் வாழ்வும்
நெறிகொளும் நெஞ்சில் நிறைவொடு வரும் காலம் -அது 
  நெடுவிரி பெருவானிடை  அளவாகும்
குறிகொண்டு பெரும் அறிவெனும் இறைதானும் - இந்தக்
  குவலயமதில் நினை அறிவினை ஈயும்
பொறிமனதினில் உணர்வுகொண் டுமெந் நாளும் - நீ
  பொலிந்திடும் சுகம் வேண்டி நில் கரம் சேரும்

அறியென மனங்  கூறிடு மொளிதானும் - அந்த 
அருள்தரு மொளி பெரிதெனும் சக்தியாகும்
பொறி பறந்திடும் எரிமலையதன் வேகம்  - இன்னும்
புதுமலர் பெறும் எழிலெனும் மெருகோடும்
எறிதுளிவிரி பேரலை யெழும் ஆழி - அதில்
ஒளிபட அலைமினுங் கிடும்  எழிற்காட்சி
அறியிவை செயும் அருங்குணம் கொண்ட ஆட்சி - அது
அகிலமென் னுமிந்  நிலமிடை வருங்காட்சி

உயிர்தனும் எமதுடலுட னொன்று சேரும் -  நிலை
  உணர்வெனு மொருசூடெழு மசைவாகும்
பயிரென வளர்பாங்குடன் எமையாக்கிப் - பின்
 பறித்திடும் வரை நடந்திடும் செயலாற்றி
வயிற்றிடைப் பசி வெந்திடும் தீயூற்றி -  அதை 
  வழிந்திடும்தேன் சுவைகனி கொண்டும் ஆற்றி
கயிறென அன்புக் கட்டிட ஊஞ்சலாட்டி - அதில்
 கனவொடு  வாழ் கணி எனும்  நிலையாக்கி

ஓளியென நமதறிவினை மிஞ்சும் அறிவே - அந்த 
  உயர்வெழு பெரு வெளி யெனும்பிர பஞ்சம் 
ஒளிர்வது திண்ணம் உள்ளிடை அன்புகொண்டே - அதை
  உயிரென நினை ந்தெழு தொழு நிதமென்றும்
களிகொள்ள நின தரிதெனும் புவி வாழ்வில் - அருள்
   கரம்கொடுஎன  தரும் வரமதைக் கேட்டால்
ஒளிபெறும் நல முயர்ந்திடும்  புகழ் ஞானம் - உடன்
  ஒருபெருமறி வெனும் இறை வரம் நல்கும்

No comments:

Post a Comment