Saturday 8 March 2014

புதிய பாதை

(புதுத்தம்பதியினர் திருமணம் முடிந்து வண்டியில் செல்லும் காட்சி)


காலைத் தூக்கித் தாளம்தட்டிக் காளை இரண்டு முன்னே பூட்டிக்
  காலை நேரம் சாலையோர மோடுது வண்டி -அதைக்
  காண நெஞ்சம் துள்ளுதடா கடகடவென்றே

வாலை யாட்டி மூச்சுமுட்ட வண்டிமுன்னே தோளுயர்த்தி 
  வைத்தடிக்கு நல்லமாடு வேகமுங் கூட்டி -அது
  வந்த காற்றை மோதி வென்று ஓடுது பார்நீ     
சேலை கட்டும் மாதொருத்தி சின்னப்பெண்ணைத் தாலிகட்டிச்
  சேர்ந்துவாழ இரண்டுபேரும் ஆசையில்கூடி அங்கு
  செல்லுகின்ற வண்டி மீது உள்ளதைப் பார்நீ!
மாலை மாற்றிக் கைபிடித்து மங்கை நெற்றி பொட்டுமிட்டு
  மாது காதல் கொண்ட அந்த மன்னவன்நாடிச் - செல்ல
  மாந்தர்கூடி வாழ்த்துன்றார் மங்கலம்பாடி

ஓலைமீது ஓடிவீழும் கூரைசொட்டும் தூறல் போல
  ஓரக் கண்ணிலூறும் நீரைக் கீழே விழுத்தி - அன்னை
  ஊரை விட்டுப போவதென்று வாடும் ஒருத்தி
பாலைப் போலும் உள்ளங் கொண்டு பாதைமீது ஆடிநின்று
  பாட்டுப்பாடி ஓடும் சின்னக் கூட்டமும் கண்டு - அந்தப்
  பேதையுள்ளம் மீண்டுங் காணும் ஆனந்தம் கொண்டு
சோலைக் காற்றும் வீசக்கொப்பில் தொங்கியாடும் மந்திஒன்று
  சுத்தமான தேனடையை உண்டதன் பின்பு  ஆடிச்
  சோர்ந்து போகும்போது  காணும் தன்மையுங் கொண்டு
சாலையோடு போகும்வண்டி சடசடத்த ஒட்டம்மாறிச்
  சற்று சோர்ந்து போனதென்ன வீதியில் இறங்கி - அது
  செல்லும்பாதை கோவில்பக்கம் மண் அணைவீதி


துள்ளும்காளை தாளங்கேட்டு தூரநின்று கூவும் பட்சி
  துள்ளிசைக்குக் கூச்சலிட்டு பாடுதுகத்தி - அயல்
  தோழமை கொண்டான தொன்று கொஞ்சுது முட்டி
முள்ளைத் தன்னில் கொண்டதாளை மூடிஎங்கும் கூரைநீட்டி
  முன்னிருக்க பாம்புஒன்று போகுது சுற்றி  - அது
  மௌனத்தாலே சொல்லும் சேதி நெஞ்சினில் பற்றி
வெள்ளை நீல வான் பறக்கும் விட்ட பஞ்சு கொண்டமெத்தை
  வைத்தபூக்கள் மீதுறக்கம் கொள்வதுமல்ல - இன்பம்
  வாரி அள்ளித் தூவும் வாழ்வு முற்றிலுமல்ல
உள்ளம் உண்மைகாண வென்று அன்னை சொல்லும் சேதிபற்றி
  ஒன்றுகலந் துறுதிகொள்ளும் இதயமும் கொண்டே-  இவர்
  உலகவாழ்வில் பயணம்போகும் உன்னத காட்சி

No comments:

Post a Comment