Monday 1 September 2014

கனவுகளின் காதலன்

எண்ணங்களின் இளங் காதலியே - நீ
எப்போ வருகின்றாய் 
தண்ணிலவின் ஒளி மின்னலிலே - நான்
தவிக்கும் நிலைகாணாய்
உண்ண மனம்கொளும் இச்சையில்லை - என்
உள்ளத் தவிப்பறிவாய்
மண்ணுலகில் என் மனமகிழ்வே - நீ
மறுபடி வாராயோ

வண்ணங்களின் ஓர்வடிவழகே - என்
வாழ்வின் கற்பனையே
கண்களின் முன்னால் வருவதில்லை விழி  
காணாக் கோலமுமேன்
எண்ணங்களின் துயில் இடருறவே அதில்
என்றும் இணைபவளே
மண்ணுலகின் பெரும் மர்மமடி - நீ
மாயை உருவமடி

பொன்மணிகள் போற்கலகலத்தே, - எனைப்
புத்துணர் வாக்குகின்றாய்
புன்னகையை எனில் போர்க்கின்றாய் - பின்
பேசா தழிக்கின்றாய்
தென்பினை உடலில் தருகின்றாய் - கணம் 
தேம்பியும் அழவைப்பாய்
என்னசெய்வேன் நீ இல்லையெனில் - எனை
இதயம் நிற்குமடி

எப்பொழுதும் நீ வருகின்றாய் - பின்
இடையில் மறைகின்றாய்
தப்பெனதோ ஒரு தவறுதலோ - உனைத் 
தழுவிக் கொள்கின்றேன்
முப்பொழுதும் என் கற்பனையில் - உன்
மூச்சை உணர்கின்றேன்
செப்படியேன் துயில் கொள்கையிலே - எனை
சேரத் துடிப்பதென்ன

ஓடும் நதிக்கரை ஓரத்திலும் - மலர் 
உதிரும் சோலையிலும்
ஆடும் கடல் அலைக் காற்றினிலும் - அந்த 
அல்லிக் குளத்தடியும்
நாடுமிருள் வரும் மாலையிலும் - ஏன் 
நண்பகல் நேரத்திலும்
வாடும் மனந்தனில் கனவுகளே  உன்
வண்ணம் எழுகிறதே

நனிசுவை தேனும் இனிப்பதில்லை - நீ
நாடுங் கணங்களிலே
பனியிழை புல்லும் குளிர்வதில்லை உன்
பாசத் தழுவலிலே
இனியொரு வாழ்வே இல்லையடி - நீ
இல்லை என்பதிலே
புனிதமுடன் எனை இணைவதிலே என்
பிணிகள் தொலையுதடி

தனிமையிலே நான் இருக்கையிலே எனைத்
தழுவும் வேகமென்ன 
இனிமையுடன் மனம்நிறைவதிலே என்
இடர்கள் மறைவதென்ன
மனிதன் எனுமுணர் வெழஉடனே - மனம்
மயங்கித் தவிப்பதென்ன
கனியெனவே தினம் இனிப்பவளே - என் 
கனவுகளே சுகமா?

No comments:

Post a Comment