Wednesday 3 September 2014

பனியில் பூக்கும் மலர்கள்





ஆங்கில நாடென்னும் வாழ்வினிலே தமிழ்
ஆவல்பிறக்குது நெஞ்சினிலே
தூங்கும் மதியொளிப் போர்வையிலே சோலைத்
தென்றலெனத் தமிழ் தோன்றுகுதே
மாங்கனி கீறி நறுக்கியிட்டு- அதில்
மாவடு தேனையும் ஊற்றி வைத்து
தாங்கி மடிதனில் தாயிருத்தி உண்ணத்
தந்திடல்போல் தமிழ்காணுகுதே

பூங்கொடி புள்ளினம் பேசுமொலி ஆங்கு
புள்ளி மான் துள்ளுவ தான எழில்
தாங்கிய தாய்த்தமிழ் வீறெழுந்து எமைத்
தீந்தமிழ் பாடிடத் தூண்டிடுதே
மூங்கிலிலே துளை வண்டெழுப்பத் தென்றல்
மோதிடக் கேட்குமிசை யெனவே
தேங்கும் துயர்துளை கொண்டமனம் அயல்
தேசமொழிக் காற்றில் பாட்டெழுதே

வேங்கையதும் வில்லு மீன்கொடியும் இவை
வெற்றிகொண்டே அன்று வையகத்தே
பூங்கொடியின் நறு வாசமெடுத்தயல்
போகும் இளங்காற்றில் துள்ளியதாய்
ஓங்கிடு வானில் முகில் மறைத்த சுடர்
உள்ளிருந்து மெல்ல மின்னுவதாய்
ஏங்கி மனமதும் இன்பமுற்றுத் தமிழ்
எண்ணிப் படபடத்தாடிடுதே

தூங்க முகிலிடை பாய்விரித்து மேலைத்
திக்கில் படுத்திடும் சூரியனும்
ஆங்கிலம் பேசிடும் வீதியிலே பொரித்தாறும்
கிழங்குடை வாசனையும்
பூங்கொத்து ஏந்துகை புன்னகைகள் மொழி
பேசப்புரியாத கைகுலுக்கல்
டாங்கெனும் தேவனின் ஆலயத்தின்மணி
ஓசை எதிரொலி கேட்கையிலே

ஏங்குது உள்ளமும் எண்ணித்தமிழ் இங்கு
எங்கள் குழந்தைகள் என்னசெய்யும்
ஆங்கில மோகம் அழித்தவரின் உள்ளே
அன்பைத் தமிழ்மீது குன்றவைத்து
தேங்கியநாக ரிகச் சுழலில் இவர்
தீமைகள் கொள்ளத் தமிழ் மறக்க
வாங்கிடுமோ உள்ளம் விற்றவரும் மேற்கு
வானவில்லைநம்பி வாழுவரோ
********************

No comments:

Post a Comment