Monday 26 August 2013

வாழ்வீயா வகையேன் ?

சில்வண்டே சொல்லாய்நீ  செழித்தோர் வனத்திடையே
நில்லென் றுனைநிறுத்த நேர்ந்தசெய லுண்டோ, ஏன்
இல்லென்று ஆகுவையென் றெள்ளித்  தமிழினத்தைக்
கொல்லென்று வந்தாரின் கொள்கை சிறப்பதுமேன்

கல்லென்ற உள்மனதைக் கனிந்ததாய்ப்  பூவாக்கி
நல்லெண்ணம் கொண்டேயிந் நாட்டின் நிலையறிந்து
சொல்கொண்டு பேசித்  சுதந்திரமே தீர்வாக்கித்
தொல்லைகொள்ளாதிந்தத் தூயமொழி காப்பார் யார்?

பல்வண்ண மாயைகளைப் பாரெடுத்த தேனடியோ
வெல்லென்று கூறியெழ வீரரையும் கொன்றுவிதை
செல்லென் றவர்வாழ்வைச் சீரழித்துப் போனவரும்
நல்லெண்ணத் தூதாய் நடிப்பதனை நம்பிடவோ

முல்லைக்கு வாசம் முகிலுக்குப் பெய்மழையும்
அல்லலுற ஈழமென் றனைத்துத் தமிழ்மாந்தர்
வல்லமைகொள் காலத்தில் வாள்வீசி ரத்தமெழப்
பொல்லா விதிசெய்தே போயழிய விட்டதுமென்

வல்லூறின் காலிடையில் வாழ்விழந்த சின்னதோர்
மெல்லியவெண் குஞ்சின் மேனிதனைப் போலாகிப்
புல்லாய் விதையாகிப் பூமிக்குள் போய்விடவும்
சொல்லா வதையுற்று சிதந்தழிந்து போகாமல்

பல்லோர் மனம்மாறிப் பண்பட்டும் ஒன்றாகித்
வல்லமை கொண்டே யுள்ளத் திறனோங்கித் தலைதூக்கிச்
சொல்லென்று நீதிதனை சுட்டொளிரும் வெய்யோனாய்
எல்லை யில்நின் றேகேட்க  ஏன் தயக்கம் எழுந்துவிடு

**************

No comments:

Post a Comment