Tuesday 7 October 2014

முருகா ,உருகும் மனம்


 
எத்தனைமுறை நான் சித்தமெடுத்துனைக்
கத்திய ழைத்தாலும்
நித்தம் வருந்துயர் மொத்த மழித்துமுய்
வித்து விடென்றாலும்
முத்தமிழின் இறை சித்திதரும் அருள்
அத்தனையும் ஈந்தாய்
பத்தியுடன் உனை நித்தமும் தொழுதிட
இத்தரை வாழ்ந்திடுவேன்

மத்தை யெடுத்திடல் போலும் கொடும் அர-
வத்தை யெடுத்து மமு-
தத்தைக் கொளக் கடைந்திட்ட போதேஉயிர்
சத்தை அழிக்கும் விடம்
மொத்தமெனத் திரள்கண்டுமே அஞ்சவி-
டத்தை குடித்தவரின்
புத்திரனே மனம் கொண்டருள் கேட்டேன்
புத்தொளிர் வாழ்வீயாய்

பத்தை யெடுத்துடன் பார்விழி நாலிடைப்
பாதியும் சேர்குமரா
வித்தகனில் வெறும் கையுடன் முன்னால்
கத்தலை யெழும்சாக-
ரத்திடை வீழ்ந்தவ னாகியும் தப்பிட
எத்திசை நீந்தலென
இத்திசை என்றொளி முன்னுவந் தீந்தாய்
அத்தனையருள் நினதே

சொத்தென ஏதுமே பொற்கலயம்நிறை          
முத்தொளி இரத்தினமில்
உத்தமனே வடிவேலவனே உனை
நித்தமும் தொழுமென்னை
சுத்தமெனும் மனதோடு நிறைகுணம்
புத்தி தெளிந் துயர
நித்தியமாகிட நிம்மதிகண்டுமின்-
பத்தை யெடுத்திட வை !!

No comments:

Post a Comment