Tuesday 26 November 2013

நினைவே , நீ ஏன் இப்படி?

மனங் கொண்ட நினைவேநீ எதிர் ஆனதேன் - என்
மடிமீதில் உறவாடும் நிலை போனதேன்
கனம் கொள்ள இதயத்தில் சுவடாக்கினாய் - பின்
கனவென்றே தொலைசென்று  மறைவாகினாய்
தனமென்று பொருள்தானும் எதுவேண்டினை - அதைத்
தரவென்று நினைந்தாலும் உரு நீத்தனை
மனதோடும் உறவாடிச் சுகம் தந்தனை- இன்று
மலர்கின்ற விதம் இன்றி மறந்தோடினாய்

இரவென்ன பகலென்ன இனிதாகினோம் என்
இதயத்தில் எழுந்தேநீ எனைஆண்டனை
வரவென்ன நினைவோடு வழி சென்றவன் - இன்று
வரைவின்றி உளம்நொந்து விழிகாக்கிறேன்
பரவும் நல்லொரு காலை பிரிந்தோடுவோம் - நிலம்
பனிகொண்ட புல்மீது நடந்தோடுவோம்
தரவும் பல் லுரைகொண்டு வருங் கற்பனை - அதை
தரம் கொண்டு தரவே என்தமிழ் போற்றினேன்

பனிதூங்கும் மலர்மீறும் எழில் கொண்டவா - எனைப்
பார்க்காமல் மனம்தொட்டு துணை நின்றவா
இனிப் போதும் என்றாலும் உணர்வீந்தனை - இவ்
இகம்மீது ஏன் வாடும்செயல் தந்தனை
புனிதமென் றுயர்வானப் பொழுதாகியும்  - எனைப்
போகின்ற இடமெங்கும் உடன் வந்தனை
மனிதத்தின் உணர்வென்னும் தீ மூட்டியே - அவர்
மகிழ்கின்ற பொழுதேனோ  உயிர்வாங்கினாய்

குளிரென்றே அணைவாய் பின்கணம் மாறுவாய் - என்
குரலாகப் பிணைந்தோடிச் சினம்கொள்ளுவாய்
ஒளிபோன்று மதிகொண்டே புதிர்போடுவாய் - பின்
உறக்கத்தில் உயிர்தூங்க விடை கூறுவாய்
அளி யின்பம் எனவ்ந்து கவி சொல்லுவாய் - பின்
அழிஎன்று பயம்கொள்ள மருண்டோடுவாய்
புளிமாவின் கனிகாணும் சுவை தந்தபின் இப்
புவிகொள்ளும் சுதந்திரம் தனுக் கேங்கினாய்

அதிகாரம் கொண்டங்கே அரசோச்சினான் -  அங்கு
அடிமைக்கு நிகரென்று பணியாற்றுவாய்
அதி காரச் சுவையாகி உயிர் கொல்லுவாய் - பின்
அதைப்போலும் உயிர்கொள்ள அவள்பேணுவாய்
குதித்தோடிக் குணம்கொண்டு குலம்காத்திடும்  - உன்
குறைஏது தினம்மாறிக் கணம் வேறென்பாய்
புதிதென்று எதைஎண்ணிப் போய்வாழ்விலே - அந்தப்
பேய்களின் மனம்தாவிப் பலியாகினாய்?

No comments:

Post a Comment