Tuesday 26 November 2013

அந்தநாள் வந்திடாதோ?

செஞ்சுடர் தோன்றிடக் காலையெனும் ஒரு
திருநாள் விடியாதோ - மனம்
அஞ்சிடும் மாந்தரின் வாழ்வினிலே  ஒரு
அறநாள் எழுமாமோ - விழி
கொஞ்சிடும் மாதரின் காளைகளின் சிறைக்
கூடங்கள் திறவாதோ - இனி
மிஞ்சிடும் நாட்களில் வாழ்க்கை யெனும் அந்த
மென்மலர் பூக்காதோ

பஞ்சினில் தீயிடும் பாதகரின் கரம்
பாழ்படப் போகாதோ - உயிர்
தஞ்சமென் றுன்னிடம் வந்தவரும் தலை
தப்பிட வாழாரோ - உள்
நெஞ்சமதிற் கனல் தீயெழுந்தே யவர்
நினைவது2ம் சிவக்காதோ -  மனம்
துஞ்சிடும் மாதரும் துயர றுந்தே உளம்
தென்றலென் றாகாதோ

கஞ்சியும் கூழெனக் குடித்தாலும் அவர்
கண்ணிய வாழ்வினிலே -  தினம்
பிஞ்சுடன் பூவென உயிர்வாங்கும் எமன்
போதுமென் றேகானோ -  துயில்
மஞ்சமும் இரத்தமும் சதைகளின்றி மலர்
மணந்திடப் காணாதோ - இனி
எஞ்சிய நாட்களில் இருளகன்றே  ஒரு
இளவெயில் தோன்றாதோ

சஞ்சலம் போயும்நல் வீரமெழத் தமிழ்ச்
சுதந்திர இசைபாடி - வண்ணக்
குஞ்சரங்கள் எழில் மாலைதொங்க நற்
கோலங்கள் ஆகாதோ - கொடு
நஞ்சிடை மனமெனக் கொண்டவர்கள் எம்
நற்றமிழ் அன்னைதனை - தன்
அஞ்சுடை வயதினில் கற்றதென்றே அவர்
ஆற்றலில் திருந்தாரோ

செஞ் சிவப்பாகிய வானமதில் அச்
சுந்தர சூரியனும் - ஒரு
கஞ்சமின்றி யொளி வெள்ளமிட எம்
கனவுகள் பலியாதோ
புஞ்சைநிலம் வயல் பூமியெல்லாம் -நிலை
பொன்னெழில் பூத்தாக - உனைத்
தஞ்சமென் றடைந்தோம் தாயவளே எம்
தமிழ் நிலம்  விடியாதோ?

1 comment: