Tuesday 26 November 2013

சேர்ந்து நில் விடிவு வரும்

மலர் தூங்கும் பனி மண்ணில் வீழும் - பூ
மணம் ஏந்தி இளந்தென்றல் அலைந்தோடக் காணும்
புலர்கின்ற பொழுதான யாவும் - நம் 
பொன்னான தாய்மண்ணின் புதுமை என்றாகும்
சிலர்வந்து தாய்நிலம் பற்றி - எம்மைச்
செல்லென்று காட்டிடை சிறையிட்டு வைத்தால்
இலதென்று ஆகுமோ வீரம் - நாமும்
இருந்தழும்  நிலை  காண மீளுமோ தேசம்

கலை ஒன்றித் தமிழ் இன்பம் காணும் -  நற்
கனி போலும் சுவை எங்கள் தமிழீழ வாழ்வும்
உலைபொங்கும் வயல்கொண்ட நெல்லும்  - விதை
உழவர்தம் வியர்வையும் உதிர்கின்ற மண்ணும்
நிலை கொண்ட  எம் தேசம் வேண்டும் -  அதை 
நீர்வார்த்து தருமமென் றளிக்கவா நானும்
மலைபோன்று இடர் வந்தபோதும்-  நாமும்
மறுபடி கொள்வோமோ எமதன்னை நாடும்

சிலபூக்கள் குளம் தன்னில் ஆடும் - அதில்
சிந்தாமல் வண்டொன்று தேனுண்டே ஓடும்
வலைதன்னில் மீன்வந்து வீழும் -அதை
வாரிக் கரைபோட்டு விலைகூறு வோரும்
தலைசீவிப் பூச் சூட அன்னை - அவர்
தாயாம் என் பாட்டியின் கதை சொல்லும் தன்மை
நிலைகொண்ட நாம் வாழ்ந்த  மண்ணை -  இன்று
நீசர்தம் கைவிட்டு மீட்பதே வேலை


தொலை என்று வந்தாளும் பகைவன் - அவன்
துண்டுதுண்டாய் ஆக்கத்  துணைநின்ற உலகம்
மலை போலும் தமிழ் வீர மாந்தர் - இவர்
மாளென நஞ்சிட்டுக் கொன்றதோர் கோலம்
குலைகுலை யாகவே வெட்டி - அவன்
கும்மாளம் போட்டாடக் குவலயம்சுற்றித் 
தலை கீழென் றுருண்டோடும் பூமி  - நாமும்
தருமத்தைக் கேட்டிடிட எவருண்டு மீதி

மொழி ஒன்று தமிழ் எங்கள் அன்னை - இதை
மறப்பதோ ஒன்றாகு,  மதியூகம் கொண்டே
வழி கண்டு சென்றிட வாழ்வாம் -நூறு
வகையான வழிகாணில் பிரிவொன்றே மீதாம்
தெளிகின்ற மனதோடு உறுதி - அதை 
தேர்ந்து நீ சரியான திசைகண்டு சென்றால்
பழி வென்று தீர்வாகி விடியும் - நீயும்
பயமின்றி வாழ ஓர் விடியலும் தோன்றும்.



******************************
**

No comments:

Post a Comment