Friday 19 July 2013

நான் நானேதானா?

அதிமதுரச் சுவையெழவும் அழகிலொரு மலர் எனவும்
அகிலமதில் வாழவிட்டதாயே
பதிமனதில் இதுவெதெனப் பழகுதமிழ் புதியதெனப்
பருவமதைத் தந்தவளும் நீயே
கொதியுலையில் கிடவெனவும் குளிருறையப் படுவெனவும்
குவலயத்தி லென்வாழ்வை யீந்து
விதியதனை விளக்கமின்றி வெறுங்கரத்தில் திணித்துவிட்டு
வேடிக்கை பார்ப்பதுவும் நீயே

மதிபுரள மயக்கங்களும் மனதில் நிழல் மறைவுகளும்
மருளவென உயிரிட்ட தாயே
சதிஎனவும் கதிஎனவும் சஞ்சலத்தி லாழ்ந்துவிட
சரித்திரமும் எழுதிவைத்ததேனோ
புதிதுஎன எதுவுமிலை பொழுதுவரும் அதுவுமெல்லை
புகட்டிஎனை புதுமனிதம் ஆக்கி
முதிர்பருவ மதிற்தெளிவு எதுவுமின்றி இது வெனது
முகமெனவே காட்டி யருள் சேர்த்தாய்

கதிஇதுவோ எனதெனவும் கரமெழுதும் கருவிதனும்
கடைவழியில் நிற்குமிவன் ஏந்தி
துதிதமிழைப் பாடுஎனத் தூரிகைகொள் ளாதவனை
துணி வண்ணம்தீட்டுவென வைத்தாய்
நதியெனவே பொங்கக் கவி நிதியளித்த தேவியுனை
நிறுத்தி ஒரு வரமிதனைக் கேட்டேன்
எதில் இவனும் மூழ்குவது எதை விடுத்தே ஏகுவது
இதை அறியு மாற்றல்தனும் தாநீ

வதியும்பல அறிஞரிவர் வளமுடைய கலைநிதியர்
வருமழகு சோலைதனில் நானும்
எதிலும் மனஇயல்புதனை ஏற்றவிதமாக்கியருள்
இதமுடனே வாழ வழிசெய்வாய்
அதிதொலைவில் இல்லையிவன் அகமுழுதும் நிறைந்தவராம்
அதனில் ஒரு குறையெதுவுமில்லை
பதிலிதெனில் பச்சைவண்ண பாம்பிலுறை வோனையன்று
பார்க்கச் சென்ற குசேலர் உணர்வானேன்

இமயமலை கண்டவரை எனதயலில்காணுகையில்
எதை பொருளென் றெடுத்தியம்பக் கூடும்
சமயமதில் ஏதறிவும்  தனதுடைமை இல்லையெனில்
சற்று மனம்கோணும் குரல் திக்கும்
இமைநழுவும் விழியெதுவும் இலக்கியங்கள் அறிந்ததில்லை
எதையெடுத்து பேசமுனைவேனோ
அமைதி கொளும் நெஞ்சினிலே அவளிருந்துசொல்வதின்றி
அவைதனிலே எழ மனதுகூசும்

No comments:

Post a Comment