Wednesday 31 July 2013

சத்தியதீயே என் அன்னையே

சக்தி சக்தி சக்தி என்று கத்திக் கூறடா - அந்தச்
சத்தியத்தின் ரூபமுந்தன் பக்கம் பாரடா
பக்தி பக்தி பக்தி கொண்டு நித்தமோதடா - உந்தன்
பக்கம் நிற்கும் பாவமோடிச் சித்தியாமடா
எக்கதிக்கும் அன்புகொண்ட அன்னைமேலடா - நின்னை
சக்தியுள்ள நற்கதிக்குள் சேர்ப்பளாமடா
திக்கனைத்தும் ஆளும்தெய்வம் புத்திவேண்டடா அன்னை
தக்க அன்புகாட்டி உன்னை காக்கும் தீயடா

மத்தியன்றி அண்டமேவி நிற்பளாமடா - என்றும்
மாலைகாலை தோன்றும் வீழும் சூரியன்களில்
வைத்திருக்கும் வெம்மை சொல்லில் தேவிதானடா - நின்று
வஞ்சம்தீது வாழ்வில் தீய்க்கும் அன்னை யாமடா
சித்தி மேன்மை செல்வம் யாவும் சக்திதானடா அன்பு
சொத்து வாரிக் கொட்டுமின்ப வாழ்வின் தாயடா
பக்தி யோடு நீநினைக்கக் கற்றுக் கொள்ளடா - உன்னைப்
பார்க்கும் அன்னை சக்தி கண்கள் பாசம் கொண்டடா

நீர்தெறித்த போது நிற்கக் காணும் தண்மையும் - பின்பு
நீவும் காற்று மேனிதொட்டுப் பேசு மின்பமும்
யாரெழுந்தும் செந்தமிட் சொற் பாவிசைக்கவும் - அங்கு
நானும் மெய் மறந்துமாவி சேர்திருக்கவும்
போர்எடுத்த வாழ்வில்போது  போற்றி அன்னையும் - வீரம்
பொங்கும் நேரம் பொங்கப் பொங்கப் புத்துணர்வையும்
மார்பில் வைத்துப் பாட்டிசைத்து தூங்கு மன்னையும் - கொண்ட
மாமகாநம் சக்திகொண்ட மாற்ற மல்லவோ

மத்(தி)யவான மண்டலத்தின் மாபெரும் ஒளி - மேற்கு
மஞ்சள் வண்ணத் தீகுழம்பின் மாலை காணொளி
வித்தைகள்பு ரிந்துகாணும் வெள்ளைத் தீயொளி - இன்று
வேகமென்னி லோடும் சூர்யப்பாதை போம்வழி
சித்தங் கொண்டு சேவித்தன்பு சொல்லு பாரினி - இந்தச்
சுற்றும் பூமி அற்பவாழ்வில்  செல்லும் நோய்பிணி
உத்தமிக்கு உன்மனத்தைப் பக்தியோடளி - இனி
ஓங்கும் வாழ்வில் உண்மைகாணு மில்லை வேறினி!!

No comments:

Post a Comment