Sunday 18 August 2013

தினம் வாடும் மலரே சிரிப்பதெப்படி? (கருவண்டும் மலரும்)



 
(கருவண்டு)
கொட்டி யெழில்விரி சொட்டு மிதழ்மது
கட்டழகு முகத் தேன்மலரே
பட்டெனக் காணிலும் பூவேயுன் மேனியும்
விட்டதென் வாழ்வுமோர் நாள்தனியே
கட்டழ குமேனி பட்டகதிர் வெம்மை
சுட்டதென வரும் மாலையிலே
பட்டு விடமுன்னர் எப்படியோ இதழ்
கொட்டிச் சிரித்துநின் றாய்எதிலே?

(மலர்)
கட்டை கரும்நிறக் கொட்டும் வலியெழத்
துட்ட குணமுங் கொண்டான வண்டே
திட்டமிட்டே யெனைத் தொட்ட பின்புவிட்டே
எட்டிச் செல்லும்நிலை நானறிவேன்
சட்டமிட்டே யுன்னைக் கட்டிவைத் தலில்லை
மொட்டி லிருந்து கண் காணுகிறேன்
வட்டமிட்டே எமைத் தொட்டழித்த பின்பு
சொட்டும் கவலையின் றாவதுமென்

வண்டு:
முட்டு மிதழ்களில் மென்மை தொடுந்தென்றல்
பட்டுவிடச் சொட்டும் தேன்மலரே
எட்டி ரசிப்பதோ கிட்டவந்தே உண்ணா
விட்டுக் கிடந்திட வோதனியே
கொட்டும் மழையுடன் சட்டசட இடி
வெட்டு மின்னல் வரும் வேளையிலும்
சுட்டு விடவில்லைப் பட்டுவிழும் உன்னை
தொட்டதில்லை யெனில் வீண்மதுவே

மலர்:
அட்டமியி லுன்னை அன்னை படைத்தனள்
அத்தனை கும்மிருட்டோ எழிலே
பட்டுமலர்களைக் குட்டை குளமெங்கும்
தொட்ட ழித்தகதை நானறிவேன்
கட்டு மலர்இதழ் விட்ட மணம் மட்டும்
தொட்டுக் கொள்ளுதென்றல் போலில்லையே
பட்டே உளம்கொள்ளும் அச்சம் துயர்தனை
விட்டுமிருப்பது தான்அழகே

தட்டுங் கதவுகள் சொர்க்க மெனிலதைத்
தட்டுவது சரியாம் உயிரே
பொட்டென் றழிவது விட்டவிதி யெனில்
கட்டி யழுதென்ன போமுயிரே
வெட்டு மிருவிழி நட்ட நடுநிசித்
திட்டென் றிருள்தனில் காண்பதுண்டோ
பொட்டு மிட்டபூவை பற்றியிழுத் தென்னைக்
கட்டி மாலையிடல் ஏனறியேன்

கட்டை வயலினில் முற்றும் புதுநெல்லு
வெட்டிக் கதிரடித்தார் பின்னரே
கொட்டும் வெயிலிட்டு சுட்டுலர்ந்த பின்னர்
தட்டிலிட்டுப் பதர் நீக்கிடவே
எட்ட வீசி வருங் காற்றுள்ள போதினில்
விட்டு மிருப்பரோ வேளையதே
நட்டமின்றித் தூற்ற வேண்டுமன்றோ அதை
நாமுங்கொண்டே இன்பங் காணுகின்றோம்

முட்டி வெள்ளம் வரும் நட்டமிடும் இங்கு
முற்றும் பறிதெங்கும் வீசிவிடும்
கட்டி யிழுத்தவை வெட்டி மின்னலிட்டுத்
தொட்ட மரம் சாய்த்துக் கூச்சலிடும்
விட்ட விதியென்ன தட்டியெவர் கேட்கத்
தொட்டதை விட்டுச்சென் றாவதுண்டோ
மட்டும்நீ வாழென விட்டதே நாளெனில்
மிச்சமென சிரித் தாடலன்றோ

******************

No comments:

Post a Comment