Sunday 18 August 2013

எல்லாம் பெண்தானே!

 

மெல்லச் சிவந்திடும் அடிவானம் - அதில்
மேலே எழுந்திடும் கதிரோனும்
சொல்லக் கடிதெனும் பெரும்பாவம் - நிறை
சுற்றும் புவியிடை வர அஞ்சி
வல்லப் பெரிதொரு மலையோரம் - அதன்
வீசும் கதிர்களைப் சிறிதாக்கி
முல்லைப் பூநிறம் காண்முகிலுள் -  தன்
மூளும் தீயினை மறைதெழுந்தான்

வல்லோர் சிறகொடு நெடுவானம் - தனில்
வாழ்வைச் சுவையெனத் தினம்காணச்
செல்லும் குருவியின் விழிதானும் - அச்
செவ்வா னழகைக் கண்டஞ்சி
அல்லல் தருமொரு ஆவேசம் -  தனும்
அடிவான் கொள்ளக் காரணமென்
இல்லைப் புவியென ஆக்கிடவோ -  என்
இடர் நேரும்என விழிமூட

நல்லின் கனிபிழி திராட்சைமது - அதன்
நடுவே மிதக்கும் உருள்பனியும்
மெல்லச் செவ்விதழ் வாய் வைக்கும் - முகில்
மேலைகுமரியும் உண்ணல்போல்
அல்லிக் குளமிடை அணைதென்றல் - அதன்
ஆசைத் தழுவலில் தரு இலைக ள்
சல்லச் சலசல என்றாட  - அச்
சலனம் கண்டே மேற்கினிலே

வெள்ளைச் செறியதி பிரகாச - மனம்
வெந்தே தகித்திடும் வெய்யோனும்
கொள்ளை எழில்தரும் புவிமாதின் -  கண்
கூடிக்களித்திடும் மனதோடு
அள்ளக் குறைவில அதிபோக -  எழில்
அணங்கைக் கண்டவன் அறிவின்றித்
தள்ளி திணறிடத் தொட்டார் போற்-  தன்
தகிக்கும் கதிரால் தொட்டிருக்க

அன்னோர் அழகிய காலையிலே -  விதி
ஆக்கும் வினைதான் பொழுதாக்க
இன்னோர் நாள்வீண் என்றோர் தாள் கை
எடுத்தே கிழிக்கும் நாட்காட்டி
முன்னே நடப்பதும் அறியாத பல
மொழியிற் பிளவுறு நிலமாந்தர்
தன்னைத் தான்பெரி தென்றெண்ணி -  இத்
தரையை உதைக்கும் கால்கொண்டு

இல்லத்துணை நலம்பெரிதாக  - இவர்
எண்ணிக் கொள்ளினும் பிறிதோர்பெண்
செல்லாத் தகவிழந்துருள் காசாய் -  இச்
செகம்மீ தவருயிர் வெறும் காற்றாய்
கொல்லத் துணிவுடன் கைகட்டி - அவர்
காணும் தூய்மையைக்  கெடுத்தவர்கள்
இல்லதரசியின் விழிமுன்னே  - இவர்
எப்படி  காணுவர் இயல்பாமோ

சொல்லத் தகையில வெறும் வாழ்வில் - முடி
சூடும் பூவென அழிதேகம்
இல்லை எனமுடி வுறும் நாளும் - இவ்
வியற்கை எனுங்குறுங் கனவோடும்
நெல்லைத் தின்றதில் வளர்தேகம் - தனில்
நீரை வார்த்திடும் உணர்வேகம்
தொல்லை தருகினும் சுகம்தேடி - இத்
தொலையும்  இருளிடை சுழல்பந்தில்

கண்ணைக் குருடென வைத்தண்டம் அதில்
காணத் தனை மறை சக்தியவள்
பெண்ணிற் சுகமெழ அவள்போற்றிப் பின்
பேசற் கிழிதெனும் கொடுமைசெய
வண்ணக் குலமாம் விழிமாந்தர் தனை
வாழக் கண்டனள் எதனாலே
மண்ணிற் கலியொடு மென்மேலும் இம்
மாதர் குலம்கெட என் செய்வோம்

மென்மைப் பூவெனக் காணிதயம் - அதில்
மின்னல் போலிடை எழுங்காதல்
தன்னைப் பெரிதென மனமெண்ணும் - கடுந்
தகிக்கும் வெய்யோன் செயலாகி
பின்னிப் படர்கொடி மீதுள்ள  - பல
பூவைக் கருக்கிடும் வெய்யோனாய்’
வன்மைப் புயலெனும் வீச்சத்தால் - அவ்
வாழ்வைக் கருக்குதல் எதனாலே

பொன்னும் பொருளும் பூவேண்டாம் = இப்
பூவைதானும் பொன்னேர் காண்
தின்னத் திகட்டா தேனமுதம் - என்
தேவை இவளென் றுயிர்காத்து
இன்னோர் பெண்மற் றினமென்றால்  - அவள்
இம்சைசெய்து சீரழித்து
சின்னப் பாவைஉடல்குறுக - அவள்
சிதைவில் ஆனந்தம் கொள்ளுவதென்.

No comments:

Post a Comment