Sunday 18 August 2013

இரவின் மாற்றம் எழுமானந்தம்



புள்ளினங்கள் ஆர்க்குமெழிற் பூமணத்தில் காற்றிழையும்
வெள்ளிமலை மீதுறங்க வந்த முகில் நீர்பொழியும்
கள்ளமிலாப் பூக்கள்பல காற்றிலுதிர்ந் தாடிவிழும்
வெள்ளிரதம் ஏறிமனம் விண்ணலைந்து போதைபெறும்

தெள்ளெனும்நீ ரோடையதில் திகழுமெழிற் செழுமலர்கள்
அள்ளிவருந் தென்றல்குளிர் ஆக்கிடமெய் குளுகுளெனும்
துள்ளிவிழும் மீன்கள் தமைத் தூயமகள் வதனவிழி
எள்ளிநகை யாடுமென எழுந்தகணம் நீருள் விழும்

கள்ளியதன் முள்ளெனவே காரிகைதம் கூர்விழிகள்
உள்ளிருந்த மௌனமெனும் ஓர்மொழியின் ஓசை தர
நள்ளிரவின் திங்களொளி நாற்திசையும் பனிமலரின்
கொள்ளையிடும் வண்ணம் மனம் கொண்டிருக்கச், செந்தமிழின்

இன்னிசையும் காற்றில்வர எழும் ஒலியில் சிலுசிலுப்பு
புன்னகையைப் போலுதிர்த்த பெருமரங்கள் இலைச்சலனம்
அன்னம் சுனை நீந்துமெழில் அதன் அசைவில் எழுமலைகள்
சின்னஒலி செய்தலைந்து சோர்ந்து விழும் மண்மடியில்

பின்னிருந்து மீண்டுமெழும் பேதமைகொள் சிறுஅலைகள்
தன்னிழந்த வகைநடந்தும்  தவழுமெழில் பொய்கையிலே
மென்னிதழ்கள் வாடிமனம் விரகமுற்ற  தாமரைகள்
என்ன இவன் சென்றகதிர் எங்குளனென் றையமுற

மின்னுமொளித் தாரகைகள் விடியும்வரை கண்சிமிட்டும்
தன்னிலையும் விட்ட இருள் தலைமறைந்தும் உருவழிய
என்னவெனக் கேட்ட சுடர் எட்டியெழும் செவ்வானம்
தன்மையிலே செம்மைகண்டு தாவிஎழும் புள்ளினங்கள்

பொன்கதிர்கள் பூமியினைப் பொழுதணைத்துச் சேதிசொல்ல
அன்னை தமிழ் அருங் குறளும் அவ்வை சொன்ன நல்வழியும்
சின்னவர்சொல் குரலினிக்கத் தென்றலதை வாங்கிவர
தென்னையிடை நீள்இலைகள் இன்னும் மெருகூட்டிவிட

மன்னவரின் ஆட்சியிலே மாந்தர்குறை கேட்டொலிக்கும்
பென்னம் பெரு முரசொலிக்க பேசுங்குரல் விண்கலக்க
பன்னசாலை உள்ளிருந்து பரம்பொருளை வேண்டுபவர்
முன்னொலிக்கும் தெய்வ இசை முழுதெழவே ஆனந்தமே
****************

No comments:

Post a Comment