Sunday 18 August 2013

கனவும் களிப்பும் கற்பனையும்

நான் விரும்பும் உலகம்

இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
எப்போதும் மிளிர்கின்ற இளமை மீண்டும்
கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
ஒன்றாகிக் களிக்கின்ற மாந்தர்கூட்டம்

விரிகின்ற வானத்தைப் போலும் நெஞ்சம்
விளையாடிக் குதிக்கின்ற வெள்ளையுள்ளம்
சரிகின்ற வானத்தை தாங்கும் பூமி
சற்றேனும் பிரியாத நட்பின் சேர்க்கை
புரிகின்ற செயல்நன்மை புனிதக் காட்சி
புலம்பாத நல்லெண்ணப் போக்கில்மாந்தர்
தெரிகின்ற வருங்கால தோற்றம் மின்னும்
தேவையெனில் எதிர்நீச்சல் திளைக்கும் வெற்றி

கலையாத ஏகாந்தம் கன்னித்தீவு
கரைமீது விழுந்தாடும் கடலின் கூச்சல்
அலைநீவும் வெறும்பாதம் அதனால் சில்லென்
றசைகின்ற சுகமேனி அடங்காத் துள்ளல்
தலைமீது கனவாகும் தாகத் தேவை
தாம்தீமென் றாடும்நீர் தாவும் அலைகள்
மலைமீது உறைவேளின் மணிசொல் நாதம்
மகிழ்ந்தாடிக் குதிக்கின்ற மந்திக் கூட்டம்

மலர்ந்தாடும் மகிழ்வோடு மனதைக்கொள்ளும்
மனோ ரம்மியப் பூவாசம் மனதில்நல்லோர்
பலமான உறுதி வீண்போகா தன்மை
பகையின்றி எதிர்காலம் பசுமைத் தேக்கம்
வலதேகாண் இடமென்று வார்த்தைபொய்க்கா
வளம்கொண்ட பேச்சும்நல் வழிகாட்டும்கை
இலதாகும் கொடுஞ்சொல்லும் இளகாநெஞ்சம்
இளமைகொள் புனிதத்தை இழக்காப் பண்பு

குளம்மீது அல்லிப்பூ குதிக்கும் மீன்கள்
கொள்ளின்பப் பாங்கோடு கூடும்வதனம்
உளமெங்கும் பூத்தூவும் இனிதோர் மாலை
இசைந்தோடும் தென்றல்தொட ஏற்கும் உள்ளம்
அளவான அதிகாரம் அணைக்கும் மென்மை
அழகோடு விளைமேனி அருகில் பெண்மை
இளமைக்கு குறையற்ற இசையின் சந்தம்
இதனோடு எழுங்கவிகள் எழுதும்வேகம்

தணலாகிக் கொதிக்கின்ற தங்கச் சூரியன்
தாங்காத வேர்வை நிழல் தருமோர்சோலை
மணல்மீது நடைபோடும் ஆற்றின் போக்கு
மறுபக்கம் ஊற்றுமோர் மலைவீழ் அருவி
கணம் வாழ்வை மறந்தேநின் றாடும் இதயம்
காண்கின்ற இன்பங்கள் காட்டும் தெய்வம்
பிணமாகிப் போகும்நாள் பிறக்கும் மட்டும்
பேசும் இவ்வாழ்வின்பம் பெற்றிடாதோ

No comments:

Post a Comment