Sunday 18 August 2013

குயிலின் ஆசை

சோலைக் குயிலுக்கும் ஆசை பிறந்தது
சுற்றியெங்கும் பேரெடுக்க - அது
காலைக்கதிர் வரக்காற்றில் பறந்தது
காணும்படி ஊர்முழுக்க
சாலை மரத்தினில் சற்று இருந்தது
சோர்வெடுத்தே கால்வலிக்க - அது
மாலைவரை இசைபாடிக் களித்தது
மக்களெல்லாம் பேருரைக்க

நாளும் பொழுதிருள் கொள்ளப் பறந்தது
நாடித்திசை இல்லம் வர- அங்கே
ஆளூம் தனதன்பு தாயும்  இருந்தது
அஞ்சிமனம் நொந்திருக்க
மீளும்,செயலுண்டோ என்று நினைந்தனன்
மேதினியில் நீ பறக்க - அன்னை
மூளும் மனத்துயர் வேண்டியதேன் குயில்
மீளுமன்றோ ஆசைவிட

எங்கு பறப்பினும் சந்தமிடும் சோலை
இந்தகுயில் இல்லமன்றோ - அது
தங்குமிடம் இல்லம் சொர்க்கமெனும் போது
தாயை விட்டும் சென்றிடுமோ
பொங்கும் மனத்துயர் போதுமினித் - தாயே
புன்னகைப்பாய் என்ற குயில்
அங்கம் சிலிர்த்திடக் கொண்டபுகழ் தனும்
அத்தனையும் போதுமென்றாள்

வானிற் பறப்பினும் பட்டமது  மீண்டும்
வந்துதரை இறங்கிடுமாம்
தேனின் சுவைதேடி வண்டு எழும்புகழ்
தேன் திகட்ட வீடு வரும்
தானே தரைவிட்டு நீர்க்குளத்தே வாழத்
தாமரையும் சென்றிடுமாம்
ஏனோ இருப்பது மண்ணென் றுணர்விட
இட்டுவேரை பற்றிடுமாம்.

காற்று மலைவது பூவின்மணங் கொண்டு
கானகத்தே பேரெடுக்க
ஆற்றுவெள்ளம் மலை ஊற்றெடுக்கும் அது
ஆழிசெல்லும் ஊர்பசப்ப
சீற்றம்கொண்டே கதிர் சேர்த்துவைக்கும் அது
சுட்டேஆவி வானிலெழ
மாற்றமில்லை மழைமேகமென்றாகிடும்
மீண்டும், மலைசேர்த்தணைக்க

No comments:

Post a Comment