Sunday 18 August 2013

தெய்வத்தைத் தேடு (ஈழத்திற்காக)

  

தெய்வத்தைத் தேடியும் காணவில்லை - யெந்தத்
திக்கிலும் நல்லருள் தோன்றவில்லை
உய்வதற் கோர்வழி எங்குமில்லை - யெந்த
ஊரினில் தேடியும் பாசமில்லை
செய்வினை சாபங்கள் கேடு தொல்லை - யிவை
சேர்ந்து இடர் தரும் பார நிலை
மெய்வருத்தம் சாவு மேலும் வதை - யிவை
மீளப் பிடித்தெம்மை ஆட்டும்நிலை

கையைப் பிடித்தனல் கொண்ட உலை - தன்னில்’
காயம் எரிந்திடத் தள்ளும் நிலை
நெய்யை மொண்டு ஊற்றிமேலும் தீயை - ஊதி
நீள வளர்த்திடு தீயின் எல்லை
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில்  காற்றும் போகவிட்டால் - அதில்
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ

செந்தமிழ்த் தேனடை பொற்தமிழோ - எங்கள்
தேவை உயிர் கொள்ளும் வாழ்வுடைமை
தந்தவளே, இனி உன்படைப்பைக் - காக்க
தாமதமின்றியே செய்கடமை
மந்த மாருதமும் வீசிவர - மாலை
மாந்தர் சுகமெண்ணிக்  கூடிவர
அந்தர வான்வெளி கண்டிருக்கு - மெங்கள்
அன்னையே ஆனந்தமாக்கிவிடு

கன்னங்கருங் காக்கைக் கூட்டமென - இங்கு
காணுமெருதுக ளோட்டமென
பென்னம் பெருஞ்சோலைப் பூமரங்க - ளிவை
பேசரும் நல்லுணர் வோவியங்கள்
உன்னத ஒற்றுமைக் காணயிவை - சொல்லல்
உன்னரும் வாழ்வினில் காணும்வகை
நன்னெறிகற்று நல்லொற்றுமையில் - மனம்
நாளுமுயர் வெண்ணி வாழ்வையெடு

ஒற்றுமை யற்றவர் வாழ்வினிலே - என்றும்
உண்மைச் சுகந்தன்னைக் காண்பதில்லை
பற்றுமிகக் கொள்ளும் சுற்றமெனில் - அது
பாரில் பிழைத்திடும் முன்னைநிலை
மற்றும் எதுவின்பம் சேர்ப்பதில்லை - ஒரு
மந்திரமில்லை உன் வாழ்வு முறை
கற்றறிவாய் கூடி ஒற்றுமையைக் - கொள்ளக்
காணும் வெற்றி எனும் சக்திநிலை

No comments:

Post a Comment