Thursday 12 September 2013

நான் ஆடும் ஆட்டம்


தில்லையிலாடும் திருபரனே  எந்தன்
தேகமு மாடுதய்யா - ஏது
எல்லை வரையின்றி ஆடுதய்யா அது
என்சுகம் கொல்லுதையா
தொல்லையென நானும் கோடிதர மென
தேவை உரைத்துவிட்டேன் -ஆயின்
வல்லவரைக் காக்கும் சொல்லுனது என்னை
வந்தருள் செய்திடாதா?

அள்ளும் வரை இன்பம் உள்ளதென்று இந்த
ஆடும் உலகினிலே - பலர்
உள்ளம்கழித்திடக் காணுகிறார் அதில்
உள்ளதுன் பார்வை யையா
கள்ளமில்லாத உன் பிள்ளையிவன் மேனி
காணுந் துயர் பெருத்து - நிதம்
துள்ளுவதேன் உந்தன் சுந்தரமென் நடம்
சொல்லித் தருமெண்ணமா

நள்ளிரவு பகல் பேதமின்றி எந்த
நாளும் கருக்கலிலும் -அந்த
தெள்ளென வானம் இருக்கையிலும் அந்த
திக்கில் ஒளிஎழவும்
வெள்ளமிடும் மழைதூறலிலும் மஞ்சள்
வெய்யில் எரிக்கையிலும் - இங்கு
அள்ளி வழங்கிடும் உன்னருளால் நானும்
ஆடிக்களித்து நின்றேன்

எத்தனை இன்பம் இப்பூமியிலே இந்தப்
பக்தனை அன்புடனே - நீயும்
தத்தத் தரிகிட தோம் எனவே எந்தத்
தாளமும் இல்லாமலே
வித்தைஒன்று இவன் மேனியிலே உள்ளே
வைத்தும் என்கோலம் செய்தாய் - நானும்
உத்தரித்தும் தினம் நின்னை தொழுதிவன்
உத்தமன் ஆடுகிறேன்

பூமி அதிர்ந்திட வில்லை ஐயா எந்தன்
பொன்னுடல் ஆடுதய்யா - அதில்
வா,மினுங்கும் உந்தன் மேனிவண்ணம்  தன்னும்
வாய்த்திடல் பொய்த்திடினும்
நீமிதித்தே சுழன்றாடி நின்றால் இங்கு
நிற்கும் புவி நடுங்கும் -ஆயின்
சாமி எனைமட்டும் ஆடவைத்தாய் எந்தன்
சந்தம் இனிமையென்றோ??
*********

No comments:

Post a Comment