Sunday 15 September 2013

எழுத்தாணி அறியாத கவிதை

தேனூற்றும் தீந்தமிழில் தித்திக்கும் கவியூறும்
தொங்கிவீ   ழருவி யூற்றாய்
வானூற்றும் மழைபோலும் வந்தூற்றும் பாறையிடை
வளைந்தோடும் காற்றில் ஊறும்
பூநாற்றம் போலாகிப் பொழிலூறும் அலைபோலும்
புலமைகொள் கவிதை ஊறி
மாமாற்றம் பெற்றுமழை மடையுடைத்துப் பாயுமெனில்
மந்திரம் சக்திதேவி

வில்லூன்றி எய்யம்பு விரைவன்ன சொல்லாக்கி
வீழ்த்தி மனமெய்தல் காணும்
சொல்லூற்றிச் சுவையாக்கிச் சுந்தர மென்தமிழ் பூசிச்
சொர்க்கசுகம் இதுவேயென
மெல்லோடி மேகமிடை மிளிர்நிலவின் ஒளிகொண்டு
மேவியதிற் பொன்னும்பூசி
கல்லாத போதுமவை கண்நோக்கும் போதொளிரும்
காதிலவள் கூறுங்கால் காண்

எழுவதுமென் னிசையாகி இழைவ தவள்சொல் கீதம்
இயல்பிலெழும் குரலுமீந்தாள்
முழுதுமென நினைவோடு முடிவிலதென் றிணைபவளே
முன்காண லற்ற தெய்வம்
வழுவெதனும் உண்டோ இல் வரையுடனும் உண்டோயிவ்
வண்ணம்மது தெளியு மதிஇல்
கிழமனதில் கவிதைவளம் கொள்ளெனவும் ஆக்கியவள்’
குணம் போற்றின் கவிதை ஊறும்

தடையுமில சந்தமெழத் தரணியிலே நிறையொலிகள்
தாராளமாக வைத்தாள்
குடைவானில்மேக இடி குயிலோசை கழுதையழும்
குளத்தருகில் தவளைகூச்சல்
அடை மழையில் கூரையொலி அருவி மலை வீழுமிசை
எழில்வண்டின் ரீங்காரமாய்
அமிழ்தினிய சந்தமெழ  ஆக்கியவள் அவளேநம்
அன்புமனம் கொள்ளவருவாள்

No comments:

Post a Comment