Sunday 15 September 2013

கனிகள் உண்போம்

மணம்வீசும் கனிதூங்கும் மரங்கள்தோறும்
மகிழ்வோடு பறவைகள் கனியைத் தேடும்
குணம்கொண்ட மனிதரோ விலங்கைத்தேடி
கொன்றதைத் தின்றிடக் கூடி ஓடும்
பிணம்மீது ஆசையை விட்டு நல்லோர்
பெரிதாம் நற் கனிமீதும் காய்கள் மீதும்
உணவென்று மனம் வைத்தால் உயர்வதோடும்
உடல் தானும் உணர்விலும் சிறப்பர் தாமே

தீங்கனிகள் தின்றிடத் தித்திப்போங்கும்
தினமுண்ண உடல்கொண்ட தீரம் சிறக்கும்
மாங்கனியோ முக்கனியில் முதலென்றாகும்
மாசுவையில் மேன்மையுற மகிழ்வைத் தாரும்
ஆங்கிவைகள் இனித்திருக்க இன்னாகொள்ளும்
அறிவிலதென் றொருசெயலைச் செய்யலாமோ
தீங்குகளும் எமைச்சேரும் தின்னத் தசைகள்
தீமை எழும் தெரிந்தும்பின் உண்ணலாமோ
 
வேல்கொண்ட முருகனோ நாவற்கனியும்
விதிமாற்றும் கனிநெல்லி அதியமானும்
கோல்கொண்ட அவ்வைக்கு ஈந்தார் இன்று
கொண்டெமக்கு யார்தருவர்? குழந்தைவேலன்
ஞாலமதை சுற்றிவந்து நானே வென்றேன்
தா கனியை எனவேண்டத் தமையன் கொண்டான்
காலமது மாறியதாம் உலகம் வேண்டாம்
கடைவீதி சுற்றிநற் கனியை உண்பீர்!

No comments:

Post a Comment