Sunday 15 September 2013

சூழ்ச்சிகள்

தமிழென்தாயே நானுமுந்தன் மகனா - இன்று
தரணிமீது வாழுந் தகைமைஇலையா
அமுதமென்று கொண்டகாலம் வருமா- எம்மை
அடிப்பவர்க்கு அஞ்சிக் காலம்விடவா
எமது தேச இறைமை மீட்க நினைவா - உள்ளே
இதயம்பூட்டி இனிமை தேடும் வழியா
அமைதிகாணும் பாதை காண எழவா - எம்மை
அடக்குவோனின் கொடியைத் தூக்கி விழவா

எடுத்ததென்ன படுக்கபோடும் விதியா - நாம்
எழுந்து நிற்கக் குட்டுவீழும் பயமா
கொடுத்த தெல்லாம் கொடைகள் என்றுவிடவா - அதில்
குந்திபெற்ற மகனை முந்திக் கொள்ளவா
எடுப்பில் காணும் தோள்கள் கூனி கொளவா - நாம்
எதிரிகாலில் அடகுவைத்த பொருளா
தொடுவதென்ன துயர்கள் என்னும் இருளா - நாம்
தொட்டு வணங்கக் கடவுள் பேரில் இவனா

கெட்ட விலங்கு கையில் தூக்கும் வாளா - அது
கொன்றுபோடப் பார்த்து நிற்கும் உலகா
பட்டுத் துன்பத் துடிப்பைப் பார்க்கும் இகமா - இவர்
பார்வைக் கென்று கட்டும் துணியும் விடவா
பார்த்து பார்த்துக் களிக்கப் புதியதொடரா - நாம்
0பாவி தமிழர் பாடைகொள்ள அழகா
சேர்த்துப் படமும் செய்வன் கையில் பணமா - இனி
சேரும் தொழிலில் புதிய வர்த்தகத் துறையா

கூடிக் கொல்ல கேட்க ஆட்கள் இலையா - நாம்
கொண்ட யாக்கை துடிதுடித்து விழவா
மூடிவைத்த மந்திரம் போடும் உலகாம் - அதில்
மெல்ல தொடங்கும் வர்த்தக மாற்றுத் தொழிலாம்
ஆடிமுடித்தும் அனத்தும் அடங்கும் வேளை - ஓர்
அமைதியென்று போடும் வேடம் பொய்மை
போடி பெண்ணே புண்ய தம்ம சரணம் அதில்
போகும் பலிகள் தெரிந்தும் முற்றும் வழங்கும்

ஆக உந்தன் உயிருக்கான வாழ்வு - அது
அன்னை தேச பூமிமட்டும் எண்ணு
ஆக்கவென் றெழுந்து கத்து கூடு - உன்
ஆண்டதேசம் உனக்குச்சொந்தம் கொள்ளு
வேகவைத்த உலகம் வெள்ளிக்கூடு - அது
வீர ஆட்டை காவுகொள்முன் ஓடு
தேகமெங்கும் ஓடும் இரத்தச் சூடு - அதை
தேவை என்றாலோடிநீ போராடு

No comments:

Post a Comment