Sunday 15 September 2013

காலமெனும் மருந்தே உதவும்

எழிலுற உலகும் இயற்கையென் றுறவும்
எமதிடை படைத்தவளே
அழிவுற உடலும் அதிலொரு உயிரும்
அகிலத்தி லாக்கி வைத்தாள்
பொழிலெழு அலையாய் புரள்நிரை வடிவில்
புதுப்புது அனுபவங்கள்
கழிவுறு மனமும் கவிமர முலவும்
கடையுணர் வுடனீந்தாள்

பழியுறப் பகையும் பருவத்தில் மெருகும்
பழமெனக் கனிமனமும்
வழிஎனப் புதர்கொள் வகைபல தடையும்
விதியென வாழ் வமைத்தாள்
குழிபல நடையும் கொளுமிருள் வழியில்
கிடவெனப் பலசமைத்தாள்
பிழியென இதயம் பிரளய வடிவில்
பெருந் துயருற அமைத்தாள்

வழிநடை நெடுகில் வதமிடும் வகையில்
வாழ்வியல் கொடுமையுடன்
தெளிவில இருளும் திசையறு பயணம்
தெரியென அறிவழித்தாள்
மொழிந்திவர் உறவும் முதிர்கனி மரமும்
முடிவினில் நிலம் விழுமாய்
அழிவுற வரமும் அவனியில் விதியாய்
ஆக்கியும் புதிர்விளைத்தாள்

மலையென திடமும் மனதினில் பெரிதும்
மகிழ்வினைத் தருமிவளே
வலையென அன்பும் வரும் பல உறவும்
வரைந்தொரு வாழ்வமைத்தாள்
நிலையெம தன்னை நெறிகொளும் தந்தை
நியதியென் றெமைக் காத்து
விலையறு வாழ்வை விதைத்தவள் பிரிவை
வேண்டுமென் றெமக் களித்தாள்

கலக்கமும் வேண்டாம் கடுந்துயர் போதும்
கடிதெனும் நிலையிதுதான்
உலகிடை எவரும் இலையென உணரும்
ஒரு பெருந்துயர் சமமே
விலகிடும் கவலை வெளியெனு மண்டம்
விளைத்தவள் காலமெனும்
அலகிடும் மருந்தை அளித்தனள், அருந்த
அதிமன துயரழியும்

No comments:

Post a Comment