Sunday 15 September 2013

இன்னல் முடிவதெப்போ?

நீரோடிப் பூத்த விழி நெஞ்சோடு கொண்டதுயர்
நீங்காது காண்பதென்ன நித்தியமாமோ
ஊரோடி நிலம் பெயர்ந்தும் உறவோடு வாழ்பவரை
உலகோடி வென்றநிலை உண்மைகள் யாதோ
பாரோடி வானில் வரும் பட்டெரியும் தீயின்மழை
போடும்குறி வீழஉயிர் துடிதுடித்தாலும்                   
சேர்ந்தோடும் உலகின்விதி சென்றோடி உதவியதால்
சிரசோடு கொய்ததிலும் சேர்ந்தவராமோ 
        
பேரோடு பிறந்தகுலம் பெருமானம் கொண்டஇனம்
போராடிச் சாயவென விதிகொள்ள லாமோ
யாரோடு பழிசுமந்தோம் யார்வாழ்விற் குடிகெடுத்தோம்
ஊரோடு தீயைவைத்தும் எரித்ததும் ஏனோ?
தேரோடும் வீதியெங்கும் தமிழோடிக் கலந்தநிலை
தடைபோட்டும் ஒதுக்கிவைத்துத் தலைகொள்ளலாமோ
நேரோடி வளர்ந்ததெல்லாம் நிழலோடி மறைத்துவிட
நெஞ்சோடிப் பரந்தஇருள் வெளுப்பதுமென்றோ

மார்போடும் மடிமீதும் மலர்போலும் மழலைகளில்
மணியோசை நாதமெனக் குரல்சொலும்தமிழைச்
சீரோடும் ஒளிசிறந்த செழிப்போடும் வாழ்வமைந்த
செல்வவள நாடுதனைக் கொண்டிருந்தோரை
கூரோடும் வாளெடுத்து கொடுகோர ஈனச்செயல்
கொண்டுயிரும் மண்பறித்த கொடுமையைக்கேட்க
நீர் கங்கைகொண்டவனே நெய்கூந்தல் மாதவளின்
நேர்பங்கன் எம்நிலைத்தை நீவகுக்காயோ

ஆறோடு சேர்ந்த அலை அடித்தோடி யலைந்துகெடும்
ஆனலும் எங்கள்துயர் அந்தங் கொள்ளாதோ
பேறோடும் பெருமைகளும் பெற்றவராய் நாமிருந்தும்
பின்னிருந்து விதிமுடிக்கும் விளைவுகளேனோ
வீறோடு வீரமெனும் வெற்றிதனும் கண்டிருந்தோம்
வெறிகொண்ட இனமுமெழுந்து வீழ்த்திடலாமோ
ஏறோடி உயரஎழு இருந்தோடிப் படுத்தநிலம்
இரவோடு சுதந்திரதை எமக்களிக்காதோ

No comments:

Post a Comment