Tuesday 26 August 2014

கரம்தா தேவி

புழுவின் வதையும் புனலின் அலைவும்
மெழுகின் உருகும் மிதமென் தகையும்
கழுவின் அமர்வும் கரவின் கேடும்
பழுவின் சுமையும் பார்க்கின்றேன் நான்

எழுமின் இடியும் இடரும் தென்றல்
முழுவன் புயலாய் முயலும் விதியும்
தழுவும் தீயின்  தகிப்பும் வாடும்
அழகின் மலராய் அடியே னாமோ  

எழுதும் கோலை எடுக்கும் கைகள்
பழுதும் கொண்டோர்  பயனைப் போலும்
தொழுதும் உள்ளம் துன்பம் குறையா
அழுதும் கண்கள் சிவக்கின்றேன் யான்

விழுதும் அற்றோர் பழமை தருவின்
விழுமோ என்றோர் வியப்பின் தரமும்
உழுதுண் மகனின் உரிமைத் தனமாம்
கழி மண் சேறாய் காணல் தகுமோ

நிழலுமற்றோர் நிலைமை தரவா
அழலின் உணவாய் அழியும்படியா
மழுவும் உடுக்கை மறுகைக் கொள்ளும்
தழலின் விழிகொள் தலைவா எண்ணம்

பழமும் கனியப் பனிமண் வீழும்
கழனிக் கதிரும் காலம் நீங்கும்
வழுவில் கணிதம்வைத்தே அண்டம்
சுழலும் சக்தி சொல்லாய் காப்பாய்

No comments:

Post a Comment