Saturday 30 August 2014

கனவு முடிந்தபோது அவள்..!

அன்று: 

இளங்கனி சுவையும் இதழ்மலர் அமுதும் 
எடுத்துரை மொழியும் இனிதெனும் ஊற்றாய் 
தளதள பருவம் தலை நிறை கேசம் 
திடமுறு விழிகூர் தெறி குளுபார்வை 
குளமலர் விரிவாய்க் குமுதமென் வதனம் 
குட வளை யிடையில் கொடிதெனும் நளினம் 
அளவில சுகமென் றைம்புலன் துய்த்தே 
அகிலமும் நிலையென் றறிவழிந் திருந்தோம் 

இன்று: 
அழகுறு குழலோ பனிமலை வடிவாய் 
விளைகடல் சங்கின் இயல்நிறம் மருவி 
குழலுடை இனிதாய் குரல்தரு மென்மை 
அளவினில் மெலிதாய் அகமிடை தளர 
நிழல்தரு தண்மை நிகரிளம் மேனி 
பொழிலுடை அலையின் பொலிவடிவேந்த 
கழலுறு மணியின் கலகல நாதம் 
முழுதென இலதாய் மெதுநடை பழக 

சுழலொரு புயலின் செறிவலி குறுகி 
தழலெழ மனதை தகித்திட வைத்தாள் 
முழமொரு பூவை முகர்வினில்வாசம் 
எழ முடிவைத்த இயல்பது கனவாய் 
தளதளமேனி தகையிளந் தாடத் 
துளைவிழி யம்பு தொடுவலி குன்றிச் 
சுளை பலகனியின் சுவையிவள் அதரம் 
விளை வெனும் புகழும் விரயமென்றாகி 

தடிகரம் கொண்டே தவழ்ந்திடும் மழலை 
அடியெடு நடையும் அருகிட விழல்போல் 
துடிசெய லடங்கித் துறுதுறு பார்வை 
வெடித்திட முயலும் வெறியுணர் வோய 
கொடியிடை ஒடிவும் கணை மதன் மலரும் 
வடித்திடு சிலையாய் வந்தவள் இன்றோ 
அடித்திட அரவம் அதன் கிடைபோலே 
நடித்திட வைக்கும் நயன் கெடுவாழ்வில் 

எடுத்திட முடிவாய் இளமையை நம்பி 
துடுப்பிழந் தோடம் திசைவிடும் நிலையாய் 
தடுப்பிழந் தலைகள் தொடத் தொலைவாகி 
கொடுத்தோன் பறிக்கும் குயவனின் கலயம் 
அடுத்தெனும் உடலை அமுதுகொண் டேற்றி 
விடுத்து நீரூற்றி வீம்பினில் திழைத்துப் 
படுத்திடக் கனவும் பகலினில் தினவும் 
எடுத்துண்மை அறியா இருளிடை வாழ்ந்தோம் 

வெய்யினில் காய்ந்து விழுமழை புரவி 
பொய்யினில் வாடி புறந்தள்ள ஓடி 
செய்வினை வஞ்சம் திரிந்திடமொழிந்து 
கையினில் களவும் கனிமலர் பேச்சும் 
மைவிழி மாதர் முனைந்தயல் கொண்டு 
மெய்யிடை ஈரம் மிகச் சுவைகண்டு 
தெய்வம் மறந்து திருமலர்ப் பாதம் 
உய்வது விட்டே உலகிடை நலிந்தோம் 

...............................

No comments:

Post a Comment