Friday 13 June 2014

வாழச் செய்வாய்



நீளப்பரந்த வானத்தின் நிர்மலதோற்றத் தொலைவூடே
தாழக்கிடந்த வெண்மேகம் தேகம் சுட்டுச் சிவந்ததனால்
வீழக் கிடந்த வெய்யோனின் வெம்மை தங்கா கன்றியழ
மேளத் திடுதிடு சத்தமுடன் மேகத்திடி மின் னல்கூட்டம்

ஆளப் பிடித்த அரசனவன் அயல்நாட் டுள்ளே விதிமீறும்
வேழப்படையின் விரையோசை விதமென்றாகி மதங்கொள்ள
மீளப் பிறிதோர் நாள்வருவேன் மின்னல் மாயம் பொழிமழையாய்
வீழ்த்தான்நீ வெகுண்டாயோ விடியும்காணென் றொளிர்தீயும்

ஆழக் கடலில் அடிவீழ்ந்தே அனலைத் தீய்க்கும் அறங்கண்டே
மாளச் செய்வதில் முனைவாக மாலை யிருளன் போதையிடு
சூழச் செறிந்த விதங்கண்டு சுற்றிச் சுழன்றே புவியோட
நாளப்போதில் நிலைநோக்கி நடைகொள் மாந்தர் மனையேக

நாளும் பறந்தே இரைதேடி நன்றாயுண்ட பறவையினம்
கீழும் மேலும் திசைகண்டு  கிளர்ந்து விரைந்து மேகுங்கால்
கோளும் செழித்த தீயுலவிக் கூத்தா டும்விண் ணாழத்தில்     
வாழுமுலகில் வாழாது வதைபட்டுழலென் றாக்கியவள்

ஆழும் முறைமை சீர்கெட்டே அநியாயத்தில்  வீழ்ந்தோரின்
தாழும் வாழ்விற் கைதந்தே தருமம் என்றே நிலைகொள்ளா
கூழுங்குடித்துத் திண்ணையிலோ கூடிவீரர் கதைபேசி
வாழத் தந்தாய் வாழ்வென்றே வாசல் புகுந்த வேளையிலே

நீளப் பெருத்த பாம்புகளும் நீள்கூர் கொள்ளும் கொம்புடனே
காளைப் பெருமா டோடிவரக் காலைச் சுற்றும் கருநாகம்
தேளின் கொடுவால் தீண்டிவிட தீயில் உயிரோ டெரிபோகும்
ஆளைக் கொல்லும் உயிர்வாங்கி அனைத்து மொன்றாய் அணிசேரின்

பேழைகுள்ளே பிணமாகிப் போதலன்றிப் பிறிதுண்டோ
தூளைத் தூசைத் துரும்பென்றும் தேவர்குலமாம் இவையாவும்
மூளைத்திறனில் மானிடமும் முழுதும் இயற்கை வளமாக்கி
ஏழை மனதோ டெம்தமிழர் இயல்பென் றிங்கே செய்தாய் ஏன்

பூவைப் பூக்கச் செய்தாய் பின் போதில் வாடும் தகையீந்தாய்
ஆவைக் கன்றென் றன்புடனே  ஆக்கி யணைக்கு மன்பீந்தாய்
மாவைக் கனிகொள் மரமாக்கி மண்ணில் பசிபோம் வகைசெய்தும்
சேவைக்கென்றோ தமிழீந்தாய் செல்லாக் காசாய் இருவென்றாய்

நாவிற் தேனாய் இசைபாட நல்லோர் தமிழைத் தந்தாலும்
பாவை இனமென் றோர்பாதி பட்டுத் துடியென்று டலீந்தாய்
சாவைத் தந்தேன் சதிபோலும் சரிதம் செய்தாய், மானிடனைத்
தேவைக் கென்றோ மானிடனே தீண்டிக்கொல்லும் குணமீந்தாய்

No comments:

Post a Comment