Sunday 30 November 2014

அழகும் இன்பமும்

பெருக்கலும் கூட்டலும் பெண்மைக் கழகு
பேரின ஒற்றுமை  சமூகத்தின் கழகு
வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க் கழகு
வருந்துயர்  நீக்குதல் வீரத்தி னழகு
உருக்கலும் மெருகிடல் பொன்னதற் கழகு
உடுத்தலும் சிறுத்தலும் உடல் தனுக் கழகு
வருந்துதல் நிறுத்திடின் வலியோர்க் கழகு
வாய்மையைப் போற்றுதல் ஆளுமைக் கழகு

கருத்தினைப் பகிர்வது சான்றோர்க் கழகு
கணித்திடல் ஆய்வுகள் கொள்மதிக் கழகு
பெருத்த நற் சோலையில் பூக்கள் அழகாம்
பெய்மழை யும்பாறை கொட்டும் அருவி
கருந்திரள் பற்றிடக் காணடி வானும்
கன்னியின் நாணத்தின் செம்மை யழகே
சரிந்துயர் வானத்து நீடுபறக்கும்
சின்ன எழிற்கோலப் புள்ளினம் யாவும்

நீடுறை வான்தொடு  கோபுர உச்சி
நேர்செல்லும் வெண்முகில் நீந்த லழகே
காடுகள் மாவனக் காட்சிகள் தோன்றும்
கற்பாறை அற்புதம் கண்ணுக்கழகே
போடும் தூறல் வானவில்லும் அழகு
போகும் வாழ்வும் வானவில்லென் றுணர்ந்து
தேடும் தெய்வம் காணத் திக்கெங்கும் ஓடி
தெய்வம் உள்ளதுளெனத் தேர்தலழகு                                                                     
                                                                                               
நாடும் நல்வாழ்வினில் நல்லரசாள
நாமும் சுதந்திர தேசமென்றாக
கூடும் உறவுகள் கொள்வதும் இன்பம்
கொள்கை சிறப்பதும் நேர்மையு மின்பம்
பாடுமிசை மகிழ்வாக்கிடும் இன்பம்
பள்ளிச் சிறுவரின் துள்ளொலி இன்பம்
வாடும் மலர்கலின் வாழ்வினைக்காண
வந்துயிர் கொளும்நாள் ஆண்டுகள் இன்பம்!

No comments:

Post a Comment