Friday 17 May 2013

நடப்பதென்ன??


நடந்த கால்கள்  எங்கே இன்று உடைந்துபோனதோ - இல்லை
உடைந்த உள்ள உறுதி நெஞ்சில் படர்ந்த சோர்விலோ
கடந்த கால திடமும் ஏது முடங்கலாகுமோ - இன்று
மடமை கொண்டு  மனமிழந்து கிடந்து தூங்கவோ

அடங்கலின்றி  வீறுகொண்ட அண்ணன் தம்பி பார் - நீயும்
கடன் என்றோடி கருமம் ஆற்றக் கலங்கி நிற்பதேன்
திடங்கொள் நெஞ்சும் தெளிவு இன்றி மடங்க லாகுமோ - போகும் 
இடங்கள் யாவும் வெறுமைகாண இருக்கலாகுமோ

படங்கள் காணும் வதைகள் தம்மை தடங்கல் இன்றியே - செய்ய
உடந்தையாகும் உனதுமௌனம் தொடர்ந்து காணுமேல்
உடல்கள் மீது குதித்து ஆடும் உதிரம் காண்பவர் - என்றும்
விடங்கொள் பாம்பை விலங்கையொத்த  வெறியர் ஓட்டிடு

திடமும் தீரம் கொண்ட சொந்தம் திரும்பிப் பாரடா - சற்றும்
அடங்கலின்றி ஆற்றல் கொண்ட அண்ணன் தம்பிடா
முடக்க என்று முனையும் சக்தி முந்தியெழ முதல் - நீயும்
நடந்து செல்லு நீதி கேட்டு!  நடந்துசெல்லடா !

குடங்களாக குருதி மீண்டும் கொட்டமுன் எழு எதிரி
நடனமாடல் எங்கள் சாம்பல் மேட்டில் எண்ணிடு
புடங்கள் போட்டு எடுஉன் உள்ளம் புதிதுஆக்கிடு - மீளத்
திடங்கொள் தோளில் வீரம்பொங்க தொடர்ந்து நடந்திடு

No comments:

Post a Comment