***********( விடியலுக்கு சற்றுமுன்)
கள்ளச் சிரிப்பொடு கண் சிமிட்டுமந்த
காரிருள் விண் மிளிர்மீன் - நல்ல
வெள்ளி மணிச்சரம் கட்டறவே மணி
வீழ்ந்து சிதறியதாய் - அதை
அள்ளி யெடுத்திட ஆளில்லையோ எனும்
அந்தர வான்வெளியில் -நிலா
துள்ளி நடமிட துன்பமிட்டே அவள்
தேகம் மெலிந்ததுவோ
தள்ளிக் கிடந்தது தாமரை நீரென
தண்ணிலா வான்.குளத்தில்- அதைக்
கொள்ள வைத்தாரெவர் கேடெழுந்தோ குறை
கொண்டிருக்கக் கதிரும் - பெரு
வள்ளலைப் போலொளி வாரிஇறைத்ததில்
வாடியதோ நிலவும் - அட
கொள்ளென அச்சம் கொடுத்ததுயார் ஏனோ
கோலமதி மறைந்தாள்
நள்ளிரவில் நடந்தோடியதால் நடை
நாளில் மிக அருகி - ஒரு
வெள்ளை முகில்தனும் மெல்லநடந்துமோர்
பிள்ளை வடிவெடுத்தான் - என்
உள்ளமதில் பிள்ளை ஆசைகொண்டே கொள்ள
ஈர்கரம் நீட்டுங் கணம் - அங்கே
குள்ள மனம்கொண்டோர் கானகத்து விலங்
காக வடிவெடுக்க
செங்கமலம் விழி கண்டு மலர்ந்திடச்
செவ்வழல் சூரியனோ - அந்த
பங்கயம் மீதயல் பட்டுமலர்களும்
பட்டொளி வெம்மையிட - பூவின்
அங்க மிதழ் நோக அல்லி புறஞ்சொல்ல
அம்புயம் கர்வமுடன் - போடி
எங்கும்புகழ் கொண்டோர் இப்படித்தான் உந்தன்
எண்ணம் தவிராய் என்றாள்
எட்ட யிருந்தொளி ஆதவனோ அங்கே
என்னைக் கண்டுசினந்தான் - அட
வெட்ட வெளியிடை கற்பனை தேடிடும்
வித்தகர் இங்கு வாரும் - கொள்ளத்
தெட்டத் தெளிவொடு சேதிசொல்வேன்
அதைத் தேடியுமென்ன பயன் -இந்த
வட்டப் பெருங் கோளம் வாழு முலகினில்
வன்மைகள் மெய்யுரைப்பீர்
கெட்டுகிடக்குது பூமியென்றேன் - அந்த
` கீழ்நிலையென்ன சொல்வேன் -இனி
பட்டுத் தொலை என்றே ஆண்டவனும் விட்ட
பண்பினை நானுரைத்தேன் - ஒரு
கட்டுப்பாடு இன்றிக் காணுது வன்மைகள்
காரணம் ஏதறியேன் -கதிர்
சுட்டுப் பொசுக்குவேன் தீயெடுத்தே எங்கே
சொல் லெனத்தான் சினந்தான்
தெட்டத் தெளிவொரு சேதிகொள் பூமியில்
தேசமனைத்து மன்பை - இன்று
விட்டுக் கிடக்குது வாழ்க்கையென்ப தங்கு
வீதியில் பெண்ணினத்தை - வெகு
மட்டமெனக் கொண்டு மங்கை இழிந்தவள்
மாதெம் அடிமையென்றே - பலர்
கொட்ட மடித்துக் குதறுகிறார் அந்தக்
. கீழ்மையை என்னுரைப்பேன்
சட்டமுண்டாம் என்று சொல்லி அவர் செய்யும்
சஞ்சலக் கேடுகளை - தானும்
தொட்டெழுதிக் கவி செய்துவிட்டால் இந்த
சூழ்நிலை மாற்றமில்லை - இது
கட்டுடைத்து கரையின்றி பெருகிடும்
காட்டாற்று வெள்ளமது - இதில்
இட்டவிதி யென்று ஒன்றுமில்லை அங்கு
ஏதுசெய்வ தறியேன்
தட்டிக் கொடுத்தலும் நல்லவரைத் தர்ம
தேவனரு கழைத்து - அவர்
நட்டுவளர் மரம்போல வளமொடு
நாட்டில் நிலைக்க விட்டு -நீயும்
தொட்டு மைகொண்டே கவியமைப்பாய் அந்தத்
தூய கடமை விட்டால் - இடை
சுட்டது சட்டியென் றுன்கரமும்விட்ட
சேதியென் றாகுமன்றோ
நெட்டிமுறித்துக் கை நீளச் சொடுக்கிப்பின்
நேர்முகங் கொண்டவனைக் - கண்டு
தட்டிக் கேட்க எங்கே தர்மமுண்டு நீதி
தூங்குது வேடமிட்டு - அதைச்
சுட்டுத் துயில்கலைத் திட்டபணி கொள்ளச்
செய்வதுன் வேலையென்றேன் - இதை
மட்டும் முடிவதென் றெந்த வழிதனும்
என்னிடமில்லை யென்றேன்
கற்பனையைத் தேடிநான் பறந்தேன் அந்தக்
காற்று வெளியிடையே - அந்த
அற்புத வான்ஒளி சொல்வதையும் மன
ஆழத்திலே எடுத்தேன் -மண்ணில்
நிற்பதுவும் நிலை கொண்டதுவும்
நிலையற்றுத் தவித்திருக்க - எந்தன்
சொற்பதங்கள் தனைக் கற்பனையாம் வண்ணத்
தூரிகை கொண்டமைத்தேன்
No comments:
Post a Comment