Sunday, 27 October 2013

தேடியதும் நாடுவதும் ( 2ம் பகுதி)


***********( விடியலுக்கு சற்றுமுன்)

கள்ளச் சிரிப்பொடு கண் சிமிட்டுமந்த
   காரிருள் விண் மிளிர்மீன் - நல்ல
வெள்ளி மணிச்சரம் கட்டறவே மணி
  வீழ்ந்து சிதறியதாய் - அதை
அள்ளி யெடுத்திட ஆளில்லையோ எனும்
  அந்தர வான்வெளியில் -நிலா
துள்ளி நடமிட துன்பமிட்டே அவள்
   தேகம் மெலிந்ததுவோ

தள்ளிக் கிடந்தது தாமரை நீரென 
  தண்ணிலா வான்.குளத்தில்-  அதைக்
கொள்ள வைத்தாரெவர் கேடெழுந்தோ குறை
  கொண்டிருக்கக் கதிரும் - பெரு
வள்ளலைப் போலொளி வாரிஇறைத்ததில்
  வாடியதோ நிலவும் - அட
கொள்ளென அச்சம் கொடுத்ததுயார் ஏனோ
  கோலமதி மறைந்தாள்


நள்ளிரவில் நடந்தோடியதால் நடை
  நாளில் மிக அருகி - ஒரு
வெள்ளை முகில்தனும் மெல்லநடந்துமோர் 
  பிள்ளை வடிவெடுத்தான் - என்
உள்ளமதில் பிள்ளை ஆசைகொண்டே  கொள்ள
  ஈர்கரம் நீட்டுங் கணம் - அங்கே
குள்ள மனம்கொண்டோர் கானகத்து விலங்
  காக வடிவெடுக்க

செங்கமலம் விழி கண்டு மலர்ந்திடச்
  செவ்வழல் சூரியனோ - அந்த
பங்கயம் மீதயல் பட்டுமலர்களும்
  பட்டொளி வெம்மையிட - பூவின்
அங்க மிதழ் நோக அல்லி புறஞ்சொல்ல
  அம்புயம் கர்வமுடன் - போடி
எங்கும்புகழ் கொண்டோர் இப்படித்தான் உந்தன்
  எண்ணம் தவிராய் என்றாள்

எட்ட யிருந்தொளி ஆதவனோ அங்கே
  என்னைக் கண்டுசினந்தான் -  அட
வெட்ட வெளியிடை கற்பனை தேடிடும்
  வித்தகர் இங்கு வாரும் - கொள்ளத்
தெட்டத் தெளிவொடு சேதிசொல்வேன்
  அதைத் தேடியுமென்ன பயன் -இந்த
வட்டப் பெருங் கோளம் வாழு முலகினில்
  வன்மைகள் மெய்யுரைப்பீர்

கெட்டுகிடக்குது பூமியென்றேன் - அந்த
`  கீழ்நிலையென்ன சொல்வேன் -இனி
பட்டுத் தொலை என்றே ஆண்டவனும் விட்ட
  பண்பினை நானுரைத்தேன் - ஒரு
கட்டுப்பாடு இன்றிக் காணுது வன்மைகள்
  காரணம் ஏதறியேன் -கதிர்
சுட்டுப் பொசுக்குவேன் தீயெடுத்தே எங்கே 
  சொல் லெனத்தான் சினந்தான்

தெட்டத் தெளிவொரு சேதிகொள் பூமியில்
  தேசமனைத்து மன்பை - இன்று
விட்டுக் கிடக்குது வாழ்க்கையென்ப தங்கு
  வீதியில் பெண்ணினத்தை - வெகு
மட்டமெனக் கொண்டு மங்கை இழிந்தவள்
  மாதெம் அடிமையென்றே - பலர்
கொட்ட மடித்துக் குதறுகிறார் அந்தக்
 . கீழ்மையை என்னுரைப்பேன்

சட்டமுண்டாம் என்று சொல்லி அவர் செய்யும்
  சஞ்சலக் கேடுகளை - தானும்
தொட்டெழுதிக் கவி செய்துவிட்டால் இந்த
  சூழ்நிலை மாற்றமில்லை - இது
கட்டுடைத்து கரையின்றி பெருகிடும்
 காட்டாற்று வெள்ளமது - இதில்
இட்டவிதி யென்று ஒன்றுமில்லை  அங்கு
  ஏதுசெய்வ தறியேன்

தட்டிக் கொடுத்தலும் நல்லவரைத் தர்ம
 தேவனரு கழைத்து - அவர்
நட்டுவளர் மரம்போல வளமொடு   
  நாட்டில் நிலைக்க விட்டு -நீயும்
தொட்டு மைகொண்டே கவியமைப்பாய் அந்தத்
 தூய கடமை விட்டால் - இடை
சுட்டது சட்டியென் றுன்கரமும்விட்ட
 சேதியென் றாகுமன்றோ

நெட்டிமுறித்துக் கை நீளச் சொடுக்கிப்பின்
  நேர்முகங் கொண்டவனைக் - கண்டு
தட்டிக் கேட்க எங்கே தர்மமுண்டு நீதி  
  தூங்குது வேடமிட்டு - அதைச்
சுட்டுத் துயில்கலைத் திட்டபணி கொள்ளச்
  செய்வதுன் வேலையென்றேன் - இதை
மட்டும் முடிவதென் றெந்த வழிதனும்
  என்னிடமில்லை யென்றேன்

கற்பனையைத் தேடிநான் பறந்தேன் அந்தக்
  காற்று வெளியிடையே - அந்த
அற்புத வான்ஒளி சொல்வதையும் மன
  ஆழத்திலே எடுத்தேன் -மண்ணில்
நிற்பதுவும் நிலை கொண்டதுவும்
  நிலையற்றுத்  தவித்திருக்க - எந்தன்
சொற்பதங்கள் தனைக் கற்பனையாம் வண்ணத்
  தூரிகை கொண்டமைத்தேன்

No comments:

Post a Comment