Sunday 27 October 2013

காற்றில் வரும் கனவுப்பெண் (சின்னத்திரை)

நேற்று நடந்தாள் இன்று நடந்தாள்
நாளையும் நடைகொள்வாள்
காற்றினில் வீழும் மென்னிலைபோலும்
காலத்தி லசைகின்றாள்
ஊற்றிடும் அருவி போல்மொழி பகர்வாள்
ஒளிவிழி குளமாவாள்
ஈற்றினில் போகும் இடமென்னஅறியேன்
இதயத்தின் துடிப்பாவாள்

ஆற்றென நீர்விழி பொழிகின்றாள் அவள்
அழுகையின் மெருகேற்றி
கூற்றினில் வன்மையும் கொள்ளுகிறாள் இக்
குணவதி நிலைமாறி
தோற்றமும் அன்பெனும் பண்புடையாள்  இங்கு
துயரமே கதியாகி
ஆற்றலும் தீரமும் கொண்டவளோ அதை
அழிவுக்கு துணையாக்கி

சேற்றிலும் வளரும் தாமாரையாம் இவள்
சிறுகுளம் சேறாக்கி
மாற்றமென்றே மனை ஆளுபவள் பெரும்
மாயைகொள் கதைபேசி
வேற்றுமனம் வினையாக்கலென பல
விந்தைகொள் பெண்ணாகி
ஏற்றமும் தாழ்வு மிழைத்தவளாம் அயல்
இன்குடி கெடுக்கின்றாள்

சீற்றமும் கொள்வாள் சினந்தெழுவாள் இவள்
செய்வினை கொடிதாகும்
கூற்றுவன் வேலை கையெடுப்பாள் நிதம்
கொடுமையில் மனையாளும்
பேற்றுடையாள் பெரும் வாக்குடையாள் ஏன்
பிணியொடு நினைவாகி
தோற்றமும் கொள்வாள் ஒளிக்காட்சித் தொலைத்
தொடர்களின் இளவரசி

******************

No comments:

Post a Comment