Tuesday 22 October 2013

ஒன்றெனக்கூடு உரிமையை வெல்லு

மலர்களிலே எத்தனைதான் மணமிருந்தாலும்
மாற்றமில்லை மலர்வதென்ற வகையி லொன்றாகும்
புலர்வதிலே எத்தனைதான் பொழுதுவந்தாலும்
பூமியிலே காலையின் புத் துணர்வில் ஒன்றாகும்
உலர் விழிகள்  வழிந்தழுது துன்பங் கொண்டாலும்
உலகிலெங்கும் இரங்குபவர் இல்லையென்றாகும்
சிலரதிலே துயர்தரவே தீமைசெய்தாலும்
செல்வழியில் நேர்மைகொள்ளு, தீரம் உண்டாகும்

இசைதனிலே பலவகையில் ராகமுண்டாகும்
இதயமதில் உணர்வினிமை என்றுமொன்றாகும்
தசையினுள்ளே தமிழ்கலந்து குருதி சென்றாளும்
தருணமதில் வீரமொன்றே விளைவெனக் காணும்
அசைவதிலே விதியுமொரு பக்கம் நின்றாலும்
அதை வெல்லவே மனது ஒன்றா யாகிடவேண்டும்
வசைசொல்லியே வரும்சிலரால் வாழ்வு துண்டாகும்
வழிமறித்து மதியுரைத்து வென்றிடவேண்டும்

திசைகள்தொறும் வழிகள்பல தனியேசென் றாலும்
செல்லும் வழி முடிவினிலே ஒன்றிட வேண்டும்
விசையுடனே விரைந்து செலும் வில்லம்பு போலும்
விளைவினிலே விடுதலையாம் இலக்கது வேண்டும்
பிசையுமுளத் துயர்களைந்து பெருமை கொண்டாடும்
பிறவிதனை இழிமை செய்வர் புறமுதுகோடும்
கசையடிகள் காணுமுடல் கனிவென மாறும்
காலமெனும் ஒன்றையினிக்  காணுதல் வேண்டும்

நிலைமை வரும் மகிழ்வுடனே நிலமதை மீட்கும்
நேரமதில் நெஞ்சலையில் நீந்திடும் வெள்ளம்
கலை பலதென் றாயிருந்தும் காண்பவர் உள்ளம் 
காட்சிதனைக் காணுகையில் களிப்பதே மிஞ்சும்
குலைகளிலே கனிகள் பல கூடுதல்போலே
குறியைஎண்ணி ஒற்றுமையாய் குழுமிடல் வேண்டும்
இலை குணங்கள் ஒன்றெனவும் இருந்திடும்போதும்
ஏற்றமுடன் தமிழ்நினைந்தே உழை -- நிலம்மீளும்


******************
சென்றாளும் - சென்று ஆளும் உடலை

No comments:

Post a Comment