Tuesday 22 October 2013

தாயே அன்பு கொள்வாய்!

இயக்காத காலும் எழுதாத கையும்
இருந்தென்ன போயென்ன தாயே
தயங்காத நெஞ்சும் தவிக்கின்ற உள்ளம்
தந்தென்ன நொந்தேனே நானே
பயந்தாடும் போக்கில் பகலென்ன அந்தி
பனிபொங்கும் இரவென்ன தாயே
சுயமின்றி ஆடும் சுந்தரன் உள்ளம்
சுகம்தந்து அருள் கொள்வை யாமே!

வயதுண்ட தேகம் வளைந்தாட வென்னில்
வடிவுண்டோ  இளநங்கை போலே
நயன்தாரும் இன்பம் நல்குமோ உந்தன்
நினைவெங்கு எனைகண்டு தாயே
வியந்தோடும் வண்ணம் வினைவந்து தீர்ப்பாய்
விரைந்துவா உயிர் போகும் முன்னே
துயர்கொண்டு பாரில் துடிக்மென் நெஞ்சை
துணைகொண்டு வரம்நல்கு வாயே

செயம் கொண்டவீரன் செல்கின்ற பாங்கில்
சிரம்தூக்கி நடைகொண்ட வாறுன்
மயம்சக்தி என்றே  மனம் மகிழ்ந் தாடி
மலர்கொண்டு துதிசெய்வன் தாயே
கயமைக்கு தேடி கருவென்றே ஆக்கி
கசந்திடும் வாழ்வென்ப வேண்டாம்
புயலுக்குள் பூவாய் புரிகின்ற அன்பை
புறந் தள்ளு பகையென்ப தாமோ

முயலுக்கு தாவும் கயலுக்கு நீந்தும்
கலைசொல்லி வாழென்று விட்டாய்
வயலுக்கு நீரும் வானுக்கு ஒளியும்
வரச்செய்து வாழ்வென்று தந்தாய்
செயலுக்கு காலும் சிறப்பென்று கையும்
சிரிப்பென்று முகம் மலர்வாக்கி
அயலுக்கு நல்லோர் ஆயிரம்செய்தும்
அடியேனை ஏன்  வதைக்கின்றாய்?

******************************
*****

No comments:

Post a Comment