Tuesday 22 October 2013

கற்றல் வேண்டும்!


 
கண்ணிரண்டு காட்சிதனைக் காணக்கொண்டும்
கலையுடனே கல்விதனைக் கற்கும்பேறில்
எண்ணிரண்டு விழிமேலாய் அறியாமைக்குள்
இருள்போக்கிப் பொருள்காண எடுத்தோர்களே
கண்ணிரண்டு நல்லொளியில் காட்சிகண்டும்
கருவிழியும் இமைமூடக் கறுப்பே தோன்றும்
மண்ணிலொளி வேண்டுமெனில் மங்காதென்றோர்
மதிகாணும் சுடரோங்கும் விடியல் வேண்டும்

எண்ணிரண்டு அடியெடுத்து முன்னேவைப்பீர்
ஏடெழுதும் கையாலே எம்மை நாசம்
பண்ணுபவர் கொட்டத்தை அடக்கும்வண்ணம்
பாரினிலே இன்தமிழைப் பரவல் வேண்டும்
தண்ணிலவின் ஒளிபாயத் தாயின்தேசம்
தன்னிலொரு செங்கீத மொலிக்க வேண்டும்
விண்ணிலுறை சக்திதனை வேண்டியின்று
விடிவுக்காய் கண்ணயரா உழைக்கவேண்டும்

பொன்மணிக ளெம்நாட்டிற் பொலிதல்வேண்டும்
பொல்லாதோர் விதிமாற்றிப் புதிதா யாளும்
நன்மதியும் நீளோங்க நாடும் வேண்டும்
நாற்திசையும் எல்லைகளைக் காத்தல் வேண்டும்
பன்மொழிக ளூடுதமிழ் பெருக்க வேண்டும்
பாரில் தலை சிறந்ததாய்ப் பண்பும் வேண்டும்
மன்னனென எம்தமிழர் கையில் செங்கோல்
மறமெடுத்து வழிநடத்தும் மாண்பும்வேண்டும்

அன்னைமடி மீதுதலை வைத்தேகாணும்
அன்புதனும் வேண்டும்நல் லமுதம் உண்டே
பொன்னிலவும் ஒடிவரப் போர்க்கும் மேகம்
புன்சிரிப்பி னோடுகண் டுறங்கல்வேண்டும்
நின் மனதில் அச்சம்விட் டுயரும் எண்ணம்
நேர்மையுடன்  தமிழ்காக்கும் நினைவுஞ்சேர
சின்னவனே சிந்தையிலே ஒன்றாய்க் கூடி
சிறப்போடு  செயலாற்றும் செழுமை வேண்டும்
**********************

1 comment:

  1. இப்படி எல்லாம் ரசிக்க வைக்கக் கூடாது...!

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete