Tuesday 22 October 2013

நடு ஆற்றில் கைவிடுவோமா?

கலையோடு அமுத தமிழ் கற்குமிளஞ் சிறுவர்காள்
கதையொன்று சொல்வேனாம்  கேளீர்
அலைந்தோடி வாழ்கிறோம்ஆழிதிரை போலிங்கு
அமைதிக்கு  ஏன் வாழ்வில் பஞ்சம்
தலைபோகும் நிலையாகத்  தீதெமைக் கொள்ளவே
தாங்கா நிலம் விட்டலைந்தோம்
மலைபோலத் துன்பங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம்
மலைத்துமே  மலைபோலும் நின்றோம்

அழகுசெந் தாமரைகள் ஆடிடும் குளநீரில் 
ஆதவன் மின்னிடும் வண்ணம்
பழகுசெந் தமிழ்கொண்ட பைந்தமிழ்ப் பாவொன்றைப்
பாடுங் குரல், இளங்குயிலின் கீதம்
உழவு செய் துண்டவனோ உல்லாசங் கொண்டயலில்;
ஊய்..ஊய் என்றோட்டி உழுமழகும்
குழவியதன் கூட்டிலே தேன்சொரிந்து கீழுற்ற
குடித்துமே கூத்தாடும் மந்தி

எழும் அழகு ஈழத்தி லிருந்தபோ தெம்வாழ்வும்
இனித்திட இனித்திடப் பாகாம்!
வளவுவயல் தோட்டமுன் வாய்க்கால் வரம்புடன்  
வற்றிய குளத்திலோர் தவளை
முழமெழுந்து பாய்கின்ற முயலோட பாட்டாக
முன்வீட்டில் குழந்தையழும் சத்தம்
முழவொலிக்க வீதிவரும்குமரன்திருக் கைவேலும்
முந்நான்கு கண்பார்த்தே அருளும்

நிலவினொளி வீழ்முற்றம் நிர்மலத்து வானங்கீழ் 
நீட்டியகை சோற்றுருண்டைஅம்மா
கலகலத்துப் பேசுமொலி கனிவான உள்ளமதில்
கனவெழுந்த தூக்கமும் கண்டோம்
மலமலென விடிபொழுதும்  மலர்களதன் வாசமெழ 
மனம்பூத்த நடை, பள்ளிசெல்லும்
பலசிறுவ ரென்றுசிறு பயமற்ற சீர்வாழ்வும்
பளிங்கென்ற நீரோடைகாணும்

இருந்தநிலை ஒன்றுண்டு இன்பமுடன் வாழ்ந்தின்று
எழுந்தபகை அழிந்த நிலம் என்று
உருவழிய உறவோட ஊர்கலைந்து வந்தோமெம் 
இனியவர்கள் உங்களையும் என்று
கரும்பின்சுவை வாழ்வதனிற் கலந்துவிட வைப்போம் நாம் 
கைதவறி நதிவீழ்ந்த மலராய்
வருமொளியை எதிர்பார்த்து அலைசுழலில் புரளும்விதி
விடியலினைக் காணும்நாள் என்று??

************

No comments:

Post a Comment