Tuesday 22 October 2013

சக்திதாயே ! (அருள்வேண்டி)

எண்ணுக்குள் கூட்டல்என்றும்
. எழுத்துக்குச் சேர்ந்தேசொல்லும்
. இயல்பென்றும் ஆக்கும் தெய்வமே
கண்ணுக்குள் ஒளியின் ரூபம்
. கருத்துக்கு மொழியின் ஆக்கம்,
. காலத்தின் போக்கென் றாக்கியும்
பண்ணுக்கென் றிசையும் ராகம்
. பருவத்தில் பெய்யும் மேகம்
 பரவசங் கொண்டோர் மேனியும்
வண்ணத்தில் எண்ணம்கொண்டே
. வாழவும் செய்தே தீமை
. வழிநடந் தேகச் செய்ததேன்

விண்ணுக்குள் எரியும் சக்தி
. வியப்பிற்கு வழியும்கோலி
. வெறுமைக்குள் பொருளென் றானவள்
வண்ணத்து மலர்கள்பூத்தும்
. வளர் குறை நிலவும் ஓடி
. வருடுங்காற் றசையும் மென்மையும்
திண்மைகொள் வகையில் வாழ்வும்
. தெளிந்திடும் தன்மை தீரம்
. தினம் புதுத் தென்பும் தந்தபின்
மண்ணுக்கென் றாசைப்பட்டு
. மடமைகொண் டுயிரைவாங்கும்
. மாந்தர்செய் தேனோ விட்டனை

கண்ணுக்குள் கனவென் றின்பம்
. கற்பனை மகிழ்வென் றுள்ளம்
. காணென்றும் செய்தாய் பின்னரோ
உண்மைசொல்  அழிவென்றாக
. உறவுக்குள் வலிமை சோர
. உரிமைக்குப் பஞ்சம் வைத்ததேன்
பெண்ணுக்குள் கருவென்றாகிப்
. பின்னர் வந்தழுதே வீழும்
. பிணிகொண்ட வாழ்வை ஈந்தனை
அண்மைக்குத் துணையைக் கொண்டு
. அன்புக்குள் மடமைகண்டு
. அழியென்று விதியும் செய்ததேன்

உண்ணென்றே உலகில்பயிரும்
. உயிரென்று மூச்சில் காற்றும்
. உள்ளத்தில் நெகிழென் றுணர்வாக்கி
புண்ணுக்குள் தீயை வைக்கும்
. பெருந் துயர்கொண்டே யுழலும்
. பேரழிவொன்றே உடமைகொள்
அண்மையென் றாக்கி துன்பம்
. அதுகொண்டும் வாழும்போதே
. அறிவற்ற மூடர் அயல்செய்தே
எண்ணத்தில் தீதே கொள்ள
. எட்டாத வெளியில் நின்றே
. ஏன்செய்தாய் எங்கள் அன்னையே

வெண்மைக்கென் றுள்ளம்செய்து
. விருப்புக்குள் நீதி கண்டு
. வியனுறு தமிழை மொழியாக்கி
தண்மைகொள் மனமும்தந்து
. தரணிக்குள் இனமென்றாக்கி
. தவித்தழி அந்தம்கொள்ளென்றே
உண்மைவாய் நஞ்சும் ஊட்டி
. உயர்வென்னும் வேரைவெட்டி
. உலகில் யாம் நிலையாத் தன்மையும்
விண்ணுக்குள் நின்றே செய்தாய்,
. விடிவுக்கென் றொளியைத் தந்தாய்
. வீணுக்கென் றெம்மைச் செய்ததேன்

2 comments:

  1. அருமை... அனைவருக்கும் அருள் புரியட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றிகள் கோடி. மீண்டும் தங்கள் வாழ்த்து உற்சாகம் தருகிறது

    ReplyDelete