Tuesday 22 October 2013

சக்தியே என் அன்னையே

 காலகால மாகத்துன்பம் காண்பதற்கென்றா யிரண்டு
கண்கள் தம்மை நீகொடுத்தனை
கோலமோ இழிந்துகெட்டு கோணலாக ஆடை போர்க்கும்
கேவலம் இத்தேக மீந்தனை
ஆலமே உள் எண்ணமாக ஆடியும்  துடிக்கு மென்மை
அற்புதப் பொறிக்குச் சக்தியே
நீலமே கத்தின் இருப்பு நிர்மலம் என்றான விட்டு
நெஞ்சங் கொல்ல வன்மை வைத்ததேன்?

மேளதாள வாத்தியங்கள் மேடைமீது நாட்டியங்கள்
மேனி கூடவோர் பெரும்விழா
ஆளவந்தவன் அழித்தும் ஆனந்திக்கும் போது இங்கே
ஆக்குவர் அதற்கும் பேரவா
மாளவும் எரிக்கும் நீயே மற்றவர் எரிக்கும் வண்ணம்
மாசுடர் அவ்வானில் வைத்தனை
கேளம்மா எத்திக்கிருந்து கோமகன் எரித்துமூடக்
கேள்வியே இல்லாதுவிட்ட தென்?

ஆளையாள் கலந்துசெய்யும் ஆளணிப் பெருக்கமூடே
அன்பிலார்க் கிங்கேது செய்பணி
வாளையும்தன் குட்டிகாண வாழ்வினை இழக்கு மாமெம்
வாழ்விலும் இதற்கென் றேன்விதி
கேளம் மாமலை யிருந்து கீழ்நிலம்பரந்த மண்ணில்
கோடிகோடி யாய்ப் பரந்தனர்
வாழவாயிவ் வையம்மீது வைத்தனை இல்வீழ்த் தவென்று
வஞ்சகர்க் குத்தீனி தந்தனை

சூழுமா அலைநிறைந்த சோதியும் தினம் உதிக்கும்
சூட்சுமங்கள் செய்த பாரிலே
தாளுமா என்வாழ்வு மின்பம் தாங்குமா இத்தோளும் பாரம்
தூங்குமா என்மேனி என்பதாய்
மீளுமா அப்போன வாழ்வு மீண்டுமே என்காட்சியாகி
மேனியும் சிலிர்த்து வாழ்வேனா
பாளமாய் உடைந்துகெட்டுப் போனதாய் வகுத்ததேனோ
பாரமாவென்  தூறல் பொய்த்ததேன்

தோளும்மார் பிலே தவழ்ந்து தூயநல் மொழிக்கென்றீந்து
தீரமும் கொள்ளென்று ஆக்கினாய்
தேளுமா பெரும் கொடுக்கன் தூங்குமாம் சுருண்டபாம்பு
தேவையா எம்பாதை வைத்தனை
மூளுமா உன்தீயும் எம்மை  மோசமாய் அழித்தவர்க்கு
மூடராம், இல்லாத மூர்க்கரின்
வாழுமா ஜனங்கள் வாழ்வில் வந்துமே இடர் அளிப்பர்
வானிருந்தும் காத்துக் கொள்வையோ

No comments:

Post a Comment