Sunday 27 October 2013

என்னாவேன்

தேடிப் பார்த்தேன்  திக்கெட்டெங்கும்
  தெரியா விடைகொண்டேன்
ஓடிக் கேட்டேன் ஓடைநீரில்
  உலவும் அலை கேட்டேன்
நாடிக் கேட்டேன் நாளும் மலரும்
  நல்லோர் எழில்பூவும்
வாடிக்கீழே வீழுந் தன்மை
 வகையேன் விடைகேட்டேன்

கூடிக் கைகள் கூப்பித் தெய்வக்
  கோவில் உள்நின்றேன்
ஆடித்தெய்வம் முன்னே நின்று
  அருளே விடைஎன்றேன்
மூடிக் காதில் மொழிகள் அறியா
  மௌனத்தில் கேட்டேன்
சாடிப் பார்த்தேன் தெய்வம்மீது
  சலனம் எதுகாணேன்

சூடிக் கொண்டோன் பிறையைக் கேட்டேன்
  சோதிக் கனலாகி
வேடிக் கையாய் உலகம் சுற்றும்
  வெயிலை விடைகேட்டேன்
பாடிக் கேட்டேன் பாரில் தோன்றும்
 பருவந் தனைக்கேட்டேன்
சோடிக் குயிலைக் கேட்டேன் சுற்றும்
  காற்றை விடைகேட்டேன்

நானாய் இன்றும் கண்டேன் நாளை
  நானும் என்னாவேன்
தேனாய் மொழியும்பேசித் திடமும்
   திகழும் மனங்கொண்டேன்
கூனாய் குறுகிக் கோலும்கொண்டு
  கிடந்தும் உழன்றேன்பின்
தானாய் எரியும்தீயில் வேகுந்
  தருணம் என்னாவேன்

நெஞ்சில் கொண்டேன் நினைவாம் ஆற்றல்
  நிர்க்கதி யாய்போமோ
அஞ்சா வீரம் அகந்தை தோல்வி
  அலையும் சிறு உள்ளம்
கொஞ்சல் கோபம் கேளாத் தன்மை
  கொண்டோர் பிடிவாதம்
பஞ்சம் பாடு பலவும்கண்டேன்
  பனியென் றழிவாமோ

வெள்ளை நிறமும் விடிவான் செம்மை 
  விளங்கும் ஒளிகண்டேன்
கொள்ளை எழிலார் குழலாள் மங்கை 
  குலவும் சுகம் கொண்டேன்
பிள்ளைமேனி பிறப்பும் கொண்டோர் 
  பிணைப்பும் இவையாவும்
தெள்ளத் தெளியும் வகைபோம் இடமும்
  தெரியாப் போமாமோ

எங்கும்மௌனம் இழைந்தோர் அமைதி
  எதுவும் நிசப்தம், வான்
தங்கும் கோளத் தரையும் மௌனத்
  தணலைச் சுழன்றோடும்
கங்குல் இடையே கனத்தோர் வெடியும்
  கரையும் ஒளிவெள்ளம்
மங்கும் வகையும் கண்டேன் எண்ணம்
  மயங்கும் விடைகாணேன்

மனங்கொள் நினைவும் மதியும் ஆற்றல்
 மகிழ்வும் கண்டோம் நாம்
கனங்கொள்  உணர்வும் கற்பனை கொண்டும்
  காலம்பல ஆண்டாய்
சினம்கொள் விடிவும் சீற்றம் என்றே
  சேர்த்தே சிறுவயதின்
நினைவும் கொண்டோம் நீங்கும்போதில்
  நெஞ்சம் என்செய்யும்

No comments:

Post a Comment