Tuesday 22 October 2013

. இளைய சந்ததியே

மனமெங்கும் குதித்தாட 
...மகிழ்வோடு நிதம்காணும்
...மணிவண்ண ரூபங்களே - உங்கள்
இனமிங்கே உயிரோடு   
...இயல்பான வகைவாழ
...இகம் மீது உதவுங்களே - எங்கள்
சனம் அங்கம் தனையீந்து 
...தலையின்றி உடலின்றி
...சருகாகும் குறை வாழ்விலே - நாமு
கனமோடு உயர்வான 
...சமுதாயம் உருவாகக்
...கனவொன்றை நிசமாக்குங்கள்

பொழிலாடும் மலரோடு 
...புதிதாக வரும்காற்று
...பொழுதோட உறவாடிடும் - அதில்
எழிலோடு மயிலாட 
...இசைபாடும் இன்பங்கள்
...எமைக்கூடி மகிழ்வாக்கவும் - வெறும்
பழியோடு காண்போரின் 
...பரிதாப நிலைநீங்கி
...பாரெங்கும்  வளம் கொள்ளவும் - எமை
விழிநோக்கி உயர்வென்ற 
...வகையிலோ  ரிடம்தந்து
...விடு என்று  வாழ்வீந்தனை

விழுந்தோமின் றெழுவேமா 
...விதியென்று கொள்கின்ற
...வெகுவான துயர் மாற்றவும்
அழுகின்ற மனம் துள்ளி 
...அகமோடு புறம்யாவும்
...ஆனந்தம் குதித்தாடவும்
பொழுதன்று தமிழெங்கும் 
...புகழோடு பெருமையிற்
...பொலிந்தாடும் வளம் கொள்ளவும்
முழுதான தொருநல்ல 
...வழிகண்டு வாழ்வோரின்
...மூச்சினை மீட்டிடுங்கள்

தமிழ் பேசிப் பிறந்தோமே 
...தமிழ் கூறி வளர்ந்தோமே
...தமிழ் கற்று உயர்வாகினோம் -இன்னும்
தமிழென்ப அழிவில்லை 
...தரம்கொண்ட மொழியென்பர் 
...தன்னம்பிக் கைகொள்ளவும் -என்றும்
இமைமூடி இதயத்தில் 
...எமையாளும் பெருந்தீயின்
...எழும் சக்திதனை வேண்டிடு - இன்றே
அமையுமுன் பெருவாழ்வில் 
...ஆற்றலும் உயர்சக்தி
...அதை கொண்டுன் மண் மீட்டுக்கொள் 

No comments:

Post a Comment