Tuesday 18 February 2014

அணைப்பில் விளைவது துயரா மகிழ்வா


பாரணைக்க  நதிகுதித்துப் பாயுதம்மா ஒரு
  பாவை யென்று நீரணைக்கப் பாயுதம்மா
வேரணைத்த நிலம்நெகிழ்ந்து விட்டதம்மா - அதில்
 வீறெடுத்துச் செடி வளர்ந்து காணுதம்மா
ஏரணைக்கத் தான்புரண்ட கழனிமணல் - இன்று
  ஏற்றமுடன் நெல்சுமந்து நிற்குதம்மா
யாரணைக்க  நாம்பிறந்து வந்தவரோ - பட்ட
   நாட்கள்தனும் ஊதி அணைத் தால்விடுமோ?

போரணைக்க வாழ்வணைந்த பூமியதில் - ஏன்
 போதணைத்த அன்னை கையிற் போய்க்கிடந்தோம்
மாரணைத்துப்  பால் குடித்த அன்புதன்னும் - இன்று
  மாறியெம்மை தீதணைத்த காட்சியு மேன்
ஊரணைக்கும் தீகொளுத்தி விட்டவர்கள் - தம்மை
  உலகணைத்துக் கரம்கொடுத்த போதிலெம்மை
பாரணைத்து நீ கொள்ளாது விட்டதென்ன - இந்தப்
 பாவம் என்னும் விதியணைத்த கோலமென்ன 

நாரணைத்த பூகழுத்தில் ஏறுமம்மா - உச்சி
ஞாயிற்றின் கதிர் அணைப்பின் வீழுமம்மா
சேரணைத்துக் கொள்கரத்தி னாலேயெம்மை - அந்தச்
சேதம்வந்து வாழ்வணைக்கும் முன்னதாயெம்
பேரணைக்கும் புகழ் இனிக்கும் போதில்லாமல் - என்றும்
பூஇருக்கும் போலுமென்மை யன்பு கொண்டே
நேரிணைந்து வாழ்வதன்றி வேறு வகை - இங்கு
நீயிணைத்துச் செல்லல் என்ப  விட்டிடம்மா

கூறனைத்துச் சேதிதன்னும் கொண்டு எம்மை - இக்
கூடிணைத்துப் பூமிவிட்ட கோலமென்ன
ஆறணைத்துக் கொள்ள ஆழிபோவதன்ன - எங்கள்
ஆற்றல்கொண்ட உயிரணைத்த சாவுகளும்
நீறணைந்துத் தீயழிக்க விட்டதுமேன்  - எம்மை
நேரனைத்துத் துன்பங்களும்  சார்வதுமேன்
சேறணைத்த மண்விளைந்த பூக்களைப்போல் நாமும்
சீரணைத்த வாழ்வு காணச்செய்வை யம்மா

No comments:

Post a Comment